Friday, February 22, 2008

அஞ்சாதே - திரைப்படப் பார்வை


மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று சொல்லிக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சத்யாவும் (நரேன்) மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் போலீஸ்காரர்கள். துரத்தும் வாழ்க்கைச்சூழலில் சத்யா SI தேர்வில் (குறுக்கு வழியில்) தேர்ச்சியடைய, கிருபா தோல்வியடைந்து இலக்கின்றி குடித்து அலையும் நிலைக்கு வருகிறான்.


பெண்களை கடத்திவந்து, கற்பழித்து, பணம் பறிக்கும் கும்பலாக லோகுவும் (பாண்டியராஜன்), தயாவும் (பிரசன்னா) இருக்கிறார்கள். இவர்களுடன் தன்முனைப்பின்றி கிருபா இணைகிறான். உச்சபட்சமாக இவர்கள் போலீஸ் IG யின் பெண்களை கடத்துகிறார்கள். அதன் பின் போலீஸ் இவர்களை எப்படி வளைக்கிறது... தயா மற்றும் லோகு என்ன ஆனார்கள்... தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா என்ன செய்கிறான்... இப்படி பல கேள்விகளுக்கான பதிலை எதார்த்தத்துடன் தருகிறது படம்.


நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னா அனைவருக்கும் அற்புதமான களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மூவரும் அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் அழகு. “அழகிய தீயே...” படத்தில் பார்த்த பிரசன்னாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் விதத்தில் மிகவும் தைரியமாக வி்ல்லன் பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார். நீண்ட குர்தாவும், வலது கையில் பெண்கள் ஸ்டைலில் கடிகாரம் கட்டிக்கொண்டு அடிக்கொருமுறை கையைத்திருப்பி மணிபார்க்கும் மேனரிஸமும், வழிந்து தொங்கும் தலைமுடிக்கிடையே சாதாரணமாக ஆனால் கூர்ந்து பார்க்கும் பார்வையுமாக அனைத்து பாராட்டுகளையும் தட்டிச்செல்கிறார் பிரசன்னா. அவருடைய இளமையான குரல் இந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சி. இனி இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.


படத்தின் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை பரபரப்பாக வரும் நரேன் சத்யா பாத்திரத்தில் ஜோராக பொருந்துகிறார். ஓவர் ஆக்டிங் போலத்தெரியும் அவருடைய சில பாடி லாங்வேஜ் உறுத்தலாக இருந்தாலும் போகப்போக அது நமக்கு பழகிப் போகும் என்றே தோன்றுகிறது. மலையாள வாசனையோடு அவர் பேசும் தமிழும் அப்படியே. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னை முழுமையாக தந்திருக்கும் நரேன் பாராட்டிற்குரியவர். தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் வரமாட்டேன் என்று சலம்பும் போதும், தியேட்டரில் “தவமாய் தவமிருந்து..” ராஜ்கிரணைப் பார்த்து விட்டு... “இவன்தாண்டா அப்பன்...” என்று ரவுசு விடும்போதும் நம்மையும் ரசிக்க வைக்கிறார்.


கிருபா எனும் பரிதாபத்துக்குரிய பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாயிருக்கும் அஜ்மல் ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவு. கிருபாவின் தங்கையாக வரும் விஜயலட்சுமிக்கும் கதையோட்டத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை பயன்படுத்திக்கொண்டிருப்பதும் சிறப்பு. குருவி என்கிற பாத்திரத்தில் வரும் கை ஊனமானவர் (பெயர் தெரியவில்லை), கால் ஊனமான இன்னொருவர் (அவர் பெயரும் தெரியவில்லை), பாண்டியராஜன், பொன்வண்ணன், MS பாஸகர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற அனைத்து பாத்திரங்களும் தேவையறிந்து படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. அனைவரின் பங்களிப்பும் பிரமாதம்.


படத்தின் கேப்டன் மிஷ்கினுக்கு ஆளுயுர பொக்கே கொடுத்து பாராட்டலாம். இந்த திரைக்கதை மிகவும் அற்புதமாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொய்வே ஏற்படாமலும், அதே நேரம் விலாவரியாகவும் சொல்லப்படும் காட்சிகள் மிகப் பிரமாதம். ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு, தேர்ந்த தேடலுக்குப்பின், அந்த சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக்கவர்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதட்டத்தில் நம்மை கடைசிவரை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைகிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளும் லாஜிக்கோடு அமைந்திருப்பது மிகச்சிறப்பு.


சுந்தர் சி.பாபுவின் பாடல்களை தியேட்டரில் தம்மடிக்க வெளியே போகாமல் அமர்ந்து கேட்கலாம். படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சூழலிலும் அந்த தன்மைக்கேற்ப செயல்படுகிறது. படத்தின் முதல் காட்சி, தரையோடு தரையாக கேமரா சுழலும் காட்சி என தன் இருப்பை பறைசாற்றுகிறார் ஒளிப்பதிவாளர்.


“எனக்கு ஒரு ஃபுல் ஒரிஜினல் சரக்கு வேணும்...” என பிரசன்னா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நம் டாஸ்மாக்கில் எல்லாம் டூப்ளிகெட் சரக்குதானோ என்ற அங்கதக்கேள்வி எழுகிறது. குறுக்கு வழியில் SI தேர்வில் தேர்ச்சியடைவதற்கு சத்யா செய்யும் முயற்சிகளும் அந்த செயல்களும் மிகவும் அங்கதத்தோடு நம் சமூக அமைப்பை சாடுகின்றன. ரோட்டில் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கிடக்கும் ஒருவனை காப்பாற்ற சத்யா செய்யும் முயற்சிகளும் அதன் விளைவும் அச்சு அசல் உண்மை நிலையை அப்பட்டமாக காண்பிக்கின்றன. IG யின் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டால் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்யும்... சுற்றி நம்மை போலீஸ் வளைக்கும் சூழலில் அதிலிருந்து தப்ப சமூகவிரோதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்... இப்படி பல சூழ்நிலைகளை ஆய்ந்து நம்பும் விதத்தில் காட்சியமைத்திருப்பது சிறப்பு.


மிகவும் அரிதாக வரும் தரமான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும்படியான விஷயங்களும், புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளும் படத்தை மீண்டும் பார்க்கத்தூண்டும்.

இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படத்தை எந்த கேள்வியும் கேட்காமல் பார்க்க நான் ரெடி. That is what the promise he is providing in this film. NOT TO BE MISSED MOVIE.


பின்குறிப்பு : இந்த படம் பார்க்கச்செல்லும் அளவு மொக்கை போட்ட நண்பர் முத்தையாவுக்கும், எந்தக்கேள்வியும் கேட்காமல் “சரி போகலாம்...” என்று சொல்லி படம் பார்த்து சிலாகித்த நண்பர் ராகவனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

7 comments:

  1. மாப்பு...

    என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே....

    ReplyDelete
  2. good nithya....n,
    see u after seeing movie..

    Yours
    maximus

    ReplyDelete
  3. தெளிவான நடையில் நல்ல விமர்சனம்…

    தினேஷ்

    ReplyDelete
  4. max, முரளிகண்ணன், தினேஷ்...

    உங்களின் வருகைக்கும் அன்பான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...

    நித்யகுமாரன்

    ReplyDelete
  5. இந்தப் படம் Mystic River என்ற பிரபல ஆங்கிலப் படத்தின் காப்பி ஆகும்.

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar