Saturday, August 30, 2008

குருவி குருவி குருவி அடிச்சா......!


சமீபத்தில் சத்யத்தில் பார்த்த காமெடி (விளம்பர) படம் (கிளிக்கி பெருசா பாத்து என்ஜாய் பண்ணுங்கோ...)
படம் சொல்லும் நீதி:
1. உங்க கைல காசு இருந்தா இன்னாவேணா பண்ணலாம்...
2. வெரசா போயி நெறையா காசு சம்பாரிங்கோ...

Thursday, August 7, 2008

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்...” - ஓர் அழகிய பதிவு


சமீபத்திய பாடல்களில் இந்த பாடல் வசீகரித்ததைப் போல வேறெந்த பாடலும் என்னை வசீகரிக்கவில்லை. காரணங்கள் பற்பல.


ஒலியும் ஒளியுமாக நம்மை அடையும் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஏதேனும் ஒரு தன்மையே அதிகப்படியான கவனத்தோடு பதிவு செய்யப்படுகிறது. சில பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு திரையில் பார்க்கும்போது ஒருவித அந்நியத்தன்மையைக் கூட உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பாடலுக்கான மிகச்சிறந்த உதாரணம் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற, “கண்ணோடு காண்பதெல்லாம்..” என்ற பாடல். நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அந்த பாடலை ரசித்து உணர்ந்துவிட்டு திரையில் பார்த்தபின் மிகவும் வருத்தமடைந்தேன்.


சுப்ரமணியபுரத்தில் அமைந்த இந்த பாடலில் இசையும் காட்சியமைப்புகளும் இரண்டறக்கலந்து ஓர் அற்புதமான கலவையாகி நம் மனதைக் கொள்ளையடிக்கிறது. கண்களால் கதைபேசிக் கசிந்துருகும் காதல்தான் களம். பல வீரர்கள் செஞ்சுரி அடித்த அதே களத்தில் இயக்குநர் சசிக்குமார் மிகவும் சாதாரணமாக கலக்கியிருக்கிறார். மிகவும் இயல்பானவர்களாக வரும் நாயகனும் நாயகியும் தனி அழகு. சுவாதியின் தாவணிக்கட்டும் எளிமையான மேக்கப்பும் வெகுசிறப்பு. அவருடைய கண்களே இந்த பாடலின் மிகப்பெரிய பலம்.


மெலிதான இசையுடன் தொடங்கி, தொடங்கிய கோட்டுக்குள்ளேயே பயணித்து அங்கங்கு அழகை தூவிச்செல்லும் இசை அற்புதம். ஜேம்ஸ் வசந்தனுக்கு பிரத்யேகமான பூங்கொத்துகள். மிகவும் எளிதான வரிகளில் காதலின் தகிப்பை வெளிப்படுத்திச் செல்லும் தாமரையின் பேனாவுக்கும் ஒரு சபாஷ். தனித்துத்தெரியாத ஒளிப்பதிவும், மிகவும் நாசூக்கான எடிட்டிங்கும் இந்த பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்கின்றன.


காதலியை impress செய்வதற்காக காதலன் செய்யும் துடிப்பான, துறுதுறுப்பான செயல்களும் அதன் எதிர்வினைகளின் முரண்களும் அழகாக பதிவு செய்யப்படுகின்றன. “தோற்றவரே வென்றவர்...” என்று சொல்கிற வள்ளுவத்தைப் போல, தன் செயல்களில் இடரிவிழுந்தாலும், அதன் காரணமாகவே தன் காதலியின் உள்ளத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கிறான் காதலன். இப்பாடலின் வரிகளை இந்த பதிவில் கண்டும், கேட்டும் மகிழுங்கள்.

நீண்ட நாட்களுக்கு மனதில் நின்று தாலாட்டும் அழகிய திரைப்பாடலைத் தந்த சுப்ரமணியபுரம் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பின்குறிப்பு : நினைவுப் புதையல்களிலிருந்து காயத்ரியையும், அமராவதியையும் மீட்டுத்தந்து ஞாபகப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு நன்றியை நவில்கிறேன்.

Tuesday, August 5, 2008

சும்மா குறிப்புகள் - 1



ப்ரியம் நிறைந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சமீபத்தில் நண்பர் தனசேகரிடம் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ப்ளாக் எழுதாது ஏன் என நோண்டி நொங்கெடுத்துக்கொண்டிருந்தார். நண்பர் நாடோடி இலக்கியனும் ஏன் எழுதவி்ல்லை என துருவிக்கொண்டிருக்கிறார். பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி காரணம் ஏதுமி்ல்லை. விசைப்பலகை பிரச்சனை செய்துவிட்டது. ஆங்கில எழுத்துகள் E மற்றும் Y வேலை செய்யவி்ல்லை. சரி செய்ய சோம்பேறித்தனம் மற்றும் எழுதுவதிலும் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்து விட்டது. இப்போது விசைப்பலகை தயார். எதாவது எழுதலாமே என்று அமர்ந்துவிட்டேன்.

* * * * *

குசேலன் படம் பார்க்கவில்லை. வலையெங்கும் துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது பார்க்கலாம் என உத்தேசம். படம் பார்த்த நண்பர்களிடம் விசாரித்தேன். குட்டிப் பட்டாளத்தோடு மாயாஜால் சென்று படம் பார்த்த நண்பர் ராகவன் சொன்னது: “ பசங்களுக்கு படம் பிடிக்கல”. குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக, ரஜினி அவர்கள் ஹைதராபாத்திலிருந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் request ( அது மன்னிப்பு இல்லையாமே...!) செய்ததாக, CNN - IBN ல் செய்தி வெளிவந்தபோதே முடிவு செய்துவிட்டேன்; இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதில்லையென்று. கலை வியாபாரிகளிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது தமிழ் மக்களுக்கொன்றும் புதிதில்லையே...!

* * * * *

“குருவி” பாடல்கள் தொலைக்காட்சியில் வந்தால், என் 14 மாத மகன் தவறவிடுவதில்லை (“தேன் தேன் தேன்...” என்கிற மெலடி உட்பட...) . அப்படி என்னதான் பிடிக்கிறதென்றும் புரியவில்லை. தகிட தகிட எனத்துவங்கும் கலக்கலான “கத்தாழ கண்ணால...” முதல் அவனுக்குப்பிடித்த பாடல்கள் ஒரு வரிசையில் அமைகின்றன. தசாவதாரத்தில் “முகுந்தா முகுந்தா...” மற்றும் “கல்லைமட்டும் கண்டால்...” என இரண்டு பாடல்களும் அவனை வசீகரித்திருக்கின்றன. நேபாளி படத்தில் வரும் “கனவிலே கனவிலே...” என்கிற பாடலும், “பதினெட்டு வயது பட்டாம்பூச்சி...” என ஒரு பெண் துள்ளியாடும் ஒரு பாடலையும் இமை அசையாது ரசிக்கிறான். அவனுடைய ஹிட் லிஸ்ட்டின் புதுவரவு : சுப்ரமணியபுரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற அழகிய பாடல்.

* * * * *

ஆடி மாதத்தின் மையத்திலிருக்கிறோம். இன்னும் 12 நாட்களுக்கு ஆடி விளம்பரங்கள் நம்மை மேலும் துவைத்தெடுக்கும். ஸ்னிக்தா அழகாக அபிநயம் காட்டும் “மழை மழை மழை மழை பெய்யுதே...” என்ற sridevi textiles விளம்பரம் அட்டகாசம். அளவுக்கு அதிகமாக உணர்ச்சி கொட்டி + காட்டி, ப்ரியாமணி ஆடும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தொடர்ந்து பார்க்க சலிக்கிறது. “ஒரே எடத்துல ரெண்டு பாருங்க...” என்று அவர் தொடர்ந்து சொல்வதும் அபத்தம். மாறாக மீரா ஜாஸ்மின் வரும் “சாமுத்ரிகா பட்டு” விளம்பரம் படு பாந்தம். முன்பு படபடவென்று வந்த அதே விளம்பரத்தை சற்று பிரேக் போட்டு நிறுத்தி, ஸ்லோவாக சொல்கிறார்கள். இதுவும் அதே அழகுடன் மிளிர்கிறது. “சர்வ லட்சணமான பட்டு” என்ற பிரயோகம் கூட “லட்சணமான பட்டு” என சுருங்கிவிட்டது. பிரகாஷ்ராஜ் வரும் வனஸ்பதி விளம்பரத்தைக் காட்டிலும், ஜெயராம் கலக்கும் துணிக்கடை விளம்பரம் சிறப்பு. அவருடைய தமிழில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. “நொட்டு” என்று பஞ்சதந்திரத்தில் அவர் அடிக்கும் ஒரு டைமிங் காமெடியை இப்போது நினைத்தாலும் சிரித்து மாளமுடியாது. இந்த காட்சி யாருக்கேனும் நினைவிற்கு வந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

* * * * *

இப்போதைக்கு ஜூட்டு... விரைவில் ரிபீட்டு....

Follow @ersenthilkumar