Friday, February 29, 2008

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...


எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மறைந்தபின் எழுந்த அஞ்சலிகளும், அதைத் தொடர்ந்து அந்த அஞ்சலிகளை எதிர்த்துப் பிறந்த பதிவுகளும் என்னுள் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தின. நம் மனத்தில் தோன்றும் (பிரசுரிக்கும்படியான) கருத்துக்களை எழுதுவதற்கே நாம் blog எழுதுகிறோம். அப்படியென்றால், இந்த பதிவுகளைப்பற்றி கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே என்று மனதில் பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக நான் தமிழ்ப்பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாத காலமாக blog எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு நான் காணும் பல விஷயங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப் பட்டவையோ என்று எண்ண வைக்கும் வகையில் எழுதப்படுகின்றன. தாம் கவனிக்கப்படவேண்டும் என்பதற்காக எழுதப்படும் எழுத்துக்களையும் நான் காண்கிறேன். இங்கு அதிக ஹிட்களை பெறுவதே பிரதானமாக காணப்படுகிறது. அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை எளிதாக கண்டுகொள்ள முடிகிறது. அவர்கள் எழுதும் பதிவுகளின் தலைப்புகளிலேயே அது தென்படுகிறது.

இனி தொடர்ந்து பதிவுகளை எழுதலாமா அல்லது விட்டுவிடலாமா என்பது போன்ற எண்ணங்களும் என்னுள் எழுகின்றன. இங்கு எப்படிப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமையும், வரவேற்பும் தரப்படுகின்றது என்பது தமிழ்மணத்தின் சூடான இடுகைகளைப்பார்க்கையில் வெள்ளிடை மலையாகிறது. இங்கு பல்வேறு குழுக்களாக பதிவர்கள் செயல்பட்டு அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்களே பதிவுகளாக வருகின்றன. அவை சூடான இடுகைகளில் இடம் பிடித்து, சூடான இடுகைகளுக்கான இயல்புகள் என்னவென்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

சுஜாதா என்ற ஓர் எழுத்தாளன் தன் 73ம் வயதில் இறந்தபிறகு, இங்கு எழுதப் படும் பதிவுகள் அவற்றின் தரம்பற்றி தாமே சொல்கின்றன. அடிப்படை நாகரீகப்பண்பின்றி எழுதப்படும் பதிவுகளுக்கும் குடைபிடிக்கும் போக்கு இந்த தளத்தில் இயங்குபவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் இது எனக்கு உகந்த தளம் அல்ல என்று உணர்கிறேன். நானொன்றும் தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளன் அல்ல. நல்ல எழுத்துக்களை நாடி வாசிக்கும் ஒரு வாசகன். படைப்புலகச் சிந்தனையோடு வலைய வரும் ஒரு வாசகன். அவ்வளவே...

மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தும் போக்கும் இங்கு வெகு இயல்பாகவே உள்ளது. அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்யானம் சொல்பவர்களின் வார்த்தைகளை கேட்கும் பக்குவம் எனக்கு வரவில்லையென்று அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.

இந்த வலைத்தளத்திரட்டிகளில் முதன்மையாக செயல்படுவோரிடத்திலும் வியாபார சூட்சுமங்களே முதலிடம் வகிக்கின்றன. அவர்களின் பதிவுகளின் தன்மை அதனால் மங்கிப்போகவும் வாய்ப்புள்ளதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனம் கொள்ளவில்லை. இன்றைய தேதியில் என்ன நடக்கிறது என்பதுதான் பிரதானமாக இருக்கிறது.

தான் சார்ந்த சமூத்தின் நிலைகுறித்தும் அதன் வளர்ச்சிக்காகவும் எழுதப்படும் வார்த்தைகளே காலத்தால் குறித்துவைத்துக்கொள்ளப்படும். தனிமனித காழ்ப்புணர்ச்சியோ அல்லது துவேஷமோ, குழு மனப்பான்மையின் போதையோடமைந்த வார்த்தை விளையாட்டுக்களோ நிச்சயமாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வாகனங்களாக அமையாது என்பது என் எண்ணம்.

என்னுடைய வாழ்க்கைச்சூழலில் நான் வரையறுத்து ஒதுக்கும் காலத்தில், இந்த வலைப்பதிவுகளில் நான் இயங்க விரும்பும் விஷயங்கள், மேற்கண்டவை குறித்த விவாதங்களோ அல்லது விருப்பு வெறுப்பு அபிப்பிராய பேதங்கள் குறித்த வெட்டி வாதங்களோ அல்ல. “வாசித்தோமா... போனோமா...” என்ற மனநிலை விரைவில் வாய்க்கும்பட்சத்தில் “அடப்போங்கப்பா....” என்று சொல்லி ஒதுங்கிப்போகப்போகிறேன். அந்த கால கட்டம் வரும்வரை இந்த பதிவை எண்ணிக்கொண்டு நான் சற்றேனும் இளைப்பாற விரும்புகிறேன்.

Thursday, February 28, 2008

அரங்கமாநகருளானே...


அரங்கமாநகருளானே...
அவரை
அங்கேனும்
பத்திரமாய் பார்த்துக்கொள்...

ஈரவிழிகளுடன்,
நித்யகுமாரன்

Wednesday, February 27, 2008

ம் சீக்கிரம்...

விரைவில் முடிவெடு
நான் எங்கு முடிச்சிடுவது...?
உன் கழுத்திலா...
என் கழுத்திலா...

கிருபா, சத்யாவிற்கு உண்மையான நண்பனாக இருந்தானா...? - “அஞ்சாதே” ஒரு மீள்பார்வை


சமீபத்தில் “அஞ்சாதே” திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் . மேலும் எழுதத்தூண்டும் அளவுக்கு படத்தில் சரக்கு இருப்பதாக நினைப்பதால் இந்த பதிவை எழுதவிழைகிறேன். ஏற்கனவே எழுதிய பதிவிற்கு அப்படியொன்றும் பலமான வரவேற்பு (அதிக மறுமொழிகள் வாயிலாக) இல்லாத போதிலும், பரவலாக வாசிக்கப்பட்டதால் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்) திரும்பவும் எழுதுகிறேன். அப்படி சிலாகிப்பதற்கு படத்தில் ஒன்றுமில்லையே என்று யோசிப்பவர்கள் இங்கே கழண்டு கொள்வதென்றாலும் சரி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டாலும் சரி.


இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை இயக்குனர் அமைத்தவிதம் குறித்து விமர்சனம் எழுதும் நோக்கோடு இதை எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களை அவ்வவற்றின் இயல்போடு அப்படியே கிரகித்துக்கொண்டு அவர்களின் போக்கையும், செயல்பாடுகளையும் பற்றியுமே இங்கு எழுத முயல்கிறேன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் “வாலியை மறைந்திருந்து கொன்ற ராமன் குற்றவாளியே...” என்கிற ரீதியில் பேசப்படும் வாதங்களில், ராமனைப் பற்றியோ அல்லது வாலியைப் பற்றியோ தான் பேசப்படுமேயன்றி, அந்த பாத்திரங்களைப்படைத்த கம்பனைப் பற்றி பேசப்படமாட்டாது. அதாவது, கம்பன் இந்த பாத்திரத்தை படைத்த விதம் தவறு, சரி என்று விவாதிக்கப்படமாட்டாது. அந்தந்த பாத்திரங்களை அவற்றின் இயல்போடு கிரகித்துக்கொண்டு சூழல் அவர்களைப் படுத்தும் பாடு குறித்து விவாதிக்கப்படும். அப்படி ஒரு முயற்சியாகவே இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த புரிதல் அவசியம் என்று தோன்றியதால்தான், இந்த முன்னுரை தேவைப்பட்டது. இனி விஷயத்திற்கு வரலாம்...


“அஞ்சாதே” திரைப்படத்தின் அடிநாதமாக அமைந்திருப்பது நட்பு. அந்த நட்பிற்கு சத்யாவும், கிருபாவும் உண்மையாக இருந்திருக்கிறார்களா என்ற கேள்வியோடு அணுகும்போது, சத்யாவைவிட கிருபா தாழ்ந்துபோகிறான். தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னாலான நல்லதைச் செய்ய ஓடுகிறான் (படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சத்யா ஓடுவது தனிக்கதை!). கிருபாவை அடித்தவர்களை ஓடிச்சென்று போய் கும்முவதிலும், கிருபா SI தேர்வில் தோல்வியடைந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைகையிலும், கிருபா தன் இயல்பிலிருந்து மாறி தாடியும் குடியுமாக தரம்புரள்பதைக் கண்டு பதைபதைப்பதிலும், தன் நண்பன் கெட்ட வழியில் சென்றுவிடாமலிருக்க அவனுக்காக முயற்சி எடுப்பதிலும், போலிஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துவரப்படும் கிருபாவுக்கு எதுவும் நேராமலிருக்க இன்ஸ்பெக்டரிடம் மன்றாடுவதிலும் - சத்யா கிருபாவிற்கு உண்மையான நண்பனாகவே இருக்கிறான்.


ஆனால் கிருபா, தான் SI தேர்வில் தோல்வியடைவதற்கே சத்யாதான் காரணம் என்கிற ரீதியில் தவறாக ஒரு கற்பிதத்தை வளர்த்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் தனக்காக எதுவும் செய்யக்கூடிய தன் நண்பன் சத்யா மீது வன்மத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் முனைப்பின்றி எதெச்சையாக தயாவிடம் பழகத்துவங்கியபின், தன் வீட்டிலேயே “தண்டச்சோறாக” அறியப்பட்டபின், கிருபாவின் அடிப்படை எண்ணங்களில், செயல்பாடுகளில் எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக வளரத்துவங்குகின்றன. ஆயினும் கிருபா அடிப்படையில் நல்லவனாகவே இருக்கிறான் என்பது தயாவிடம் அவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியில் தெரிகிறது. ஹவாலா என்று முதலில் பொய்சொல்லி கிருபாவை தன்வசப்படுத்தும் தயாவின், நிஜமுகம் இளம்பெண்களை கடத்தி, கற்பழித்து பணம் பறிப்பதுதான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் தயாவிடம் கிருபா செய்யும் வாக்குவாதம் அவர்களிருவரின் அடிப்படைத்தன்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஆயினும் கிருபாவின் உக்கிரமான, குரூரமான முகம் ஒரு காட்சியில் வெளிப்பட்டு நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. சத்யாவின் தங்கையை தான் முழுதாக பார்த்ததாகவும், எங்கெங்கு மச்சம் இருக்கு சொல்லட்டுமாவென்று தயா சொல்லிவிட்டு தலையை உயர்த்தி வெற்றிக் கொக்கரிப்பு போல் சிரிக்கும்போது, தன் நண்பனின் சகோதரியைப்பற்றி இப்படி சொல்கிறானே என்று கோபமில்லாமல், துளி வருத்தம் கூட காட்டாமல் அந்த களிப்பில் தானும் பங்குகொள்ளும்போதே கிருபா தான் சத்யாவிடம் கொண்டிருந்த நட்புக்கு முடிவுரை எழுதிவிடுகிறான். இறுதிக்காட்சியில் தான் எப்போதோ வாங்கிக்கொடுத்த விரல்களில் நுழையாத மோதிரத்தை ருத்ராட்சக்கொட்டை போல் சத்யா தன் கழுத்தில் இட்டிருப்பதை பார்த்தபின், சத்யாவின் நட்பின் ஆழத்தைப்புரிந்து கொண்டு “சொல்லலையேடா...” என்ற கடைசிவார்த்தைகளோடு கிருபா விழி சொருகுவது நம்மை சற்று வருத்தப்படவைக்கிறது.


“அண்ணா சத்யா நல்லவன்...” என்று படத்தில் பல இடங்களில் கிருபாவின் தங்கை உத்ரா தன் அண்ணனிடம் சொல்லும் காட்சிகள் அருமை. அது படத்தின் உச்சகட்ட காட்சிவரை வந்து செல்கிறது.


தயாவைப்பற்றியும் நிச்சயம் சொல்ல வேண்டும். தயா அடிப்படையில் நல்லவனாக இருந்து மாறினானா இல்லை அவன் அடிப்படையிலேயே அப்படித்தானா என்ற கேள்வி தொக்கிநிற்கிறது. தான் மிலிட்டரியில் பணி புரிந்த போது, தன் சீனியர் ஆபிஸரின் மனைவி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதனைத்தொடர்ந்த நிகழ்வுகள் தன்னை இப்படியொரு பாதைக்கு வழி நடத்திவிட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை கிருபாவிடம் சொல்லும் தயாவை நம்பலாமா வேண்டாமா என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.


தயா, லோகு, கிருபா மற்றும் மொட்டை என நான்கு பேர் இருக்கும் கூட்டணியில் இரண்டு பேர் மட்டும் தப்பிப்பதற்கு ஒரு கோழி வேனை தயா ஏற்பாடு செய்யும்போது, பதற்றப்படும் லோகு எங்கே ஒருவேளை தன்னை தயா கொன்றுவிடுவானோ என்றெண்ணி தன்னுடைய ஆளான மொட்டையிடம் தயாவை கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் நடக்கும் கதையே வேறு. நம்மிடம் இருக்கும் பதில் சொல்லப்படாத கேள்வி இதுதான். தயா திட்டமிட்டபடி தப்பிக்கும்பட்சத்தில் அவனோடு அழைத்துச் செல்லவிருந்த அந்த இன்னொரு நபர் யார்...? கிருபாவா, லோகுவா இல்லை மொட்டையா...?


படம் பார்த்த யாரேனும் உங்கள் கருத்தைச் சரியான காரணத்தோடு சொல்லுங்களேன்.


இப்படம் பற்றி மிக நீ.................ண்ட பதிவெழுதிய தோழர் உண்மைத்தமிழன் அவர்களை தன்னுடைய கருத்தைச்சொல்ல அன்போடு அழைக்கிறேன்.

Monday, February 25, 2008

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை


மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.

விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).

விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.

மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.

மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.

சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.

Saturday, February 23, 2008

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...



உன்னை
நினைத்துக்கொண்டே
பேருந்தில் ஏறி
ஏதோ ஒரு நீலச்சுடிதாரை
எட்டிப்பார்த்தபோது
பேருந்திலிருந்து
வள்ளுவன் சொன்னான்...

“கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...”

கண் கொத்திக் காதல்...




“நீ
திரும்பியே பார்க்காததால்
என் கண்களைக் குத்திக்கொள்ள
முடிவெடுத்திருக்கிறேன்...”

“ஏன் என்னிடம் சொல்கிறாய்..”
என்று கேட்கிறாயா...?

நீதானேடி ஹேர்பின் தரப்போகிறாய்...!

என்ன பார்வையடி...



என்ன பார்வை
உன் பார்வை...
ஒரு பார் (BAR) வை

Friday, February 22, 2008

காதோரக்கவிதைகள்...



உன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...

“என்னைப்போல இன்னொன்று...”


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நிமிடத்திற்கொருமுறை
முகத்தில் தவழும்
கூந்தல் குழந்தைகளையெல்லாம்
ஆட்காட்டி விரலால்
சேர்த்தெடுத்து
காதோரம் செருகும்போது
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்

அஞ்சாதே - திரைப்படப் பார்வை


மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று சொல்லிக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சத்யாவும் (நரேன்) மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் போலீஸ்காரர்கள். துரத்தும் வாழ்க்கைச்சூழலில் சத்யா SI தேர்வில் (குறுக்கு வழியில்) தேர்ச்சியடைய, கிருபா தோல்வியடைந்து இலக்கின்றி குடித்து அலையும் நிலைக்கு வருகிறான்.


பெண்களை கடத்திவந்து, கற்பழித்து, பணம் பறிக்கும் கும்பலாக லோகுவும் (பாண்டியராஜன்), தயாவும் (பிரசன்னா) இருக்கிறார்கள். இவர்களுடன் தன்முனைப்பின்றி கிருபா இணைகிறான். உச்சபட்சமாக இவர்கள் போலீஸ் IG யின் பெண்களை கடத்துகிறார்கள். அதன் பின் போலீஸ் இவர்களை எப்படி வளைக்கிறது... தயா மற்றும் லோகு என்ன ஆனார்கள்... தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா என்ன செய்கிறான்... இப்படி பல கேள்விகளுக்கான பதிலை எதார்த்தத்துடன் தருகிறது படம்.


நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னா அனைவருக்கும் அற்புதமான களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மூவரும் அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் அழகு. “அழகிய தீயே...” படத்தில் பார்த்த பிரசன்னாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் விதத்தில் மிகவும் தைரியமாக வி்ல்லன் பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார். நீண்ட குர்தாவும், வலது கையில் பெண்கள் ஸ்டைலில் கடிகாரம் கட்டிக்கொண்டு அடிக்கொருமுறை கையைத்திருப்பி மணிபார்க்கும் மேனரிஸமும், வழிந்து தொங்கும் தலைமுடிக்கிடையே சாதாரணமாக ஆனால் கூர்ந்து பார்க்கும் பார்வையுமாக அனைத்து பாராட்டுகளையும் தட்டிச்செல்கிறார் பிரசன்னா. அவருடைய இளமையான குரல் இந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சி. இனி இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.


படத்தின் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை பரபரப்பாக வரும் நரேன் சத்யா பாத்திரத்தில் ஜோராக பொருந்துகிறார். ஓவர் ஆக்டிங் போலத்தெரியும் அவருடைய சில பாடி லாங்வேஜ் உறுத்தலாக இருந்தாலும் போகப்போக அது நமக்கு பழகிப் போகும் என்றே தோன்றுகிறது. மலையாள வாசனையோடு அவர் பேசும் தமிழும் அப்படியே. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னை முழுமையாக தந்திருக்கும் நரேன் பாராட்டிற்குரியவர். தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் வரமாட்டேன் என்று சலம்பும் போதும், தியேட்டரில் “தவமாய் தவமிருந்து..” ராஜ்கிரணைப் பார்த்து விட்டு... “இவன்தாண்டா அப்பன்...” என்று ரவுசு விடும்போதும் நம்மையும் ரசிக்க வைக்கிறார்.


கிருபா எனும் பரிதாபத்துக்குரிய பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாயிருக்கும் அஜ்மல் ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவு. கிருபாவின் தங்கையாக வரும் விஜயலட்சுமிக்கும் கதையோட்டத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை பயன்படுத்திக்கொண்டிருப்பதும் சிறப்பு. குருவி என்கிற பாத்திரத்தில் வரும் கை ஊனமானவர் (பெயர் தெரியவில்லை), கால் ஊனமான இன்னொருவர் (அவர் பெயரும் தெரியவில்லை), பாண்டியராஜன், பொன்வண்ணன், MS பாஸகர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற அனைத்து பாத்திரங்களும் தேவையறிந்து படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. அனைவரின் பங்களிப்பும் பிரமாதம்.


படத்தின் கேப்டன் மிஷ்கினுக்கு ஆளுயுர பொக்கே கொடுத்து பாராட்டலாம். இந்த திரைக்கதை மிகவும் அற்புதமாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொய்வே ஏற்படாமலும், அதே நேரம் விலாவரியாகவும் சொல்லப்படும் காட்சிகள் மிகப் பிரமாதம். ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு, தேர்ந்த தேடலுக்குப்பின், அந்த சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக்கவர்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதட்டத்தில் நம்மை கடைசிவரை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைகிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளும் லாஜிக்கோடு அமைந்திருப்பது மிகச்சிறப்பு.


சுந்தர் சி.பாபுவின் பாடல்களை தியேட்டரில் தம்மடிக்க வெளியே போகாமல் அமர்ந்து கேட்கலாம். படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சூழலிலும் அந்த தன்மைக்கேற்ப செயல்படுகிறது. படத்தின் முதல் காட்சி, தரையோடு தரையாக கேமரா சுழலும் காட்சி என தன் இருப்பை பறைசாற்றுகிறார் ஒளிப்பதிவாளர்.


“எனக்கு ஒரு ஃபுல் ஒரிஜினல் சரக்கு வேணும்...” என பிரசன்னா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நம் டாஸ்மாக்கில் எல்லாம் டூப்ளிகெட் சரக்குதானோ என்ற அங்கதக்கேள்வி எழுகிறது. குறுக்கு வழியில் SI தேர்வில் தேர்ச்சியடைவதற்கு சத்யா செய்யும் முயற்சிகளும் அந்த செயல்களும் மிகவும் அங்கதத்தோடு நம் சமூக அமைப்பை சாடுகின்றன. ரோட்டில் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கிடக்கும் ஒருவனை காப்பாற்ற சத்யா செய்யும் முயற்சிகளும் அதன் விளைவும் அச்சு அசல் உண்மை நிலையை அப்பட்டமாக காண்பிக்கின்றன. IG யின் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டால் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்யும்... சுற்றி நம்மை போலீஸ் வளைக்கும் சூழலில் அதிலிருந்து தப்ப சமூகவிரோதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்... இப்படி பல சூழ்நிலைகளை ஆய்ந்து நம்பும் விதத்தில் காட்சியமைத்திருப்பது சிறப்பு.


மிகவும் அரிதாக வரும் தரமான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும்படியான விஷயங்களும், புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளும் படத்தை மீண்டும் பார்க்கத்தூண்டும்.

இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படத்தை எந்த கேள்வியும் கேட்காமல் பார்க்க நான் ரெடி. That is what the promise he is providing in this film. NOT TO BE MISSED MOVIE.


பின்குறிப்பு : இந்த படம் பார்க்கச்செல்லும் அளவு மொக்கை போட்ட நண்பர் முத்தையாவுக்கும், எந்தக்கேள்வியும் கேட்காமல் “சரி போகலாம்...” என்று சொல்லி படம் பார்த்து சிலாகித்த நண்பர் ராகவனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Friday, February 15, 2008

தேகசாலையில் நடந்து போகையில்...


போக்குவரத்து விதிகளில் சிலவற்றை பொருத்திப் பார்க்கையில் சில சுவாரஸ்யங்கள் முளைத்தன. இனி இந்த விதிகளையெல்லாம் உங்கள் கற்பனையில் பொருத்திப்பாருங்கள். அதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல...!




நில்
கவனி
செல்


அபாயகரமான
வளைவுகள் முன்னே...
பார்த்துச்செல்லவும்


ஒலி எழுப்பாதீர்கள்



குடித்து விட்டு
வாகனம் ஓட்டாதீர்கள்...

தலைக்கவசம்

உயிர்காக்கும்




Thursday, February 14, 2008

அழகு குத்தியவள்...


உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...


காதல் வணக்கம்

காதலே
வணங்குகிறேன் உன்னை...

உன் விஸ்வரூபத்தின் முன்னால்
மிகவும் எளியவனாய் நானிருக்கிறேன்...

மழையாய் வந்து குளிர்வி்த்து செல்கிறாய்...
சுனாமியாய் வந்து விழுங்கியும் செல்கிறாய்...

விழுதுகளால் ஊஞ்சல் கட்டியும் தருகிறாய்...
வேர்களாய் மறைந்து மறைந்தும் போகிறாய்...

ஒளி தந்து வாழ்க்கைப் பாதை காட்டுகிறாய்...
வெப்பமேற்றி மோகத்தீயில் வாட்டுகிறாய்...

தென்றலாய் வந்து தாலாட்டுவதும் நீயே...
சூறாவளியாய் வந்து சுருட்டுவதும் நீயே...

நாளெல்லாம் பரவசப்படுத்துவதும் நீதான்...
நொடிப்பொழுதில் கலவரப்படுத்துவதும் நீதான்...

வயிறுவலிக்க சிரிக்கவைப்பதும் நீதான்...
கண்ணீர் வற்ற அழவைப்பதும் நீதான்...

கடந்தவாரம் கடவுளைக் கூட பார்த்துக் கேட்டேன்...
அவனும் கூட புலம்பிவிட்டுத்தான் போகிறான்...

உன் விஷயம் தெரியாமல்
விஸ்ரூபம் புரியாமல்
கண்ணை மூடி காதலித்துவரும்
அத்துனை பேரையும்
இமை மூடி காத்துவருகிறாய்...

ஆதி அந்தம் புரியாத இறையே...
உனை வணங்குகிறேன்...

போகும் வழியில் அவளைப் பார்த்தால்
சொல்லிவிட்டுப் போ...

“போடி போ... அங்கொருவன்
விழியிரண்டை வீதியில் விட்டு விட்டு
வீட்டுக்குள் குருடனாயிருக்கிறான்...”

Wednesday, February 13, 2008

உன் காதலும்... என் காதலும்...


எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்

இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

Monday, February 11, 2008

திரைப்பாடல்களில் காதல் கவிநயம்...

அன்பானவர்களுக்கு வணக்கம்...

சமீபத்தில் என் நண்பர் கதிரவனுடன் உரையாடிக்கொண்டிருந்த போது சிவாஜி படப்பாடலில் இருந்து

“ அடடா... குமரியின் வளங்கள்...
குழந்தையின் சிணுங்கல்...
முரண்பாட்டு மூட்டை நீ...” - என்று நாயகியை நாயகன் வர்ணிக்கும் வரிகளைப்பற்றிச் சொன்னபோது “அட இதை கவனிக்கவில்லையே” என்று சொன்னார். இதைப்போன்று பல பாடல்களில் கவனிக்கத்தக்க சிந்தனைகள் உள்ளன. ஆனால் அவை தனியாக வெளிச்சம் போட்டு சொல்லப்படாததால் கவனிக்கப்படாமலேயிருக்கின்றன.

அப்படி கவனிக்கப்படாமல் விடப்பட்ட வரிகளை நாம் தேடிக்கண்டுபிடித்து, மகிழ்ந்து, எழுதி, பிறரையும் மகிழ்விக்கலாமென்று எண்ணினேன். எனக்கு சட்டென்று நினைவிற்கு வரும் வரிகளை இப்போது இங்கு குறிப்பிடுகிறேன். உங்களுக்குத் தோன்றும் வரிகளை மறுமொழியில் சொல்லுங்களேன்...

ஒரே ஒரு விதி மட்டுமே : அவை காதல் வரிகளாக இருக்கட்டும்... இது காதல் மாதமல்லவா...

“கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா...
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா...
மையிட்ட கண்ணே உன்னை
மறந்தா... இறந்தே போவேன்....” - “உருகுதே... மருகுதே...”

“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்...
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்...” - “ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...”

“மறுபடி ஒருமுறை பிறந்தேனே...
விரல்தொட புருவம் சிவந்தேனே...

எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே... படர்வாயே..
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...” - “ரகசிய கனவுகள்...”

“என்னைவிடவும் என்னை அறிந்தும்... யார் நீ என்று கேட்காதே...
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே...” - “ குல்முகர் மலரே...”

“இரவைத்திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத்திறந்தால் நீயிருப்பாய்...”- “என்மேல் விழுந்த மழைத்துளியே...”

“தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்...” - “பனி விழும் இரவு...”

“கொடி ஒன்று கனி ரெண்டு
தாங்காமல் தாங்காதம்மா....” - “சிங்களத்துச் சின்னக்குயிலே...”

“நீ வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி...” - “நீ கட்டும் சேலை...”

“மாமர இலைமேலே மார்கழி் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ...” - “தூங்காத விழிகள் ரெண்டு...”

“கூந்தலென்னும் ஏணியேறி முத்தமிட ஆசைகள் உண்டு...
நெற்றி மூக்கு உதடு என்றே...
இறங்கி வர படிகளும் உண்டு...” - “ கேளாமல் கையிலே...”

இனி உங்கள் விருப்பங்கள் தொடரலாம்...

Saturday, February 9, 2008

இது முத்தக்காலம்...


உனக்கான வார்த்தைகளை
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
சுமக்க முடியாமல் தடுமாறுகிறேன்...

உனக்கான முத்தங்களையெல்லாம்
எப்படி சேகரம் செய்வதென்று
புரியாமல் தடுமாறுகிறேன்...

வார்த்தைகள்
தாமதமாய் வந்தாலும்
அதன் தரம் மறையாது...

ஆனால்
முத்தங்கள் அப்படியா...

ஈரம் காய்வதற்குள்
வாங்கிக்கொள்ள வேண்டாமா...

எத்தனை முறைதான்
ஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...

உதடுகளும் முத்தங்களும்
மாறி மாறி கேலி செய்கின்றன...

இனி மொத்த காலமும் முத்தக்காலமே...

விரைந்து வா அன்பே...

Friday, February 8, 2008

இனி கவிதை வரும் காலம்...


“நாங்கள்
செய்த தவறென்ன...
எங்களுக்கு ஏன்
சொர்க்கத்தில் இடமில்லை...?”

கேட்டோரிடம்
ஆண்டவன் சொன்னான்...

“கடற்கரைக்குச் சென்று
கால் நனைக்காதோருக்கும்...
பூமிக்குச் சென்று
காதலிக்காதோருக்கும்...
மோட்சத்தில் இடமில்லை...”

Thursday, February 7, 2008

வருவாயா...?


உன்
காதோர
வளைவு முடிகளில்
ஊஞ்சலாட ஆசை...

வருவாயா...
தருவாயா...



“கோல்” - புத்தகப்பார்வை


Eliyahu M. Goldratt என்கிற இஸ்ரேலைச்சேர்ந்த இவர் எழுதிய புத்தகம் 'The Goal' என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இயற்பியல் பட்டதாரியாக இருந்து Business Consultant ஆக மாறியவர் இவர். இவருடைய ' The Goal ' என்கிற புத்தகத்தை ஒரு தொடராக ஆனந்தவிகடன் வெளியிட்டது. திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் திரு.பா.சீனிவாசன் அவர்கள் ஆனந்தவிகடன் பொறுப்பேற்றுக்கொண்டபின் நடந்த சில குறிப்பிட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

விகடனில் வெளியானபோது தொடர்ச்சியாக படிக்க இயலவில்லை. இதே புத்தகத்தின் ஆங்கில மூலத்தை வாங்கி வைத்தும் பல மாதங்களாகிவிட்டன. ஆனால், சமீபத்திய சென்னை Book Fair-ல் இதன் தமிழ்ப்பதிப்பை வாங்கியிருந்தேன். நேற்றுதான் வாசிக்கலாம் என்று எடுத்தேன். கீழே வைக்க மனம் வரவில்லை. முழுவதுமாக வாசித்துமுடித்துவிட்டேன்.

மிகவும் சுவாரஸ்யமான கதை வடிவில் இந்த புத்தகம் இருப்பதே இதன் வெற்றிக்கு அடிப்படையாகும். ஆனால், வெறும் கதை படிப்பதில் மட்டும் ஆர்வம் இருப்பவர்களால் இந்த புத்தகத்தை படிக்கவியலாது. முப்பதுகளில் இருக்கும், வாழ்க்கைத்தேடலுள்ள, முன்னேறும் எண்ணம் உறுதியாக உள்ள, சற்றேனும் அறிவியல் படித்த எந்த இளைஞனுக்கும், யுவதிக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

இந்த புத்தகத்தில் - வெவ்வேறு விதமான மனிதர்களின் சிந்தனைகளும், பிரச்சனைகளின் விஸ்வரூபங்களும், நம்மீதான அலுவலகம் மற்றும் குடும்பம் சார்ந்த எதிர்பார்ப்புகளும், சிந்தனைக்கும் செயலுக்குமான இடைவெளிகளும் - மிக மிக அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளிலிருந்தே Business Management பாடங்களைக் கற்றுக்கொள்ளும் விதம் மிகவும் நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது. அதுவும் Herby என்ற மாணவனை தன் Plant - ல் இருக்கும் Machinery களோடு ஒப்பிட்டு தன் பிள்ளைகளோடு கதை நாயகன் விவாதிக்கும் காட்சிகள் இன்னும் மனக்கண்ணில் ஓடுகின்றன.

ஒரு நாவலுக்கான திருப்பங்களுடன் அத்தனை விஷயங்களும் இதில் சொல்லப்பட்டிருப்பதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. கதைமாந்தர்களின் பெயர்கள் நமக்கு சற்று அந்நியப்பட்டு இருக்கலாம். உதாரணம் - பாப் டொனாவன், ஸ்டேஸி, ஜோனா இப்படி பல. நம் கதாநாயகனின் பெயர் கூட அலெக்ஸ் ரோகோ. ஆயினும், உள்ளடக்கத்தை நோக்குகையில் இந்த புத்தகம் மிகவும் பயனுடையதாகத் தெரிகிறது. அதனாலேயே இந்தப்பக்கத்தில் இதை எழுதுகிறேன்.

பதிப்பு - விகடன் பிரசுரம்
தமிழில் எழுதியவர் - அஞ்சனா தேவ்
பக்கங்கள் - 287
விலை - ரூபாய் 100

Wednesday, February 6, 2008

ரோஜா. . .


காலையில் சிரித்த
உன் கூந்தல் ரோஜா
மாலையில் வாடியது ஏன்...?


உன் முகம் பார்க்க
முயன்று முயன்று முடியாததாலா...!

Tuesday, February 5, 2008

இரவு... நிலவு...


இரவு நேர பேருந்து பயணம்
ஜன்னலோர இருக்கை
கூடவே வந்தது நிலவு...


பக்கத்தில் அமர்ந்து

Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி


நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்த ஓர் ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

20 - 20 உலக சாம்பியன் இந்திய அணியும், இதுவரை இந்தியாவிடம் 20 - 20 போட்டிகளில் தோல்வியடைந்தே வந்த ஆஸ்திரேலிய அணியும் ஒரே ஒரு 20 - 20 போட்டியில் மோதின.

“இம்சைஅரசன் 23-ம் புலிகேசி” - என்ற வெற்றிப்படத்தை தந்து, அதே பாதையில் இரண்டாவது முறையாக கதாநாயகன் வேடம் தரித்து வடிவேலு நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படம் வெளியானது.

இரண்டு நிகழ்வுகளின் முடிவுகளும் எதிர்பார்க்காதவையாக இருந்தன.

ஹர்பஜன்சிங் வழக்கில் கிடைத்த எதிர்பாராத முடிவிற்கும், இதுவரை இந்தியாவை வெல்ல முடியாமல் இருந்த கடுப்பிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இந்திய அணி வென்றுவிடலாம் என்ற அதீத நம்பி்க்கையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சேவாக் விக்கெட் வீழ்ந்தபிறகு, அணியை வழிநடத்தி செல்லும் ஆட்டம் வழங்க அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. இந்த அணிதான் கோப்பையை கைப்பற்றியதா என்ற வினா எழுந்தது உண்மைதான். தோனி உள்ளிட்ட வீரர்கள் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத நிலையில், அணியை தங்கள் கட்டுக்கோப்பில் வைத்திருக்க தடுமாறியிருக்கலாம். யுவராஜ் இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பார் என்பதும் கேள்விக்குறிதான். பதான் மட்டும் இரட்டை இலக்க எண் ஓட்டங்கள் எடுத்தார் என்பது மிகவும் கேவலமான நிலையில் இந்திய பேட்டிங் உள்ளதை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

அடுத்து வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எவ்வளவு தடுமாறப்போகிறது என்பதை நினைத்தால் இப்போதே பயமாக இருக்கிறது. இந்த முறை இறுதி ஆட்டத்தை இந்திய வீரர்கள் பெவிலியனில் அமர்ந்துதான் பார்க்கப்போகிறார்கள் என்று பட்சி சொல்கிறது. பார்க்கலாம்.

இப்படி ஒரு மேட்சிற்கு பிறகு, மனம் நொந்த நிலையில் நம்ம வடிவேலு நடித்த படம் வெளியாகியிருக்கிறதே, அதைப்பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து நண்பர் ராகவனும், நானும் மாயாஜால் செல்ல முடிவெடுத்தோம். மாயாஜால் வலைத்தளத்தில் சென்று பார்த்தால், இரவு 8-30 காட்சிக்கு முன்பக்க ரோவில் மட்டுமே இடம் இருந்தது. நேரில் சென்று பார்க்கலாம், யாரேனும் நண்பர்கள் வராத போது எந்த புண்ணியவானேனும் டிக்கெட்டுகளை விற்கலாம், பின்பக்க ரோவில் அமர வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி கிளம்பி விட்டோம். அப்போது எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் எப்படி மாட்டப் போகிறோம் என்று... (இது ராஜேஸ்குமார் ஸ்டைல்)

நினைத்தபடியே சற்று பின்புறமாக இரண்டு டிக்கெட்டுகள் கிடைத்தன. படம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே நெளியத்தொடங்கி விட்டோம். மடமடவென விக்கெட்டுகள் விழுந்த இந்திய அணிபோல படம் தொய்யத்தொடங்கியது. இடைவேளை வரும் வரைக்கே போதும் போதும் என்றாகிவிட்டது. அதன்பிறகும் படம் சூடுபிடிக்கவில்லை. படத்தைப்பற்றி எழுதும் அளவுக்கு படத்தில் ஏதுமில்லை, அந்த பிரமாண்ட அரங்குகளைத்தவிர... யமலோகம் அரங்க நிர்மாணம் பிரமாதம். அவ்வப்போது சிரிப்பலைகளை எழுப்பியதைத்தவிர படம் பெரிதாக ஏதும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஸ்ரேயா அய்யோ பாவம். படம் முழுக்க வயிறைக் காட்டிக்கொண்டு வரும் அந்த ரம்பையும் (கதாநாயகியாம்) அந்தோ பரிதாபம். நாசர் நிலைமை - நாராயண நாராயண. நகைச்சுவைத்தோரணங்களாக தெரியும் படியான காட்சியமைப்புளும், கடைசிவரை வேகமெடுக்காத திரைக்கதையும் நம்மை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது நேரமிருந்தால் பாருங்கள். இப்போதே பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் நான் சொல்வதற்கு ஒன்று மட்டுமே உள்ளது. முடியல

ஆகவே அடுத்தமுறை வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தையோ, இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 20-20 போட்டியையோ முறையே டிவியிலும், ஹைலைட்ஸிலும் பார்ப்பது இருதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மிக மிக நல்லது.

Friday, February 1, 2008

சபை வணக்கம்...


அனைவருக்கும் இனிய வணக்கம்.


எந்த எதிர்பார்ப்பும் இன்றி தினம் தினம் சிரிப்போடு மலர்கின்ற மலர்களை, எப்படி நாம் ஊன்றி கவனிப்பதில்லையோ அதைப்போலவே நம் எண்ணத்தில் எழும் பல சிந்தனை ஓட்டங்களையும் நாம் உற்றுக் கவனிப்பதில்லை. எழுதத்துவங்கினால் மட்டுமே நமக்கும் எழுத வருமா வராதா என்கிற உண்மை புரியும். நேரமில்லை என்கிற வறட்டு வார்த்தைகளினால் பயனேதுமில்லை. சரி ஒரு கை பார்த்துவிடலாம் - நமக்கு எழுதவந்தால் நல்லது. சரிவர வரவி்ல்லையென்றால் அதுவும் நல்லது - நம்மைப்பற்றிய புரிதலுக்கு உதவுமே.


கல்லூரி காலத்தில் இருந்த ஆர்வம் இப்போது சற்று மட்டுப்பட்டிருப்பது உண்மைதான் எனினும், இப்போது எழுதுகையில் வார்த்தைகள் இன்னும் வலிமையோடு வரும் என்பதில் உறுதியுள்ளது.


ஏதேனும் கருத்து மாறுபாடுகளோ, வாழ்த்துக்களோ, வருத்தங்களோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். அது நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


இன்று முதல் என்னையும் இந்த வலையுலக வட்டத்திற்குள் இணைத்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


உங்கள் இதயங்களில் இடம் கொடுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். (இதில் அரசியல் ஏதுமில்லை!!!)



நம்பிக்கையுடன்,

நித்யகுமாரன்


Follow @ersenthilkumar