Thursday, March 13, 2008

கோபங்களும் ஊசிகளும்...

உன்
நிகழ்வுகளால் உண்டாகும்
கோபக் குமிழ்கள்
உன் நினைவூசிகளால்
சிதறிப்போகின்றன...

Wednesday, March 12, 2008

லௌகீக வலிகள்...


தாய் மற்றும் மனைவியின்
இருத்தலுக்கான
பிரயத்தனங்களினிடையே
கணவனின் இருத்தல்
வெற்றிடம் பார்த்து விரவுகிறது...

Tuesday, March 11, 2008

காலைக் கடன்..!


கதிர் கரங்களால்
சோம்பல் முறித்து
ஆதவன் வர முயலும் பொழுதில்...

விலக மறுக்கும் இமைகளோடு
படுக்கையில் தடவி
உனைத்தேடுகிறேன்...

எனக்குப்பிடித்த நீலநிற புடவையில்
ஈரஞ்சொட்ட தலைதுவட்டி
குறுஞ்சிரிப்போடு நிற்கிறாய்...

“ஜன்னல் அணி்ந்திருக்கிறதே
உனக்கும் எதற்கென்று”
உன் ஆடைதொட நானும்
துள்ளியோட நீயும்
எத்தனிக்கும் பொழுதில்...

தலையிலடித்துக் கொண்டே
கலைந்திருந்த படுக்கை
மீண்டும் கலையத்தயாராகிறது....

நன்றி குறிப்பு : நாடோடி இலக்கியனின் இந்த கவிதையே இதை எழுதத் தூண்டிய காரணி

Saturday, March 8, 2008

வெள்ளித்திரை - திரைப்பார்வை


“மொழி” வெற்றிப்படத்திற்குப் பிறகு, பிரகாஷ் ராஜின் Duet Movies நிறுவனம் Moser baer உடன் இணைந்து தந்திருக்கும் திரைப்படம். படத்தின் தலைப்புப்படி திரைத்துறையைச் சார்ந்து இயங்குகிறது கதை. இன்னும் சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாமோ என்ற கேள்வியுடன் முடிவடைகிறது படம்.

கதாநாயக ஆர்வத்திலிருக்கும் கன்னையாவும் (பிரகாஷ் ராஜ்), இயக்குநர் ஆர்வத்திலிருக்கும் சரவணனும் (பிருத்விராஜ்) நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியாதபடிக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். சரவணனின் கதையைத்திருடி தன் பெயரில் பதிவு செய்து அந்தக்கதையின் மூலம் கதாநாயகனாகிறான் கன்னையா. முன்னணி கதாநாயகி மைதிலியுடன் (கோபிகா) காதல் கொண்டு, அவள் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டவுடன் அவளை கரம்பிடிக்கிறான் சரவணன். உப்புசப்பில்லாத காரணங்காட்டி மைதிலி சரவணனைப்பிரிய, ரோட்டில் அமர்ந்து புலம்பும் சரவணனுக்கு அந்த பழைய தயாரிப்பாளரே வாய்ப்பு (!) தர, கன்னையனை வைத்தே “பிரம்மா” என்றொரு படம் எடுக்கிறான் சரவணன். நாயக அந்தஸ்தில் இருக்கும் கன்னையன், தன் முன்னால் நண்பனுக்கு முடிந்த அளவு டார்ச்சர் கொடுத்து கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கமுடியாதென அடம்பிடித்து கிளம்ப, சரவணன் இயல்பாக நடக்கும்படியாகவே கன்னையன் செயல்படுவதை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடித்து படத்தை முடித்து வெளியிடுகிறான். கன்னையா திருந்த, சரவணன் மைதிலி சேர படம் சுபம்.

மிக ஆர்வமாக படம் பார்க்கப்போன நம்மை நடுமண்டையில் நச்சென அடித்து உட்கார வைக்கிறார்கள். திரைத்துறையைச் சுற்றிச்சுழலும் கதையில் சுவாரஸ்யம், நாம் எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவுதான். பிரகாஷ்ராஜ் தன் பாத்திரத்தில் சிறப்பாக பொருந்துகிறார். 80% சோகம் பூசிக்கொண்டே வரும் கதாபாத்திரத்தில் வரும் பிருத்விராஜ், படம் முழுக்க சந்தோஷமாகவே காணப்படவில்லை. கோபிகா நிலை இன்னும் பாவம். அழுகிறார், அழுகிறார் அழுது கொண்டேயிருக்கிறார்.

கன்னையாவின் பாத்திரம் முற்றிலும் வில்லத்தனமாக அமைந்து தன் குணாதிசியத்தை இறுதியில் இழந்து நம் மனதில் பதிய மறுக்கிறது. ஆரம்பத்தில் மைதிலி மீது மையல் கொண்டு மகிழும் கன்னையா பிறகு பெரிய நட்சத்திரமானபின் மைதிலியின் அண்ணனிடம் அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். இதற்கிடையில் மைதிலி சரவணனிடம் திருமணமாகி தற்காலிகமாக விலகி இருக்கிறாள். அந்த அண்ணனும் எந்த வில்லத்தனமும் செய்யாமல் அவ்வப்போது வந்து மைதிலியை அடிப்பதோடு சரி. ரொம்ப கேட்டால் நமக்கும் நாலு அறை விழும்போல இருக்கிறது.

மைதிலியும் சரவணனும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவாவது இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. மைதிலி சரவணனைப் பிரிவதும் பின்பு இணைவதும், அந்த நிகழ்வுகளை சரவணன் எடுத்துக்கொள்ளும் விதமும் நம் சிற்றறிவிற்கு பொருந்தும்படி இல்லை.

சரத்பாபு, எம்.எஸ். பாஸ்கர், சார்லி போன்றோர் சிறு பாத்திரங்களில் வந்து நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அவ்வப்போது வந்து ஸ்பீட்பிரேக்கர் போடும் பாடல்கள் மட்டும் நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகின்றன (சற்று வெளியே செல்லலாமில்லையா...!). ஒரேயொரு சோகப் பாடலைத்தவிர்த்து மற்ற பாடல்களில் சுவாரஸ்யமில்லை. பின்னணி இசை சத்தம் அதிகம்.

இயக்குனராக முதல் படம் செய்யவந்திருக்கும் விஜியின் உழைப்பு இறுதிக்காட்சியில் தெரிகிறது. இறுதிக்காட்சிக்கான திரைக்கதையும் திட்டமிடல்களும் நன்று. வேறொரு கதையை அவர் தேர்வு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியில்லை.

செலவு செய்ய நிறைய நேரமும் பணமும் வைத்திருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். என்னைக் கேட்டால் வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்...!
Follow @ersenthilkumar