Sunday, November 23, 2008

100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,

வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.

பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.

நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.

அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.

உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...

அன்புடன் நித்யகுமாரன்

4 comments:

  1. /
    நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு.
    /

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  2. //நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.//

    நன்றி நித்யா என்னை பெருமை படுத்தி ஊக்கபடுத்தியதற்க்கு

    ReplyDelete
  3. அன்பின் நண்பா,
    ஒவ்வொரு பதிவிற்கும் ஏன் இவ்வளவு இடைவெளி,வேலை பளு மற்ற சொந்த காரணங்கள் எதுவாய் இருப்பினும் மாதமிருமுறையாவது எழுதுங்கள்.உங்களின் எழுத்தின் சுவையறிந்ததால் இந்த வேண்டுகோள்,இதை கொஞ்சம் பரிசீலியுங்கள்.

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar