Friday, June 10, 2011

ஆரண்ய காண்டம்



ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம்.  எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டிருந்தார்கள்.  The film deserve all those.

ஒரு Gangster கதைதான்.  முதல் காட்சியில் ஆரம்பித்து திசைக்கு ஒன்றாக கிளைத்து விரியும் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கட்டிப் போடுகிறது.  ஓர் இயக்குநர் ஒரு திரைப்படத்திற்காக மெனக்கெடும் அளவிற்கு இந்த படம் அற்புதமான உதாரணம்.   எந்த ஒரு கதாபாத்திரமும் எங்கும் overact செய்யவில்லை.  குறிப்பாக அந்த சிறுவனின் பாத்திரம் வெகு இயல்பு. அவன் dialogue delivery is Excellent.  திரையில் கைதட்டல் வாங்குவதும் அவனது வசனங்கள்தான்.

ஜாக்கி ஷெராப் எந்தளவிற்கு இப்படத்திற்கு தேவையென்ற எண்ணம் எனக்கிருந்தது.  ஆயினும் முதல் மரியாதை சிவாஜியைப் போல இந்த பாத்திரத்தை அவர் தனக்காக வரித்துக் கொண்டு திரையில் கலக்கியிருக்கும் விதம் தமிழ் திரையில் காணக் கிடைக்காத அருகி வரும் விஷயம்.  “ஈஈஈஈ” என அவர் பல்லிளிக்கும் mannerism தனித்துவமாக வருகிறது.

சிறுவனுக்கும் அவன் தந்தைக்குமான உணர்வு பரிமாற்றம் மற்றும் உறவு புரிதல்களை இவ்வளவு குறைவான காட்சிகளில் அவ்வளவு solid ஆக சொல்லப்பட்டிருப்பது அற்புதம்.  அவன் தந்தையின் குரல் quite unique.  உங்களால் அவரது குரலின் தனித்தன்மையை கேட்ட உடனே உணர முடியும்.  உடைந்து வழியும் அந்த குரல் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப் போகிறது.

7G யில் பார்த்த ரவிகிருஷ்ணா அப்படியேயிருக்கிறார்.  இந்த பாத்திரத்தை ஒத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது அவருக்கு நல்லது.  ஹீரோவாகத்தான் வேஷம் கட்டுவேன் என படுத்தாமல் இப்படிப்பட்ட பாத்திரங்களை தேடித் தேடி நடித்தால் அவருக்கான இன்னொரு 7G அமையும் வரையில் நீடித்திருக்கலாம்.

சம்பத் ராஜ் அந்த பாத்திரத்திற்கு கனகச்சிதம்.  சிறுவனுடன் வரும் அவருடைய உரையாடல் சூப்பர்.

ஆரம்பத்தில் வரும் ஆண்ட்டி உஷார் பண்ணுவது பற்றிய விவரணைகள் படத்தின் தன்மையை பார்வையாளனுக்கு உணர்த்தி விடுகின்றன.  இது பவுடர் பூசி பொட்டு வைத்து அலங்கரித்து வரும் மேலோட்டமான படமல்லவென்று.  கடைசியில் அந்தப் பெண்ணின் மனக்குரலாய் வரும் “எனக்கு இந்த சப்பையும்  ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்” என்ற வசனம் இந்த survival of the fittest society யின் ஒரு பரிமாணத்தின் ஒரு துண்டுப் பார்வை.

படத்தின் இசை யுவன். உலகத்தர படத்திற்கு அந்த தரத்திலேயே இசை. Class.

நிறைய காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் ரசனைக்கு சான்று. ரவிகிருஷ்ணா அந்தப் பெண்ணுடன் சுற்றி வரும் Water tank இடமும், நகரும் கேமரா கோணமும் ஒரு உதாரணம்.

எழுதினால் நிறைய எழுதலாம்.  திரையில் பாருங்கள்.




இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் சரண் அவர்களுக்கும் மரியாதை கலந்த நன்றிகள்.

மக்கள் இப்படத்தை கொண்டாடினால் மேலும் நல்ல படங்கள் வரும்.

அண்ணன் உண்மைத் தமிழனும், தண்டோராஜியும் கேட்டுக் கொண்டதால் எழுதினேன்.  ரொம்ப மாசம் gap விட்டாச்சு.




  

Monday, January 31, 2011

எஸ்ராவுடன் ஓர் உரையாடல்

நீல ஜீன்ஸில் எஸ்ராவும் நானும்
சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் எஸ்ரா அவர்களின் “உப பாண்டவம்” நாவலை வாங்கினேன். அந்த நாவலை அணுகும் முறைமை பற்றி யாரேனும் நண்பர்களிடம் விவாதிக்க எண்ணியிருந்தேன். அதற்கான வாய்ப்பு அமைய வில்லை. ஆனால் அதை நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமே கேட்டுத் தெளிவேன் என்று எண்ணவில்லை.

அது ஒரு மிக மகிழ்ச்சியான இரவு. அரை மணிநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மிகவும் பயனுடையதாயிருந்தது.

வம்சி பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (29.01.11 - சனிக்கிழமை) பிரசாத் லேபில் நடைபெற்றது. பாலுமகேந்திரா அவர்களின் “கதை நேரம் பாகம் - 2” புத்தகத்தை எஸ்ரா வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொ்ணடார். மிஷ்கின் மொழியாக்கம் (transcreation - நன்றி: பிரபஞ்சன்) செய்த 100 ஹைக்கூ கவிதைகள் அடங்கிய “நத்தை போன பாதையில்” என்கிற புத்தகத்தை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட 10 ஒளிப்பதிவாளர்கள் பெற்றுக் கொண்டனர்.


**************************

இந்த விழா இரண்டு அமர்வாக நடந்தது. முதல் அமர்வில் தான் எஸ்ரா அவர்கள் உரையாற்றினார்.

அவருடைய உரைதான் இந்த அமர்வின் ஹைலைட் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது. 52 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்து அவற்றுக்குப் பொருத்தமான திரைக்கதையாக்கம் செய்து குறும்படமாக வெளியிட்ட பாலுமகேந்திராவின் பங்கு தேசிய அளவில் வேறெந்த மொழியிலும் எந்த கலைஞனாலும் செய்யப்பட்டிராத ஒரு நிகழ்வு என எஸ்ரா சுட்டினார்.

இந்த ஒரு விஷயத்திற்காகவே தமிழ் எழுத்தாளர் குலாம் பாலுமகேந்திராவுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆறு கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குறும்படங்களாக பரிணமித்த விதத்தை script ஆக ஒரு புத்தகமாகவும், ஒரு cd யில் அந்த குறும்படங்களையும் இணைத்து வெளியிட்டவிதம் வெகு சிறப்பு. திரைத்துறை நண்பர்களுக்கு இது ஒரு சிறந்த பாடப்புத்தகமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தான் பேசுகின்ற மையக் கருத்தை ஒத்து தன்னுடைய அனுபவங்களை சரியான விகிதத்தில் இணைக்கும் கலை எஸ்ராவிற்கு அற்புதமாக கைவரப் பெற்றிருக்கிறது. மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு மேடையில் எஸ்ராவைப் பற்றி சொல்கையில் “அவரிடம் பேசுவதற்கு எப்போதுமே புதிய புதிய விஷயங்கள் இருக்கின்றன” என்றார். அது எவ்வளவு உண்மை என்பதை அவரை பின்தொடரும் வாசகன் நன்கறிவான்.

Tokyo Story என்கிற திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்ததும் அப்படித்தான். அந்த படத்தின் காட்சியமைப்புகளை அப்படியே நம் மனக் கண்ணில் பேச்சின் வழியாக மட்டுமே பதிய வைக்கும் திறன் அபாரம்.

தங்களின் வயோதிகத்தில் டோக்கியோவில் இருக்கும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு செல்ல முடிவெடுக்கின்றனர் ஒரு தம்பதியினர். அந்த பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவர்களை அங்குமிங்குமாக பந்தாட ஒரு பெண்ணின் வீட்டில் அம்மாவை மட்டும் வைத்துக் கொண்டு அப்பாவை வேறிடத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். எப்போதும் குடையோடு பயணிக்கும் அவர் மறதியில் விட்டு வந்த குடையை எடுத்துக் கொண்டு வரும் தன் மனையியிடம் அவர் சொல்கிறார் “ எப்போதும் ஒன்றாக இருந்த நம்மை வந்த அன்றே இவர்கள் பிரித்து விட்டார்கள்”.

தன் மனைவி இல்லாமல்தான் தான் உயிரோடு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பதை எண்ணுகிறார் அவர். ஆனால் அவரின் மனைவி இறந்து போக, அப்போதும் துணைக்கு வராத தன் பிள்ளைகளை எண்ணி வருந்தி தன் ஊருக்கு திரும்புகிறார் அவர்.

அவரிடம் ஒருவர் ஒரு ட்ரெயினை சுட்டிக் காட்டி, “அது டோக்கியோவிற்குத்தானே செல்கிறது. நீங்கள் அங்கு திரும்ப செல்வீர்களா?” என்று கேட்க “நான் ஒருமுறை டோக்கியோ சென்று என் மனைவியையே இழந்து விட்டேன். திரும்ப செல்வேனா...?” எனக் கேட்கிறார். அந்த ட்ரெயின் தடதடத்துப் பயணிக்கிறது. அந்த காட்சியில் ஓடுகின்ற ட்ரெயின் நம் மனதில் வெகுவாக பதிகிறது.

பாலுமகேந்திரா ஆண் பெண் உறவுச் சிக்கல்களையே அதிநுணுக்கமாக பதிவு செய்திருப்பதைச் சொன்ன எஸ்ரா, செக்காவின் திருமண வாழ்வு பற்றி நம்மிடையே பகிர்கிறார்.

செக்காவ் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள போடும் நிபந்தனை ஆச்சரியமானது. “திருமணத்திற்குப் பிறகு, நீ உன் ஊரிலேயே இரு, நான் இங்கேயே இருக்கிறேன். வாரம் ஒருமுறை நாம் சந்திக்கலாம். நீ இங்கு வரும் நாளுக்காக நான் இன்றிருக்கும் அதே காதலோடே காத்திருப்பேன். அதே போலே நீயும் காத்திருக்கலாம்.  நாம் என்றும் காதலர்களாகவே இருப்போம். நம் காதலைப் போற்றி வளர்ப்போம்” - இந்த சிந்தனை இந்த வாழ்வுமுறை நமக்கு எந்தளவு இன்றைய சூழலில் ஒத்துவரும் என்பதை விட, அந்த வாழ்வு சிந்தனை நமக்கு தேவையாயிருக்கிறது.

உடைந்து போகும் இந்த வாழ்வின் உறவுகளை, நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேண்டிய சூழலில் அதன் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் வழிவகைகள் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த ஒரு வாழ்வை நாம் இன்றும் உற்று நோக்கி பார்க்க வேண்டியதன் அவசியத்தை சொல்கிறார் எஸ்ரா.


**************************

விழா முடிந்தபிறகு, வந்தவர்களும் வாகனங்களும் விரைய விரைய மிச்சமீதமிருந்த சொச்ச நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் எஸ்ரா காணக்கிடைத்தார். அவருடைய openness நேரில் கண்டு மகிழ வேண்டிய ஒன்று.

நான் உங்களின் எளிய வாசகன் என அறிமுகப்படுத்திக் கொண்டு உப பாண்டவம் வாசிக்க வேண்டிய மனோநிலை பற்றி கேட்டேன். அப்படியே நிகழ்ந்த அந்த உரையாடல் அரை மணிநேரம் வரை நீண்டது பேருவகை தந்தது.


தமிழில் டிவியில் நாமெல்லாம் கண்டு ரசித்த மகாபாரதம் மூல புத்தகத்திற்கு justify செய்திருப்பதாகச் சொல்கிறார். ஆங்கிலத்தில் மகாபாரதம் படிக்க சரியான author, Ganguly என்பது அவர் கருத்து.

“உப பாண்டவம் எழுதப் பட வேண்டியதன் அவசியம்தான் என்ன?” என்ற என்னுடைய அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விக்கும் பொறுமையாக பதிலுரைத்தார் எஸ்ரா. 

“ மகாபாரதம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். காஷ்மீரில் இருக்கும் ஒருவனுக்கும் கன்னியாகுமரியில் உள்ள ஒருவனுக்கும் தெரிந்த கதை மகாபாரதம். அப்படிப்பட்ட தேசிய அடையாளத்தை எழுதிப் பார்க்க நான் ஆசைப் பட்டேன். நான்கு ஆண்டுகள் மிகப் பெரிய கடின உழைப்பை அதற்காகத் தரவேண்டியிருந்தது. இன்று தேசிய அளவில் பாண்டவம் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகையில்,  10 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 5 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 3 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும் “உப பாண்டவம்” உள்ளது. விரைவில் Penguin பதிப்பகத்தில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. மலையாளத்திலும் அது வெளிவர உள்ளது.” - என குறிப்பிட்டார்.


கௌரவர்கள் 100 பேருக்கு ஒரு தங்கை இருப்பது பற்றி சொல்கிறார்.  நமக்கு பரவலாகத் தெரியாத பல விஷயங்கள் மகாபாரதத்தில் உள்ளது.  “அம்மாவை விட வயதான மகன்” என்கிற ஒரு weird logic கொண்டு தேடினாலும் மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கிடைக்கிறது என்கிறார்.

திரைப்படங்கள் பக்கம் பேச்சு திரும்பியது. “திரைப்படம் எழுத்து என இரு துறைகளிலும் தனிப்பட்டு பயணிக்க, இரு துறைகளிலும் நிகழும் அனைத்து விஷயங்களைப் பற்றிய தெளிவோடு இருக்க வேண்டிதன் அவசியம் புரிகிறது. எப்படி அதற்கு உங்களை தயார்ப் படுத்துகிறீர்கள் ? ” என வினவினேன். தான் ஒரு தீவிரமான திரைப்பட ரசிகனாக இருப்பது ஒரு முக்கிய காரணம் என்றார். ஆனாலும் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டியதன் வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

“திரைப்படத்தை ஒரு தொழில்நுட்பமாக பார்க்கும் நிலையில் இருக்கும் நீங்கள், திரையில் பார்த்து மகிழும் ஒரு ரசிகனின் மனோநிலையை இழந்து விட்டீர்களா?” - என்ற என் கேள்வியை சிரிப்போடு ஒத்துக் கொள்கிறார்.

“அடுத்த ஷாட் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது?  எங்கு வசனம் தேவையாயிருக்கிறது?  எங்கு தேவையில்லாமல் வசனம் எழுதப்பட்டிருக்கிறது?” - இப்படி பல தகவல்களை தான் மனக்குறிப்பில் பதிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வந்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.  100 அடி ஷாட்டுக்கு எவ்வளவு நீள வசனம் தேவை என்பதை தான் இப்போது வெகுவாக உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.

இப்படியாக அவருடன் பேசிய தருணங்கள் மிகவும் இனியவையாக மனதில் பதிகின்றன.  நண்பர் ஜாக்கிசேகர் மற்றும் உண்மைத்தமிழன் உடன் இருந்து சுவாரஸ்யப்படுத்தினர்.

எஸ்ரா அவர்களுக்கு மிக்க நன்றி.

Thursday, January 27, 2011

சாருவின் போத்தல்கள்...


இந்தியாவின் ஒரே Auto Fiction எழுத்தாளர் சாருவின் சரக்கு போத்தல்கள் காலியாகி விட்டன. ஆட்டோ ஓட்டிக்கொண்டே fiction எழுதும் திறன் இந்திய துணைக்கண்டத்தில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது இங்கு நாம் கட்டாயம் குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம்.

சமீபத்திய அவருடைய எழுத்துக்களை வாசிக்கையில் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிவது அவருடைய சரக்கு போத்தல்கள் காலியான விஷயம்தான். லெதர் பாரில் இதை நிரப்பிக் கொள்ள இயலாது.

சமீபத்தில் என் நண்பர் ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதினார்...

ப்ளாட்பாரத்தில்
ஸ்கேல் பென்சில்
விற்பவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் யாருக்கும்
குப்பி கொடுப்பதில்லை
விந்து விற்பதில்லை
கொடுமையாய் எழுதுவதில்லை

அவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் அப்படியே
இருந்து விட்டு்ப் போகட்டும்
ஏதேனும் வாங்குங்கள்

இது ஒரு “பின்” நவீனத்துவக்கவிதை என்பதை சாருவை வாசித்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதனை ஒரு கௌரவமாக வரையறுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

என் நண்பர் ஜாக்கிசேகர் மெரீனா பீச் ப்ளாட்பாரத்தில் ப்ரிடடானியா மில்க் பிகீஸ் அட்டையில் உறங்கிதான் வாழ்க்கையின் இருபதுகளை நகர்த்தினார். அவர் பார்க்காத வேலையில்லை. ஆயினும் குப்பி கொடுக்கவோ கூட்டிக் கொடுக்கவோ அவர் போகவில்லை. அவர் இன்று அவருடைய சொந்த வீட்டில் வாழ்கிறார்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனும் படும் வாழ்க்கைப் போராட்டம் எப்படிப்பட்டது? அவர்களெல்லாம் குப்பி கொடுக்க நினைத்தால் என்னவாகும்? ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையாக புட்டங்களை காட்டியபடி நிறைய பேரை நிற்க வைக்கலாம். அதை புகைப்படம் எடுக்க நண்பர் ஜாக்கியையே அழைக்கலாம். அதைப்பற்றிய கட்டுரையை சுடச்சுட எழுதும் முதல் எழுத்தாளர் சாருவாகத்தான் இருப்பார்.

இரத்த வங்கியில் இரத்தம் கொடுத்து வாழ்ந்தவர்கள் பற்றிய வரலாற்றைக் கூட நாம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் விந்து வங்கியில் விந்து கொடுத்து வாழ்க்கையை நடத்தியது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. வாழ்வின் போக்கு அப்படி...

******

சாருவின் பத்து புத்தகங்களை 1000 ரூபாய்க்கு சல்லிசான விலையில் வெளியிட்ட அன்றே வாங்கியவன் நான். ஆனால் சமீபத்தில் சரோஜாதேவி வெளியீட்டில் தேகம் மட்டும்தான் வாங்கினேன். திரு. எஸ். ராமகிருஷ்ணனி்ன் அன்றைய உரை வெகுவாக பலரைக் கவர்ந்தது. அவர் வாதையைப் பற்றி பேசினார். தேகம் போன்ற ஒரு நாவலை நான் எழுத மாட்டேன். ஆனால் அது எழுதப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு கருத்தை மட்டுமே அவர் தேகம் சார்ந்து சொன்னார்.

அப்படி தேகம் எழுதப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அதை வாங்கினேன். அதற்கு முன்பாக சாருவை வலையிலே வாசித்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன். தேகத்தை வாசிப்பதே ஒரு வாதை என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். டவுசர் கிழிந்து தாவு தீர்கிறது என்ற நண்பர் லக்கியின் பிரபல சொலவடையை நான் இங்கு பயன்படுத்த விரும்புகிறேன்.

******

இயக்குனர் மிஷ்கின் அவர்களை சாருவுடனான மேடைகளில் கண்டிருக்கிறேன். அந்த மேடைகளில் பேசுகையில் மட்டும் தான் தன்னால் மனம் விட்டு பல உண்மைகளைப் பேச முடிகின்றதென்று அவர் அந்த மேடைகளிலேயே சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் ஒருமுறை அவர் நந்தலாலா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஒரு மேடையில் முழுக்க முழுக்க நந்தலாலா பற்றித்தான் பேசினார். சாருவின் புத்தகத்தைப் பற்றி பேசவே இல்லை. அப்போதெல்லாம் சாருவிற்கு மிஷ்கினின் மேல் கோபம் வரவில்லை.

சமீபத்திய கன்னடத்துப் பைங்கிளி பேச்சின் போதுதான் அவருக்கு தீராக் கோபம் தலைக்கேறிவிட்டது. “என்னுடைய எழுத்தை படிக்காமலேயே, நீ மலிவான மஞ்சள் புத்தகங்களுக்கு ஈடானதாக சொல்லிவிட்டாய். நான் உன்னைத் தவிர்க்கிறேன். இனி உன் பேச்சு கா.” - என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் அது வேறு.

ஆனால் சாரு பக்கம் பக்கமாக அத்தியாயம் அத்தியாயமாக மிஷ்கினை திட்ட ஆரம்பித்தார். “என்னைச் சொல்கிறாயே... நீ ரொம்ப ஒழுக்கமா? ரெமி மார்ட்டின் இரவுகளில் நீ பகிர்ந்ததை எல்லாம் நான் சொல்லவா...? அப்படிச் சொன்னால் உன்னை தமிழ்நாட்டிலேயே இருக்க விட மாட்டார்கள். நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா?” - என்று மானிட்டர் (வார்த்தை உதவி தலைவர் தண்டோரா அவர்கள்) அடித்ததைப் போல் புலம்பி வசை பாட ஆரம்பித்தார்.

இந்த துரோகக் கட்டுரைகளின் தொகுப்பு “நண்பனின் துரோகம்” என புத்தகமாக உயிர்மையிலிருந்து வந்து விடுமோ என துர்க்கனவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனுஷ்ய புத்திரன் அந்தளவு இறங்க மாட்டார் என நம்புகிறேன்.

இதே போன்றதொரு பிணக்கு எஸ்ரா, ஜெமோ போன்றவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் ஓரிரண்டு வருத்தப் பதிவுகளோடு அடுத்த கட்டங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அவர்கள் உருப்படியாகச் செய்வதற்கு வேறு பல விஷயங்கள் உள்ளன.

குறுக்குச் சாலில் என்ன ஓட்டுகிறார் என்று பார்த்தால் அங்கும் மிஷ்கினின் படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடப்போங்கப்பா என்றாகிவிட்டது.

மிஷ்கின் மேல் எனக்கு ஒரு தனிப்பட்ட வருத்தம் வேறு இருக்கிறது. தேகத்தை சரோஜாதேவிக்கு இணையாக இருக்கிறது என்று சொன்னார். அப்படிச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து. சரோஜாதேவி வாசிக்கும் போது கிடைக்கும் எந்த ஒரு மன எழுச்சியும் உடல் சார்ந்த எழுச்சியும் தேகத்தால் கிடைப்பதில்லை. “பின்ன எதை வச்சிக்கிட்டு இந்த மூஞ்சியை சிவாஜின்னும் அந்த மூஞ்சியை பத்மினின்னும் சொன்ன...?” என்று கவுண்டமணி சார் கேட்பதுபோல் கேட்கத் தோன்றுகிறது.

மிஷ்கினும், எஸ்ராவும் சொன்னதால்தான் தேகம் வாங்கினேன். வதைபடுகிறேன். இப்போது ஒத்துக் கொள்கிறேன் தேகம் வாதையைப் பற்றியதுதான் என்று.

சமீபத்திய விஜய் டிவி நிகழ்ச்சியில் மிஷ்கின் அவர்கள் சாருவின் அவதூறு கட்டுரைகளுக்கு, கோர்ட் டவாலி போன்று இவ்வாறு பதிலளித்தார் : “ சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்...”.

யுத்தம் செய் படத்திற்கு படம் வருவதற்கு முன்பாக சாரு விமர்சனம் ஏதும் எழுதாததால் அந்தப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மிஷ்கின் தன் நண்பர்களிடம் சரக்கு இல்லாமலேயே பேசிக் கொண்டதாக கோடம்பாக்கத்து பட்சி சொல்கிறது.

சாரு யுத்தம் செய் பற்றி எதுவும் எழுதாததால் தான் மிஷ்கின் அவரை தன் நண்பர் என்று சொல்லிக் கொண்டிருப்பதாக நாம் கருதுவதற்கும் இடமிருக்கிறது.


******

பெரியவர் சாருவிற்கு (மிஷ்கினும் சசிகுமாரும் தன் மகன் ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்று அவரே சொல்கிறார்) Auto fiction ஒன்று மட்டுமே வரும். கூடுதலாக பத்தி எழுதுவார். புனைவெழுத்துக்கள் அவருக்கு வருவதில்லை. அது ஒன்றும் தவறில்லை. ஒவ்வொருவருக்குமான பலம் மற்றும் பலவீனங்கள் வேறு வேறானவை.

இனியும் நாம் சாருவை வாசிக்க வேண்டுமானால் அவர் Auto ஓட்டுவதற்கு தேவையான விஷயங்களை புதிதாக வாழ்ந்து விட்டு வந்து பிறகு ஓட்ட ஆரம்பிக்கலாம்.

அது வரை அவர் மூடிக் கொண்டிருக்கலாம்................. தன் பேனாவை.



Sunday, January 23, 2011

ஜெயமோகனின் உலோகம்



சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவலை உடுமலையில் வாங்கினேன்.

பத்து வருடங்களுக்கு முன் பாலகுமாரன் நாவல்கள் வாசித்தபோது கிடைத்த மனவெழுச்சி உண்டானது. போகிற போக்கில் பொட்டிலத்தாற் போல் வாழ்வின் தேவைக்கான பல்வேறு கூறுகளையும் நுட்பமான உடல்மொழி குறிப்புகளையும் அனாயசமாக எழுதிச் செல்கிறார் ஜெமோ.

சாகச எழுத்து வடிவில் இது ஒரு புது விதமான எழுத்து. ஜெயமோகனால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என எண்ணுகிறேன்.

சார்லஸ் என்கிற சாந்தனின் வாழ்க்கை, அவன் பிறந்த தேசம் அவன் வரித்துக் கொண்ட வாழ்வுமுறை எனஅதன் தளம் அற்புத சித்தரிப்பு. கொள்ளை போன பக்கத்து வீட்டை குறுகுறுப் பார்வையுடன் பார்ப்பது போல இலங்கை நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு அந்த களத்தின் நிதர்சனங்களையும் அவர்களின் உலகப் பார்வை மற்றும் வாழ்வு குறித்தான பார்வைகளையும் கோடிட்டுக் காட்டி ரத்தமும் சதையுமான அந்த உலகை நமக்கு இந்த 216 பக்க நாவலில் அறிமுகப் படுத்துகிறார் ஜெமோ.

கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை விவரிக்கும் போது கதையோட்டத்தில் பயணிக்கும் ஒரு வாசகனுக்கும் அந்த இடம் பொருள் குறித்தான அறச் சிக்கலைத் தோற்றுவிக்கும் விவரணைகள் அற்புதம்.

சுடிதார் துப்பட்டாவின் நுனித்துணியின் தழுவல் சுகத்தையே மாதக்கணக்கில் மனமெங்கும் சுமந்து சுகந்து கொண்டிருக்கும் ஒருவனும், எதிராளியை பாய்ண்ட் பிளாங்கில் சுட்டுத்தள்ளி எந்த மனக்கிலேசம் கொள்ளாமல் கடந்து போகும் ஒருவனும், ஒருவனேயாகும் அதிசயம் இந்த நாவலில் நடக்கிறது. வாழ்க்கை நம்மை எப்படியெல்லாம் அலைக்கழித்து அதன் போக்கினை நம்மிடம் போக்குக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வாசகனுக்கும், அவனது வாழ்வனுபவத்தைப் பொறுத்து அந்த கதையோட்டத்தின் களத்தை மனப் பிம்பமாக கட்டமைக்கிறது. உதாரணமாக இந்த நாவலில் வரும் பொன்னம்பலத்தாரின் வீட்டு காம்பௌண்ட் எனக்கு ஒரு விதமாக மனதில் பதியும் மற்றொருவருக்கு வேறு விதமாக பதியும். ஜோர்ஜ் மனைவியின் நிர்வாணமும் அப்படித்தான்.

நாவலின் குன்றாத சுவைக்குக் காரணமான காரணிகள் எல்லாம் இந்த கட்டமைப்புக் களத்தைப் பொறுத்தே அமைகின்றதாக எண்ணுகிறேன்.

ரத்தம் தெறிக்கும் வீச்சையும் அந்த வீச்சத்தையும் என் நாசி உணர்வதை உணர முடிகிறது.

ஜோர்ஜின் மனைவியுடன் சார்லஸ் கலவி முடிந்தபின், அவள் படுத்திருக்கும் காட்சிப்படிமம் இன்னும் மனதில் நிற்கிறது.

மற்றபடி இந்த நாவல் கட்டமைக்கும் அரசியல் சார்ந்த பின்புலன்கள் ஜெமோவே சொல்வதைப் போல விரிவானவை அல்ல. இந்த நாவலின் நோக்கமும் அதுவல்ல எனினும் அவை சற்று அதிர்ச்சி தரக்கூடியவையே.

உலோகம் என்ற தலைப்பிற்கான காரணத்தை முதல் அத்தியாயத்திலேயே ஜெமோ சொல்லும் விதம் அழகு. அது ஜெயமோகன் அவர்களின் திறன்.

புத்தக அட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த கதையின் களம் நாம் நெருங்கி சுவாசிக்க முடியும் அருகாமையில் அமைந்திருப்பது வாசிப்பு அனுபவத்தில் புதிய தளத்தை அமைக்கிறது.

சார்லஸின் குண்டடிபட்ட காயத்தை வருடிக்கொடுக்கும் எண்ணம் வருவது இந்த உலோகத்தின் வெற்றி.

கிழக்கு பதிப்பக வெளியீடு

GenreNovel
Book Titleஉலோகம்
Pages216
FormatPrinted
Year Published2010
Price:Rs 100.00

Friday, November 26, 2010

நந்தலாலா - மிஷ்கினின் கரங்களுக்கு முத்தமிட விரும்புகிறேன்...!

தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.

மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.




பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.




மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. நம் கதாநாயகர்களின் இமேஜ் வளையத்திற்குள் இந்த பாஸ்கர் நிச்சயம் பொருந்த மாட்டான். மிஷ்கினின் அசாத்தியமான உடல்மொழி அவரது கதாபாத்திரத்தை அற்புதமாக தாங்கி நிற்கிறது. முடிந்த போது அடிப்பதும் முடியாத போது அடிவாங்கி கதறுவதுமாக அந்த பாத்திரம் இயல்பாக செதுக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரின் மனப் பிறழ்வின் நீள அகலங்கள் காட்சியைப் பொறுத்து பதமாக வெளிப்படுகிறது. “மென்டல்என அவரை திட்டியவனை புரட்டியெடுக்கும் காட்சியாகட்டும், “போடா மென்டல்என அகியே அவனை திட்டும் போது ஆற்றாமையில் அரற்றும் அந்த நடிப்பாகட்டும், கீழே விழுந்த தாவணிப்பெண்ணின் முட்டிக் காயத்தை எச்சில் தொட்டு ஆற்றும் போது, அறை வாங்கிக்கொண்டே “வலிக்குதா..?எனக் கேட்பதாகட்டும், “மழையில நனைஞ்சா எல்லா நாத்தமும் போயிடும்என ஸ்நிக்தாவை இழுத்து மழையில் நனைப்பதாகட்டும், திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் (ரோகிணி) நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுவதாகட்டும், தான் அடிவாங்கும் போது பைக்கில் வந்து சேரும் மிலிட்டரி இரட்டையர்களை பார்த்து மகிழ்ந்து அவர்களிடம் ஓடிச்சென்று தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு (ஒரு கையால் பேண்ட்டை பிடித்துக் கொண்டே) “எங்காளு வந்துட்டான் பாரு, இப்ப என்ன பண்ணுவஎன்கிற ரீதியில் முதுகுப் பக்கமாக மட்டுமே உடல் மொழியில் பின்னுவதாகட்டும் – மனிதர் படம் முழுக்க வாழ்கிறார். தேசிய விருது தராவிட்டால் அது மிஷ்கினுக்கு இழப்பல்ல. இப்படி நான் எழுதுவது நிச்சயமாக மிகையில்லை.


அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

இளையராஜா படத்தின் மிகப்பெரிய பலம். அமைதிகாக்க வேண்டிய இடத்தில் அமைதிகாத்து ஆர்ப்பரிக்கும் இடத்தில் கொப்பளித்து வெளிவரும் ஆவேசப் புயலாகவும், தென்றலென தாலாட்ட வேண்டிய பொழுதில் மயிலிறகாய் வருடவும் செய்யும் பிண்னணி இசை தமிழனுக்கே பெருமை. அகிலின் அம்மா பாஸ்கரின் காலைப் பிடித்து கதறும் காட்சியில் வரும் பிண்னணி இசை ஒரு சோறு.

படத்தின் முதல் பிரேமிலேயே இது என்ன மாதிரியான படம் என்பதை மிஷ்கின் தெளிவு படுத்தி விடுகிறார். படத்தின் கேமரா கோணங்கள் நாம் படத்தை அணுக வேண்டிய விதத்தை சொல்லாமல் சொல்கின்றன. அகலமான கேமரா கோணங்களில் தூர வரும் உருவம், பிண்னணி இசையில்லாமல் வரும் வேளைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. Children of Heaven ல் பார்த்த அக்கா தம்பி கதாபாத்திரங்கள் போல இவ்விரண்டு கதாபாத்திரங்களும் நம்மை கொள்ளை கொள்கின்றன.

ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.

லாரி டிரைவர், சைக்கிள் தாவணிப்பெண், பைக் இளைஞர்கள், தேனிலவு தம்பதியர், கால் ஊனமுற்ற நபர், காரில் வரும் பீர் இளைஞர்கள், அகிலின் வீட்டு வேலைக்காரப் பெண், டிவிஎஸ் பைக்கில் வரும் ஐஸ் வண்டிக்காரர், விபசாரியைத் துரத்தி வரும் தாத்தா தலைமையிலான கோஷ்டி - என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வந்து போகும் காட்சிகள் அனைத்தும் சிறப்பான சிறுகதை வடிவில் அமைந்து அழகூட்டுகின்றன.

தமிழில் இப்படியெல்லாம் ஒரு படம் வருமா என்ற நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கும் மிஷ்கினுக்கு எனது அன்புகள். இந்த திரைக்கதை எழுதிய அவர் கைகளை நான் முத்தமிட விரும்புகிறேன்.

அன்பு நித்யன்.

Monday, August 16, 2010

எண்ணச் சிதறல்கள் – 16.08.10


இனிய நண்பர்களுக்கு வணக்கம்.


ஓசூருக்கு சமீபத்தில் சென்று வந்தேன். தங்கை குடும்பத்தில் வீடு கட்டுகிறார்கள். பெங்களுர் ஹைரோடில் இடது ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் துறை வாசகங்கள் காமெடியாகவே இருந்தன. If you want to stay married, divorce speed என்ற வாசகம் முரண் நகையாக இருந்தது. “கவனமாய்ப் போய் வா ரோட்டில் மனைவி காத்திருப்பாள் வீட்டில் என்ற வாசகத்தை முன்பு கவனித்த ஞாபகம். “இதை இப்பவே ஞாபகப் படுத்தறாங்கப்பா...என்று நண்பர் அங்கலாய்த்ததும் நினைவிற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி.


சென்னைக்கு பேருந்துப் பயணம். ஜன்னலோர இருக்கை. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து. பயணக்கட்டணம் 175 இந்தியப் பணம் மட்டுமே. நிச்சயமாக தனியார் பேருந்தாக இருந்திருந்தால் குறைந்தது 300 இந்தியப் பணம் கறந்திருப்பார்கள். இருக்கை பின்புறம் எளிதாகவே சாய்ந்தது. முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பருவ வயது யுவதி பாதிக்கு மேற்பட்ட நேரம் கைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். குசுகுசுவென்று ஆங்கிலத்தில். அவ்வப்போது shut up மட்டும் கேட்டது. அந்தப் பக்கமிருந்தது யாரோ என்னவோ? அந்தப் பெண்ணின் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். காதலனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காதலியாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதை lateral thinking ஆக எடுத்துக் கொள்ளலாம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஒரு அற்புதமான தமிழ்ச் சொல் பற்றி நாம் பார்க்கலாம். ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்று பத்தாம் வகுப்பில் படித்ததாக நினைவு. ஜன்னல் என்கிற வார்த்தை இன்று நம்மிடையே மிக மிக நெருக்கமாகிவிட்டது. பல மொழி வார்த்தைகளை தன்னிடம் சேர்த்துக் கொண்டதால்தான் ஆங்கிலம் எல்லாவிடங்களிலும் உயிர் வாழ்கிறது என்பது என் எண்ணம்.


ஜன்னல் என்கிற சொல்லுக்கான தமிழ் வார்த்தை காலதர் என்பதாகும். கால் + அதர் = காலதர். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று வரும் வழி, அதுவே காலதர். அதர் என்ற பதம் திருக்குறளில் வெகு அற்புதமான ஒரு குறளில் வருகிறது.


ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உலை.


செல்வமானது(ஆக்கம்) வழிகேட்டுச் செல்லும் அசைவில்லாத

ஊக்கம் இருப்பவனிடத்தில்.


வள்ளுவர் வள்ளுவர்தான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஓ பக்கங்கள் கல்கியில் ஆரம்பமாகிவிட்டது. சமரசம் செய்து கொள்ளாத ஞானியின் பண்பு அற்புதம். தான் குரல் தரும் எந்த ஒரு களத்திலும் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைக்கும் ஞானியிடம் எனக்கு மரியாதை உண்டு. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர்களின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வில் அவா கலந்து கொண்ட போது, “நான் எப்போதும் குமுதத்தில் எழுதிக்கொண்டே இருந்துவிடப் போவதில்லை“ எனப் பேசினார். அந்த நிகழ்ச்சியில்தான் பெயர் சுருக்கிக் கூப்பிடுவதில் சாரு நிவேதிதாவை “சாநி“ என்று சொல்லலாமா? என விளித்து நகைக்க வைத்தார்.


அந்த மேடையில் பெரிதாய் கண்டனம் தெரிவிக்காத சாரு பிற்பாடு எழுதிய கட்டுரையில், தன் வயதொத்த ஞானி குரல் கமறி கமறி பேசுவதாகச் சொல்லி அவரை உடல் ரீதியாக தாக்கினார். மனுஷ்யபுத்திரனின் உடல் குறையை சுட்டிக்காட்டியதாக ஜெயமோகனிடம் மல்லுக்கு நின்றவரும் இவரே. “உன்னைப் போல் ஒருவனில்மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடலைப் பற்றி வியந்தோதுகையில் கந்தசாமியில் எழுதப்பட்ட பாடலை ஆகக் கேவலமாக விமரிசித்தவரும் இவரே. சாருவிடம் நடுநிலைத்தன்மை இல்லை. எனவே நம்பகத்தன்மையும் குறைவே.


எண்ணம்போல் எழுதினால் இதுதான் தொல்லை. ஞானியில் ஆரம்பித்தது சாநியில் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


திருமதி.செல்வம்


அம்மாவும் தம்பியும்

செல்வத்திற்கு துரோகம்

செய்யமாட்டார்கள்


குடித்து விட்டு

செல்வத்தின் அப்பா

ஆட மாட்டார்


கணவன் முன்னாலேயே

காவ்யாவுக்கு ராம்

பாலியல் தொந்தரவு செய்யமாட்டான்.


யாரு புருஷன் என்று

கல்யாணமாகாத கர்ப்பத்தைக்

காட்டி ப்ரியாவை யாரும்

தர்மசங்கடப் படுத்த மாட்டார்கள்


இரண்டு நாள் தப்பித்தோம்

நாமும் அவர்களும்.


சனி ஞாயிறு வந்துவிட்டது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் சந்திப்போம்


அன்பு நித்யன்.

Tuesday, August 10, 2010

எண்ணச் சிதறல்கள் - 10.08.10

ப்ரிய நண்பர்களுக்கு வணக்கம்.


Life is running between pillar and post.



வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக இருந்து விடுவதில்லை. அதனுடைய சுவாரஸ்யமே அதுதான். நம் வாழ்க்கை எனும் நதி நிறைய மாற்றங்களோடு கடலை சென்றடைகிறது. “பொங்கு பல சமயமெனும்...எனத்துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் நினைவிற்கு வருகிறது. அனைத்து மதங்களையும் நதிகளாக உருவகித்து எழுதப்பட்டிருக்கும் அப்பாடல், இறுதியில் நதிகள் எல்லாம் கடலிலே சென்று கலப்பது போல எல்லா மதங்களும் இறைவனையே சென்றடைகின்றன எனச் சொல்கிறது. அதனைப் போல நம் வாழ்க்கையை இறுதியில் கடலை சென்றடையும் நதியோடு ஒப்பிடுகையில் ஒரு நதியின் பயணம் போலவே நம் வாழ்க்கைப் பயணமும் மிகுந்த சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. ஆயினும் நதி கடலைச் சென்றடைவதில் எந்த சிரமமும் கொள்வதில்லை. அதனுடைய தன்மைதான் அதற்கு்க் காரணம். நீர் தனக்கென்று எந்த வடிவத்தையும் கொள்வதில்லை.பாறையோ முள்ளோ எது இடைப்பட்டாலும் இடைப்பட்ட வழியில் அது வழிந்தோடி விடுகிறது. அப்படி நாம் இருக்க முடியுமா?


She stole my heart


சமீபத்தில் இந்தப்பாடல் என்னையும் என் பையனையும் கவர்ந்து வைத்திருக்கிறது. Skyscraper களுக்கிடையே அனுஷ்கா போடும் குத்தாட்டம் 10 வினாடிகளே வந்தாலும் கலக்கலாக உள்ளது. சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அனுஷ்கா இன்னும் அழுத்தமாய் தன் அடையாளத்தைத் தமிழில் பதிவு செய்யலாம்.


Its Fun and fun only.


சமீபத்தில் நண்பரின் 5 வயது பெண்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். பிரமாண்ட கேக், உள் அலங்காரங்களை விடவும் மிகவும் பிடித்ததாக அமைந்தது, அங்கு வந்து அலும்பு செய்து கொண்டிருந்த குட்டிக் குழந்தைகள்தான். கிழிந்து கிடக்கும் முகமூடிகளும், உடையும் பலூன் சப்தங்களும், வீலென்று அழுகைகளும்,சின்ன விஷயங்களுக்கே அவர்கள் சந்தோஷப் படுவதுமாக குழந்தைகளின் உலகமே தனிதான். “சந்தோஷம்கிறது நாம அனுபவிக்கிறப்ப தெரியாதுஎன விருமாண்டியில் விருமாண்டி சொல்வது போல, நாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த மகிழ்வான தருணங்கள் அப்போது நமக்குப் புரிவதில்லைதானோ?


Endhiran counting starts…


ஷங்கரின் எந்திரன் பட ட்ரெயிலரைப் பார்த்தபின்பு உடனே படம் பார்க்கும் ஆர்வம் எகிறியிருக்கிறது. ஒரு ரஜினி இருந்தாலே கொண்டாட்டம். இந்தப் படத்தில் இரண்டு ரஜினிகள். ஆட்டம் பட்டையக் கிளப்பப் போகிறது. ராஜாதி ராஜா படத்தில் பார்த்த ரஜினி கொள்ளை அழகு. அந்த முன்முடியை இழந்த ரஜினியை பார்க்க வருத்தமாயிருக்கிறது, எந்திரன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு வெகுவாக என்னைக் கவர்ந்தது. He deserve more than what he is today.


Schumacher on the rise…!


என் பையன் ஒரு கார்ப் பிரியனாக இருக்கிறான். மற்ற எந்த விளையாட்டுப் பொருட்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. Marie பிஸ்கெட் தவிர வேறெதையும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதைத் தெரிந்து உங்களுக்கு என்னவாகப் போகிறது? சரி விடுங்கள்.


Left eye or right one?


சமீபத்தில் உடனடியாக அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் இரண்டு படங்களைப் பார்த்து நான் படாதபாடு பட்டேன். இரண்டுமே தியேட்டரில்தான்.அங்காடித்தெரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டு படங்களும் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போதுதான் முடிவு செய்தேன். ஒரு நல்ல படத்தைப் பார்த்த பின் சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த படம் பார்க்கவேண்டுமென்று. இன்னும் “விண்ணைத்தாண்டி வருவாயாபாடல்களிலேயே மூழ்கி, அதன் hangover லிருந்து இன்னும் வெளிவரவில்லை. எந்திரன் வந்துவிட்டான் அதகளம் பண்ணுவதற்கு. என்ன பண்ணுவதென்று புரியவில்லை.


விரைவில் சந்திக்கலாம்.


We will meet ..... will meet .... meet. (அய்யோ அய்யோ...!)


அன்பு நித்யன்.

Thursday, July 29, 2010

இருப்பைச் சொல்வதைத் தவிர வேறென்ன?


சீரியல் வேளைகளில்

கவனிக்கப்படா குழந்தையின்

ஓங்கி அரற்றிய அழுகையிலும்...


நல்ல சாப்பாட்டையும்

சாப்பிட முடியாத தாத்தா

உப்பில்லையென சடாரென படும் கோபத்திலும்...


புதுச் சுடிதார் கேட்டு ஒரு மாதம்

கடந்தும் கண்டுக்காத கணவனிடம்

“என்ன சொகத்தைக் கண்டேன்...”

எனத் துவங்கும் ஒரு கண் கசப்பிலும்...


பண்டிகைத் துணி எடுக்க

கணக்கு போடுகையில்

படுக்கையறையிலிருந்து வரும்

அம்மாவின் வயதான இருமலிலும்...


ஒரு மாசமாச்சே எனும் நினைப்பில்

ஓட்டே வராத மொக்கைக் கவிதை

எழுதும் நாலு வரி பதிவிலும்...


இருப்பதென்னவோ

“இருப்பைச் சொல்லும்“

ஆதியுணர்வேயன்றி வேறில்லை...


குறிப்பு

இதை எழுதுகையில் கூடவே இருந்து தன் இருப்பைக் காட்ட நக்கீரன் போல் குற்றம் கண்டுபிடித்து திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட என் மனைவிக்கு நன்றி.

Tuesday, July 27, 2010

மெட்டி...


தோடு
வளையல்
சங்கிலி
மோதிரம்
கொலுசு

அப்பாடா அவ்வளவுதான்...

கொஞ்சம் பொறு
மெட்டியோடு வருகிறேன்.

Thursday, July 22, 2010

நாய்ப்பொழப்பு


கல்லெடுக்கையில்
ஓங்கி குரலெடுத்து
புறமுதுகிட்டு ஓடும்
நாயைப் பார்க்கையில்...

தனியனில்லை
எனும் நம்பிக்கை
குரூரப் புன்னகையுடன்
மேலெலுகிறது...

“வலியார்முன் தன்னை நினைக்க...”
என்று குறள் சொல்லி
திரும்பி வந்தாலும்
“ரௌத்திரம் பழகச்...”
சொன்ன பாரதி
கனவில் வந்து
செருப்பாலடிக்கிறான்...

Wednesday, July 21, 2010

நாட்காட்டி


நல்லநேரம்
ராகு காலம்
எமகண்டம்
குளிகை
வாஸ்து
பொன்மொழி
ராசிபலன்
விடுமுறை

இப்படி எல்லாம் சொல்கிறது...

உன் வருகையைத்தவிர...

பொய்யாகவேனும் சொல்லலாமே
உன்னைப் போல...

Tuesday, July 20, 2010

போ... போ...


எப்போதுமில்லாமல்
எப்போதேனும்
வருவதால்தான்...

அது அழகு...

தொடர்ந்து இருந்தால்
வானவில் கூட
சலித்துப்போகலாம்...

சரி சரி
சீக்கிரம் கிளம்பு...

Thursday, April 29, 2010

லிங்கு, கனி மற்றும் ஜெஸ்ஸி, கார்த்திக் - சிறு குறிப்பு



அன்பு நண்பர்களுக்கு ப்ரிய வணக்கங்கள்.

சமீபத்தில் திரையில் பார்த்து லயித்த படங்கள் இரண்டு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அங்காடித்தெரு.
ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தம் சொல்லமுடியாத திரைப்படங்கள். கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி மனதில் நின்று கொண்டிருந்தார்கள். பாவம் கார்த்தி. He deserve something better than Jessy என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. த்ரிஷா ஒரு பேட்டியில் சொன்னதைப்போல கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று மனதில் பட்டது.

But one fine morning, ஜெஸ்ஸி எப்படி தன் இருப்பைக் காட்டிக்கொள்வாள் என்பதில் சந்தேகம் வந்து, கார்த்திக்கை ஜெஸ்ஸியிடம் இருந்து காப்பாற்றிய விதிக்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு திரைப்படமாக மிகச் சிறப்பான அம்சங்களோடு மிளிரும் படம் இது. திரைக்கதை உத்திகள் அற்புதம். நம் அல்லா ரக்கா ரஹ்மானின் பாடல்கள் இன்று வரை மனதை மிகவும் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அற்புதமான Album. Master piece என்று சொன்னது கூட உண்மைதான்.

சிம்புவின் நடிப்பு ஒரு அற்புதமான கட்டத்தை எட்டியிருக்கிறது. த்ரிஷாவும் சிரிக்காமல் சிரித்து, அழகாய் மழுப்பி, ஆசையில் திளைத்து, மீள முடியாமலும், ஆள முடியாமலும் தவித்த தவிப்பு - அற்புதம். She is too hot.

கௌதமின் படைப்புகளில் இது ஓர் அழகு நிறைந்த படைப்பு. அவர் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல, தோற்றுப் போகும் காதல்தான் ஒரு படைப்பாக நிற்கும் என்பதும் உண்மைதான். Dr.விஜய் நடித்த பாசிலின் “காதலுக்கு மரியாதை” வேறொரு விதமான தளத்தில் மின்னியதும் தற்போது நினைவிற்கு வருகிறது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அங்காடித்தெரு” தமிழில் ஒரு தைரியமான, சுதந்திரமான, தேவையான, காத்திரமான படைப்பு. கனியும் லிங்குவும் நம் கண் முன்னே நடமாடும் மனிதர்கள். அவர்களின் வாழ்க்கைக் களம் இதுவரை explore செய்யப்படாததாக அமைந்தது இயக்குநரின் பலம் மற்றும் பலவீனம். அதை அவர் கையாண்ட விதத்தில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

வசந்தபாலனின் வெயில் அதிகம் வெக்கையையே கக்கியது. அங்காடித்தெரு இயல்பாக மெதுவாக சந்தோஷமாகத்தான் பயணிக்கிறது.

வெயிலில் ஒரு காட்சி வரும். தியேட்டர் ஆபரேட்டிங் அறையில் பசுபதியும் கதை நாயகியும் கையுங்களவுமாக பிடிபட, அதைத் தொடர்ந்து வரும் காட்சி. அதே போல் காதல் திரைப்படத்தில் பரத்தையும் சந்தியாவையும் அவர்களின் திருமணத்திற்குப்பிறகு சென்னையில் கண்டு பிடித்து, மதுரைக்கு அழைத்து வந்து பரத்தை உருட்டிவிட்டு உதைக்கும் காட்சி. இந்த காட்சிகள் நீண்ட காலத்திற்கு மனதை பிசைந்து வந்தது. ஆனால், கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை அவள் வீட்டு தோட்டத்தில், இரவு நேரத்தில் Just like that வந்து பார்த்து, ஊடோடி, கட்டிப்பிடித்து,..... என்னென்னவோ செய்துவிட்டு மாட்டிக்கொள்ளாமல் போய்விடுவார்.

அங்காடித்தெருவில் லிங்கு கனியுடன் வேலைசெய்யும் இன்னொரு ஜோடி மாட்டிக் கொள்ளும் காட்சியும் அப்படித்தான் தடதடவென படபடக்கிறது.

ஜெயமோகனின் one liner கள் படத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. கனியாக வாழ்ந்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு அற்புதம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டதாக படம் பார்க்க வந்த நண்பர் ஜாக்கி சேகர் சொன்னார். கற்றது தமிழிலேயே அஞ்சலி அற்புதம்.

அற்புதமான திரைப்படம். உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * *

நண்பர் ஜாக்கிசேகர் அவர்கள் பணிபுரிந்த விஜய் படம் நாளை திரைக்கு வருகிறது. சன் டிவியில் 30 நிமிடத்திற்கு மூன்று முறை வரும் சுறா விளம்பரத்தை பொது நல வழக்கு போட்டு தடுக்க வாய்ப்பிருக்கிறதா?

நண்பரோடு நாளை படம் பார்த்துவிட்டு உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்தால் சுறாவைப் பற்றி புட்டு வைக்கிறேன். “சுறாப்புட்டு” - அட தலைப்பு கூட சிக்கி விட்டதே.

அன்புடன்,
நித்யகுமாரன்.

Wednesday, March 24, 2010

ஜாக்கி சேகர் பதிவெழுதாததன் மர்மம் என்ன?




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பதிவு. உண்மையை சொல்ல வந்தேன்.

சமீபத்தில் நண்பர் ஜாக்கி சேகரின் புதுமனை புகுவிழாவிற்கு கொளப்பாக்கம் சென்று வந்தேன். அண்ணன் உண்மைத்தமிழன், பைத்தியக்காரன் உள்ளிட்ட நண்பர்களைக் கண்டு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
கடல் கடந்து பெரும்பாலும் மன உதவி (ஆறுதல்) கிடைக்கும். ஆனால் ஜாக்கிக்குக் கிடைத்ததோ பண உதவி. ஜாக்கி தம்பதியர் என் வீட்டுக்கு வந்திருந்த போது, என்னிடம் சொல்லிச் சொல்லி அசந்து போனார் வலையுலக அண்ணி. எனக்கு “கண்கள் பனித்தன இதயம் இனித்தது”. கல்கி ஆசிரமத்து சீடர்களைப் போல பரமானந்தத்தில் இருந்தார் ஜாக்கி. இன்னும் கொஞ்சம் கையைக் கடிப்பதாக சொல்லுகிறார். வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும் போலிருக்கிறது. வரட்டும்.
நண்பர் ஜாக்கி, பட்டை தீட்டப்படாத வைரம் போன்றவர். புறப் பார்வைக்கு அவரின் அருமை தெரியாது. அவரைப் புரிந்து கொண்டால் அது சிறப்பான அறிமுகமாக இருக்கும். எந்த நேரம் வீட்டுக்குப் போனாலும் ஏதாவது ஒரு மொக்கைப் படமேனும் பார்த்துக் கொண்டிருப்பார்.
அவரிடம் நான் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் விஷயம் என்னவென்றால், அவர் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் வழக்கம். அதுவும் தேடித்தேடி... ஆங்கிலப் படங்கள் மட்டுமல்லாமல் உலகப்படங்களையும் பார்த்து ரசிக்கிறார். இதில் ஆச்சரியப் பட என்னவிருக்கிறது? அவருடைய படிப்பிற்கு இன்று சப் டைட்டிலோடு வரும் ஆங்கிலப்படங்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்டு, ரசித்து, பகிர்ந்து.... அவரின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கது.

வாயைத்திறந்தால் காக்க காக்க வில்லனைப் போல் கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும் அவருடைய பழக்கம், அவருடைய வாழ்க்கைச் சூழல் கொண்டு வந்து தந்தது. அவருடைய இந்த transition க்குப் பின் அண்ணி அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அண்ணி அவர்கள் என்னோடு பணி புரிந்தார்கள். அப்போதுதான் “சேகர்” (அண்ணி அப்படித்தான் அழைப்பார்), எனக்குப் பழக்கம். “உங்களைப் பத்தி சொல்லிட்டேயிருப்பா... அவளோட கணக்கு தப்பாயிருக்காது...” என்று அப்போது ஜாக்கி சொல்லுவார். அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

“யோவ் கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நம்ம ப்ராஜெக்ட்லயே ஒரு வீடு கட்டித்தாரேன்னு” எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அண்ணனும் அண்ணியும் கேட்கவேயில்லை. இப்போது குடி புகுந்திருக்கும் வீட்டைப் பார்த்தபோது, கருத்துச் சொல்ல அழைத்தனர். Violation க்கான எல்லையை கடந்து கட்டப் பட்டிருந்த apartment அது. “இதுல விதிமுறைகள் கன்னாபின்னானு மீறப்பட்டிருக்கு. என்ன ஆனாலும் இந்த வீட்டைதான் நான் வாங்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னீங்கன்னா, வாங்குங்க. நாளைக்கு பிரச்சனைனு வந்தா உங்க ப்ளாட்டை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.” ன்னு சொல்லிட்டேன்.
வீடு பொதுவாகவே எல்லோரின் கனவு. ஜாக்கியின் வரலாற்றை அவரது ப்ளாக்கில் படித்தவர்களுக்கு அவரைப் பொறுத்தவரை வீடு என்பது அவருக்கு எவ்வளவு முக்கியமானதென்பது புரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த முன்னாள் இன்னாள் பதிவர்கள், வாழ்த்து தெரிவித்த பதிவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்ட பின்பு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அடுத்த பதிவு அவர் போடாமலே இருக்கிறார். இதன் காரணம் என்ன?
உண்மைத்தமிழன் தமிழ்மண நட்சத்திரமானதைக் கண்டு அதிர்ச்சியில் பதிவுலகம் மீதிருந்த அவர் நம்பிக்கை போய்விட்டதா?

கூடவே இருந்து மைனஸ் குத்து குத்தி வாழ்த்து கூட சொல்லாமல் போன சக முன்னாள் நண்பர்கள் மீது வருத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டாரா?

புது வீடு போன மகிழ்ச்சியில் பதிவுலகை மறந்து அந்த ஏரியா மகளிர் கணக்கு எடுக்க போய் விட்டாரா?

ஏதேனும் ஒரு மொக்கை கமர்சியல் படத்திற்கு ஒளி ஓவியப் பணிக்காகப் பறந்து விட்டாரா?

அவருடைய தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. மிகவும் பிசியாகவே இருந்தது. பிறகுதான் சொன்னார். எப்ப போடுவீங்க? எப்ப போடுவீங்க? அடுத்த அபார பதிவு எப்ப போடுவீங்கன்னு வாசகர்கள் அழைத்த வண்ணம் இருக்கிறார்களாம். அதான்யா நானும் கேட்கிறேன் என்ற பிறகு அந்த உண்மையை சொன்னார்.

அவர் சமீபத்தில் குடிபுகுந்த ஏரியாவில் Airtel இணைய இணைப்பே இல்லையாம். BSNL நண்பர்களும் அந்த ஏரியாவிற்கு அருகில் இருக்கிறார்கள் ஆனால் வரவி்ல்லையாம். Reliance நண்பர்களிடம் இவர் எதிர்பார்க்கும் package இல்லையாம். அதிக கணிணிகளை இணைக்கும் package மட்டுமே உள்ளதாம்.

சரி இப்பதான் pendrive லயே அதிவேக இணையம் வந்துடுச்சேன்னு கேட்டா, “அது எப்படி இருக்கும்னு தெரியல... வேகமா இருக்குமா? சொதப்புமா? ” என்று கேள்வி மேல் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், பூனை வெளியே வந்தது. “அதுக்காக இப்ப 3000 ரூபா அட்வான்ஸ் பேமண்ட் பண்ணணுமே...!”.
ஜாக்கி அண்ணாவிற்கு பதிவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்:

உங்க icici, hdfc, axix bank, sbi, sbh, canara bank, iob, indian bank, co-operative bank உள்ளிட்ட எந்த கணக்கின் எண்ணையும் கொடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். (பார்த்துக் கொள்வோம் அவ்வளவுதான்!)

இடைக்காலத் தடைகள் நீங்கி பொங்கி வரும் புது வெள்ளமாக, கதவைத் திறந்தால் வரும் காற்றைப் போல ஜாக்கியின் பதிவுகள் பதிவுலகத்தைத் தாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.


பேரன்பு பிரியங்களுடன்,

நித்யகுமாரன்.


Tuesday, September 15, 2009

முன்னாள் காதலிக்கு ஒரு கடிதம்...


வணக்கத்திற்குரிய முன்னாள் காதலிக்கு...


இப்போது திருமணம் முடித்து மக்களைப் பெற்று மனமகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். நானும் அப்படியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்ன அவசியம் எனக்கு கடிதம் எழுத வேண்டி வந்தது? என்று யோசித்து சினங்கொள்ள வேண்டாம். ஏதோ தோணுச்சு. நண்பர் நாடோடி இலக்கியன் நானும் அவள்களும் என்று ஒரு கதை (?) எழுதியிருந்தார். நமக்கு புனைவு அந்தளவு பிரமாதமாக வராது என்பதால் கடிதமாக உள்ளதைச் சொல்லி விடலாமென்றுதான் இந்த திடீர் கடிதம்.

நிற்க. நீ, உன் கணவன் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் மிக்க நலமொடு இருப்பீர்கள் என நம்புகிறேன். காதலித்து கல்யாணம் செய்து கொள்ள உலகத்தில் சிலருக்குத் தான் வாய்ப்பு அமைகிறது. என் உடன்பிறந்த சகோதரியும் காதல் திருமணம்தான் செய்தாள். ஒரு திரைப்படம் கூட விடாமல் விமர்சனம் செய்யும் நண்பர் ஜாக்கி சேகரும் காதல் திருமணம்தான். விதி மிகவும் வலியதாக இருக்கிறது. காதல் வலி தாங்கும் சக்தியை வாரி வழங்கும் என சொல்கிறார்கள். நமக்கு அது சரிவர கைவரவில்லையோ என்னவோ...?

என்னுடைய காதல்கள் எதுவும் தீவிரமானதாக இல்லையென்பதே உண்மை. நான் மனதில் நினைத்து விளிக்கும் என் காதலிகள் எல்லாருக்கும் நான் அவர்களை காதலித்தது தெரியும் என்றும் சொல்வதற்கில்லை. இதயம் பட முரளி போல சொல்லாமல் போனவையே அதிகம்.

பள்ளி காலம் மற்றும் கல்லூரி காலத்திய காதலைப் பற்றி பேசுகையில் அது வெறும் Infatuation என்று சொல்லி விவாதிப்பவர்களை நான் விலக்கித்தான் பார்க்கிறேன். எனக்கு அவளை பிடித்திருக்கிறது. நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன். அவள் என்னோடு இருந்தால்தான் நன்றாக இருப்பாள். அவ்வளவுதான். இதுதான் காதல். “ காதல் என்பது விட்டுக் கொடுப்பது... சில சமயம் காதலையே கூட விட்டுக் கொடுப்பது...” என்பது போன்ற பாலகுமாரனின் ஜல்லியடித்தல்களை நான் வன்மையாக இல்லாவிட்டாலும் மென்மையாகவாவது கண்டிக்கிறேன்.

இந்த சினிமாப் பாடல்கள் மட்டும் இல்லாவிட்டால் காதல் இந்தளவு கண்ணாபின்னாவென்று வளராது என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை. “சிறு பொன்மணி அசையும்..” எனத் தொடங்கும் இளையராஜாவின் பாடலை சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்தேன்.

“அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா... பறிபோனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா...
பனி ரோஜா கூட்டம்தான் ஒரு சேலை கட்டியதா...

அட உங்கள் கண் இன்று என் மேலே ஒட்டியதா...

இது கதையா கற்பனையா?

அட இன்னும் தெரியலையா...? ”

எனத் துவங்கும் ஏதோ ஒரு கார்த்திக் படப் பாடல் என் நெஞ்செங்கும் இன்று வரை நினைவிருக்கிறது. இதைப்போல உனக்கும் எதாவது ஒரு மொக்கைப் பாடல் நினைவிலிருக்கலாம். ஏதாவது ஒரு மதிய நேரம் மின்சாரம் இல்லாத பொழுதில் சட்டென நினைவு வரலாம். ஆயிரத்தெட்டு இசைச் சேனல்களில் எவனாவது ஒருவன் அந்தப் பாடலை உனக்குக் காட்டி புண்ணியம் கட்டிக் கொள்ளலாம். வலிய உட்கார்ந்து நீயே யோசித்துப் பார்க்கலாம். என்னவோ போ... நேரம் மட்டும்தான் எதுவும் நிகழக் காத்திராமல் விறுவிறு வென்று ஓடிக் கொண்டேயிருக்கிறது.

உன்னால் நான் தவித்துப் பிரசவித்த பல கவிதைக் குழந்தைகளை நீ சீண்டாமலே போயிருக்கிறாய். பாவம் அவை அன்றிலிருந்து தாய்ப்பாசத்திற்காக இந்த பேரண்ட பெருவெளியெங்கும் இன்றுவரை ஒடிந்து போன எழுத்துக்களோடு சுற்றித்திரியலாம். அவற்றில் வாசம் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் ஜீவனிருக்கும். அவை வெறும் வார்த்தைகள் அல்ல அன்றைய என் வாழ்க்கையின் பிரதிகள்.

பிரதிபலன் பார்க்காத அன்பை நான் உன்மீது கொண்டிருக்கவி்ல்லை, நான் உன்னிடம் பிரதி அன்பை எதிர்பார்த்தேன். உனக்காக நானே எனக்குள் வரைந்து கொண்ட ஓவியங்களை நீ உதாசீனப் படுத்தியாக இன்று புலம்புவதில் பொருளில்லை.

அடைகாத்த முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகையில் சிதறும் முட்டை ஓடுகளைப் போல இந்த கடிதம் ஒரு சீரான கட்டமைப்பில் இல்லை என்பதை நான் உணர்கிறேன். உடைந்த இதயத்திலிருந்து வரும் உடைந்த வார்த்தைகள் நல்ல உருவமாவது எப்படி?

இப்போது அதுவல்ல பிரச்சனை. நானென்ன பைத்தியக்காரன் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கா எழுதிக் கொண்டிருக்கிறேன்... கட்டுக்களை எண்ணி வருத்தப்பட...

இவன் எனக்கு எந்தளவுக்கு பொருத்தமாக இருப்பான்? என ஒருமுறையேனும் நீ எண்ணி என்னை விலக்கியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. இப்போதும் அப்படித்தான் நினைக்கிறாயா...? இந்த கேள்விக்கான பதில் ஒரு மனநிலை பிறழ்ந்தவனாக என்னை மாற்றிவிடும் அபாயத்தில் இருப்பதால் இதை விட்டுத் தொலைப்போம்.

சரி இந்த ஜென்மத்தில மேட்டர் ஓவர். திடீர் நிகழ்வுகளையும் அதிரடி சந்தோஷங்களையும் அடக்கி வைத்திருக்கும் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் முயற்சிக்காமல் உன்னை திடீரென சந்திக்க ஆசை. அதிகம் பேச ஆசைப்படும் உன் கண்களிடமிருந்து விரைந்து விலகவும் ஆசை. பின்பு நினைவுச் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக ஆசை.

இவருதான் என் வீட்டுக்காரர் என்று ஒரு நபரைக் காட்ட அவரிடம் பேசும் தைரியமும் அந்த நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவமும் இன்னும் வராத காரணத்தால் அப்படி நிகழாமல் இருக்க உண்மைத்தமிழனின் ஆதர்ச கடவுளான முருகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி உங்க சார் மற்றும் குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.

தோன்றினால் பிறகு எழுதுகிறேன்.

அன்பு டன்,
நித்யகுமாரன்.

Saturday, September 12, 2009

கடன்காரி


உன் வெட்கம் முடிந்த போது

இரவு வடிந்து விட்டது...


காலைக்கடன்களை முடித்துவிட்டு வா...

நேற்றைய

இரவுக்கடனே

மீதமிருக்கிறது...

Saturday, May 9, 2009

தேர்தலும் தேர்தல் நிமித்தமும்


ப்ரியாமானவர்களுக்கு வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது, பதிவெழுதி.  அடடே...  Junoon வசனம் போல முதல் வாக்கியம் அமைந்து விட்டதே...  பரவாயில்லை.  தொலைக்காட்சி நாடகங்களுக்கு வசனம் எழுதும் தகுதி வந்துவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.  முருகனின் அருள் நிரம்பப்பெற்ற உண்மையான தமிழர் ஒருவர் பற்றிய கிசு கிசு ஒன்று குதிரை ஓட்டுநர் ஒருவரிடம் கிடைக்கிறது.  நமீதாவின் புது பாய் பிரண்ட் யாரென்று தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள் மட்டும் அவரிடம் சரியான விடையைச் சொல்லி கிசுகிசுவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

சாருவைப் பற்றி 3 மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததும் நான் புளகாங்கிதமடைந்து விட்டதால் பெரிதாக எழுதத் தோன்றவில்லை.  சாருவைப் பற்றி எழுதியவுடன் லக்கிலுக் நினைவும் வந்துவிட்டது. சமீபத்தில் பதிவர் லக்கிலுக் நம்ம ப்ளாக்கில் ஒரு கமெண்ட் இட்டிருந்தார்.  “நீங்கள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, பார்த்து அதைவிட நாளாகிவிட்டது” என்று.  அவருக்குத் தெரியாத ஒரு விஷயம்,  நானும் மடிப்பாக்கத்துவாசி என்பது.  அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும் நம்ம பதிவை படிக்கிறாரோ என்று நினைத்தேன்.  கௌசல்யா ரேஞ்சிற்கு பதிவெழுதும் நம்மையும் நமீதா பின்தொடர்வது நினைத்தால் சந்தோஷம் தானே... Just for fun, கௌசல்யா கோவித்துக்கொள்ள வேண்டாம்... (யார் கண்டது கௌசல்யா கூட இதைப் படிக்கலாம்)

பாரதிராஜா அவர்கள் தலைமையில் திரைப்படக் குழுவினர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 (“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” - உபயம்: தொல்.திருமா) தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், அக்கட்சிக்கு எதிராக.  அவர்களுக்கு எதிராக அவர்களே சிறப்பாக வேலை செய்து கொள்வார்கள் என்பதால்,  பாரதி ராஜா குழுவினருக்கு டென்ஷன் வேண்டாம்.  அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.  சமீபத்தில் சீமானின் பேச்சை விண் டிவியில் கேட்டேன்.  இலங்கை ராணுவம் தலையில் போட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ஒத்த வார்த்தைகள்.  

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நமக்கு அலர்ஜி தரக்கூடியவை.  ஆனாலும் டிவியில் அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.  எழுதி வைத்த காகிதங்களில் உள்ளவற்றை படிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு ஒரே மாதிரி இருந்தது.  போகப்போக விஷயங்களை சேர்த்துக் கொண்டே வருகிறார்.  கலைஞர் திருச்சியில் மட்டுமே பேசினார்.  உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையிலிருக்கும் அவர் எப்படியும் 10ந் தேதி தீவுத்திடலுக்கு வந்து சோனியாவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.

 ஸ்டாலினின் பேச்சு சுகிக்கவில்லை.  ராமதாஸை ஒரு பிடி பிடிக்கிறார்.  என்னிடம் வந்து அரசியல் பாடம் கற்றுக்கொள் என்று அழைக்கிறாயே,  என்று ஆரம்பித்து நீ,  உன்னை என்று ஒருமையில் ஏக வசனம்.  திடீரென நடுவே “டாக்டர் ராமதாஸ் அவர்கள்” என்கிறார்.  ஒன்றும் பிரியவில்லை.  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்,  மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள்.  மேடைப் பேச்சில் சிங்கமென கர்ஜிக்கும் வைகோ மாத்திரம் பொடா கைதிற்குப் பிறது திமுக விலேயோ அல்லது திமுக கூட்டணியிலேயோ ஐக்கியமாகியிருந்தால்,  அவருக்கும் திமுக விற்கும் பிரகாசமான எதிர்காலமாக இருந்திருக்கும்.  பாவம் 4 சீட் முக்கி முக்கி வாங்கிக் கொண்டு ஜெயலலிதா கை காட்டுபவரே பிரதமர் என்கிறார்.  பார்க்கப் பாவமாய் இருக்கிறது.  

ராமதாஸ் தானொரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும்,  பொதுமக்களுக்கும் நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.  திருமா வளவனைப் பார்க்க பாவமாயிருக்கிறது.  மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றி அவரும் தன்னுடைய வழியைப் பற்றி தெளிவு படுத்திவிட்டார்.  

கேப்டனைப் பற்றித்தான் யாரும் செய்தி தருவதில்லை.  விஜய் டிவியில் அவருடைய மண்டபம் இடிந்த வீடியோ காட்சியை விளம்பரப் படுத்தி தான் திமுக ஓட்டையும் பிரிக்கப் போகிறேன் என சொல்கிறார்.  அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும்.  அதுக்கடுத்த வாரம் நாம எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலையைப் பாக்க போயிருப்போம்.  அரசியல் வியாபாரிகளும் அவரவர் வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள்.  இது காலங் காலமாக நடப்பதுதானே...

அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் பெருவாரியான ஊடகங்கள் இருக்கும் வரை மக்களிடம் நேர்மையான கருத்துகள் சென்று சேராது.  சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி - இவை அனைத்தும் கட்சி சார்ந்தவை.  விஜய் டிவியில் செய்தி இல்லை.  தயாநிதி மாறனின் கைங்கர்யத்தால் நிகழ்ந்த சோகம் அது.  நடுநிலையான ஊடக அமைப்புகளும் Survival - என்கிற கட்டாயத்தால் ஒரு பால் சார்ந்து இயங்கும் நிலை அமைகிறது.  

உண்மையிலேயே நல்லவன் ஒருவன் ஒரு கட்சி அமைக்க வேண்டும்.  அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து எக்கச்சக்கமாக தொண்டர்கள் சேர வேண்டும். அவன் ஒரு தொலைக்காட்சி, ஒரு பத்திரிகை அமைக்க வேண்டும்.  அவை மிகவும் வெற்றிகரமாக மக்களைச் சென்று அடைய வேண்டும்.  அந்த டிவியில்தான் மக்கள் தொடர் மற்றும் சினிமா பார்க்க வேண்டும்.  பிறகு அந்த ஊடகங்களின் வழியாக விளம்பரம் செய்து அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.  அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் நல்லவனாகவே இருக்க வேண்டும்.  இதுவெல்லாம் நடந்தாத்தான் நாடு நாடா இருக்கும்.  இல்லாட்டி அம்புட்டுதான்.  ஒன்னும் சொல்றதுக்கில்ல.

49 - O வை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வைப்பதற்குக்கூட பயந்து நடுங்கி ஒன்னுக்குப் போகும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவது எப்படி என்றும் பிரியவில்லை.  

ஆனாலும் தயவுசெஞ்சு ஓட்டுப் போடுங்கள் நண்பர்களே...  பிஹாரில் நடந்ததைப் போல 37% ஓட்டு விழுவது ஜனநாயகமே அல்ல.  காஷ்மீரில் அதைவிடக் குறைவு என்பதற்கு தர்க்கரீதியான காரணங்கள் உள்ளன.  49 - O வையாவது குறைந்தது பதிவு செய்யுங்கள்.  வெட்டி நியாயம் பேசிட்டு ஓட்டு போடாம விட்டுடாதீங்க.  ஓட்டு போடாட்டி என்ன நடக்கும தெரியுமா? நீங்க பஸ்ல போகும்போது மொக்கையான படம் அல்லது விஜய் படம் போடுவாங்க...  


திரும்ப ரெண்டு மாசம் கழித்து யாராவது திட்டினால், பதிவெழுதுகிறேன்.

பேரன்புடன் 
நித்யகுமாரன்.


Friday, February 20, 2009

முடியலங்க சாரு...

முடியலங்க...

முடியல...

சாருவின் நடுநிலைமையைப் பற்றி நினைக்கும் போது... முடியலங்க...

எப்பப்பாத்தாலும் ஜெயமோகனைப் பத்தி எதாவது எழுதாட்டி அவரால இருக்க முடியாது. சுஜாதா மிகச் சரியாகவே சொன்னார். ராஸ லீலாவையும் ஜீரோ டிகிரியையும் காசு குடுத்து வாங்கி படிச்சவன் நான். சரோஜாதேவி, மருதம் மாதிரி புத்தகம் படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ சாரு பிடித்துப் போனது. காமக் கதைகளை அவருடைய தளத்தில் டீக்கடையில் தினத்தந்தி படிப்பதைப் போல ஓசியாகத்தான் படித்தேன். அதப்பத்தியும் பல தடவை அவரு கடிதம் எழுதி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், யாராவது டாலர்ல பணம் அனுப்பி வையிங்கன்னு கேப்பாரு. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

யாராவது பணம் அனுப்பி வச்சீங்கன்னா இதே மாதிரி ஓசியில மத்தவங்க படிக்கலாம். இல்லன்னா கஷ்டம்னு எழுதுனாரு. எனக்கு ஒரு மாதிரி பீலிங்கா ஆயிடுச்சு. யாரோ சில தொரைங்க வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்பி வச்சதனால மட்டுமே நமக்கு இந்த காமக்கதைகளெல்லாம் ப்ரீயா படிக்க முடியுதோன்னு ஒரு கில்ட்டி பீலிங் வந்துடுச்சு. என்ன நடந்தாலும் கொஞ்சங்கூட அசையாம இருக்குற தமிழனா இருந்ததால, சரி சரின்னு தொடச்சு விட்டு்ட்டு படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

ராஜேஷ்குமார் நாவல்களும் பாலகுமாரன் நாவல்களும் ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சுப்போற மாதிரி சரோஜாதேவியைப் போன்ற எழுத்துகளின் மற்றொரு வடிவான காமக்கதைகளும் சலிக்கத்தான் துவங்கின. சரி இவரிடமிருந்து வேறு என்னதான் வித்தியாசமாக இருக்கிறது, என தேடத்துவங்கினால் “உன்னையெல்லாம் பாத்தா ரொம்ப பாவமாயிருக்கு” என்கிற ரீதியில் நான் பார்க்கப்பட்டேன். நமக்கு இருக்குற பிஸினஸ் டார்ச்சர்ல இதவேற தாங்கமுடியாதுன்ன சுகுறா தெரிஞ்சு போச்சு. அதிவீரபாண்டியன் அர்த்தஜாமக்கதைகள் என்கிற அடுத்த கட்டம் படிக்க முடியலங்க. இன்னா பண்றதுன்னு புரியல.

அலைபாயுதே குடுத்த அதே மணிரத்னம்தான் கன்னத்தில் முத்தமிட்டாலும் பண்ணாரு. அடுத்தடுத்த தளங்களுக்கு தாவிக்கொண்டே இருக்க வேண்டிய எழுத்து, சீனித்துண்டை சுற்றுகிற எறும்புகளைப்போல ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. பாவம். படிக்கிற நம்மளத்தான் சொல்லுறேன்.

சாருவின் கொடுமைகளை விட கொடுமையானவை, அவருக்கு பல்லக்கு தூக்கும் குறிவருடிகளின் (அடிவருடிகள் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம் சாருவைப் பொறுத்தவரை சப்பையானவை) கருத்தாக்கங்கள். சாரு தன்னையும் ஜெமோவையும் எம்.ஜி.ஆர். சிவாஜி போலவும், ரஜினி கமல் போலவும், அஜீத் விஜய் போலவும், சிம்பு தனுஷ் போலவும் உருவாக்கி எழுதும் பிம்பங்கள் நான்கடவுளில் ஜெமோ எழுதிய வசனங்களை விட நகைச்சுவை நெடி படைத்தவை.

பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும் ஒரு வெட்கமான உணர்வு சாருவின் எழுத்துக்களை படிக்கையில் மேலிடுகிறது. இப்படிப்பட்ட உதாரணங்களை யோசிக்கவும் எழுதவும் முடிகிற துணிச்சல் சத்தியமாக சாருவிடமிருந்துதான் வந்தது.

அழகிரி ஓர் அப்பாவி மனிதர் எனச் சொல்லுவதிலாகட்டும், அவருடைய நடவடிக்கைகள் அராஜகம் எனச்சொல்லி ஆட்டோ வருமோ என நக்கலடிப்பதிலாகட்டும் அவர் ஒரு சிறந்த நடுநிலைவாதிதான். கனிமொழியோடு மிக்க அன்பு பாராட்டுகிறாராம். இப்போது கருணாநிதி அரசை கலைக்கச் சொல்கிறாராம். என்ன ஒரு நடுநிலையான கருத்துக்கள். சாரு சொல்லிவிட்டார் அவ்வளவுதான் இனி இந்த அரசு கலைக்கப்பட்டு விடும். உடன்பிறப்புக்களே திரண்டெழுங்கள்.

தமிழ்நாட்டு வீதிகளெங்கும் முனைக்கு முனை இன்னும் அதிகம் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களுக்கு இவர் சொந்தக்காரர்.

“அவர் செய்த நன்று ஒன்று உளக் கெடும்” என்ற திருக்குறளின் போதனைக்கேற்ப ராஸலீலாவின் சில பத்திகளுக்காகவும், காமக்கதைகளின் சில அத்தியாயங்களுக்காகவும் அவர் (என்) பாராட்டுதலுக்குரியவர்.

எனக்குத்தெரிந்த வரையில் ஜெயமோகன் நினைத்தபோதெல்லாம் இவரைப்பற்றி எழுதி வாருவதில்லை. உ.த.எ. என்று அடைமொழி கொடுத்து அவரைப் பற்றி எழுதி தான் லைம்லைட்டுக்கு வருவதில் சாருவுக்கு பாரிஸ் கார்னர் சரக்குகளைவிட அதிகமான போதை வரலாம்.

நமக்குத்தான் சகிக்கவில்லை.
Follow @ersenthilkumar