Wednesday, March 24, 2010

ஜாக்கி சேகர் பதிவெழுதாததன் மர்மம் என்ன?




அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பதிவு. உண்மையை சொல்ல வந்தேன்.

சமீபத்தில் நண்பர் ஜாக்கி சேகரின் புதுமனை புகுவிழாவிற்கு கொளப்பாக்கம் சென்று வந்தேன். அண்ணன் உண்மைத்தமிழன், பைத்தியக்காரன் உள்ளிட்ட நண்பர்களைக் கண்டு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
கடல் கடந்து பெரும்பாலும் மன உதவி (ஆறுதல்) கிடைக்கும். ஆனால் ஜாக்கிக்குக் கிடைத்ததோ பண உதவி. ஜாக்கி தம்பதியர் என் வீட்டுக்கு வந்திருந்த போது, என்னிடம் சொல்லிச் சொல்லி அசந்து போனார் வலையுலக அண்ணி. எனக்கு “கண்கள் பனித்தன இதயம் இனித்தது”. கல்கி ஆசிரமத்து சீடர்களைப் போல பரமானந்தத்தில் இருந்தார் ஜாக்கி. இன்னும் கொஞ்சம் கையைக் கடிப்பதாக சொல்லுகிறார். வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும் போலிருக்கிறது. வரட்டும்.
நண்பர் ஜாக்கி, பட்டை தீட்டப்படாத வைரம் போன்றவர். புறப் பார்வைக்கு அவரின் அருமை தெரியாது. அவரைப் புரிந்து கொண்டால் அது சிறப்பான அறிமுகமாக இருக்கும். எந்த நேரம் வீட்டுக்குப் போனாலும் ஏதாவது ஒரு மொக்கைப் படமேனும் பார்த்துக் கொண்டிருப்பார்.
அவரிடம் நான் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் விஷயம் என்னவென்றால், அவர் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் வழக்கம். அதுவும் தேடித்தேடி... ஆங்கிலப் படங்கள் மட்டுமல்லாமல் உலகப்படங்களையும் பார்த்து ரசிக்கிறார். இதில் ஆச்சரியப் பட என்னவிருக்கிறது? அவருடைய படிப்பிற்கு இன்று சப் டைட்டிலோடு வரும் ஆங்கிலப்படங்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்டு, ரசித்து, பகிர்ந்து.... அவரின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கது.

வாயைத்திறந்தால் காக்க காக்க வில்லனைப் போல் கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும் அவருடைய பழக்கம், அவருடைய வாழ்க்கைச் சூழல் கொண்டு வந்து தந்தது. அவருடைய இந்த transition க்குப் பின் அண்ணி அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அண்ணி அவர்கள் என்னோடு பணி புரிந்தார்கள். அப்போதுதான் “சேகர்” (அண்ணி அப்படித்தான் அழைப்பார்), எனக்குப் பழக்கம். “உங்களைப் பத்தி சொல்லிட்டேயிருப்பா... அவளோட கணக்கு தப்பாயிருக்காது...” என்று அப்போது ஜாக்கி சொல்லுவார். அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

“யோவ் கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நம்ம ப்ராஜெக்ட்லயே ஒரு வீடு கட்டித்தாரேன்னு” எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அண்ணனும் அண்ணியும் கேட்கவேயில்லை. இப்போது குடி புகுந்திருக்கும் வீட்டைப் பார்த்தபோது, கருத்துச் சொல்ல அழைத்தனர். Violation க்கான எல்லையை கடந்து கட்டப் பட்டிருந்த apartment அது. “இதுல விதிமுறைகள் கன்னாபின்னானு மீறப்பட்டிருக்கு. என்ன ஆனாலும் இந்த வீட்டைதான் நான் வாங்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னீங்கன்னா, வாங்குங்க. நாளைக்கு பிரச்சனைனு வந்தா உங்க ப்ளாட்டை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.” ன்னு சொல்லிட்டேன்.
வீடு பொதுவாகவே எல்லோரின் கனவு. ஜாக்கியின் வரலாற்றை அவரது ப்ளாக்கில் படித்தவர்களுக்கு அவரைப் பொறுத்தவரை வீடு என்பது அவருக்கு எவ்வளவு முக்கியமானதென்பது புரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த முன்னாள் இன்னாள் பதிவர்கள், வாழ்த்து தெரிவித்த பதிவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்ட பின்பு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அடுத்த பதிவு அவர் போடாமலே இருக்கிறார். இதன் காரணம் என்ன?
உண்மைத்தமிழன் தமிழ்மண நட்சத்திரமானதைக் கண்டு அதிர்ச்சியில் பதிவுலகம் மீதிருந்த அவர் நம்பிக்கை போய்விட்டதா?

கூடவே இருந்து மைனஸ் குத்து குத்தி வாழ்த்து கூட சொல்லாமல் போன சக முன்னாள் நண்பர்கள் மீது வருத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டாரா?

புது வீடு போன மகிழ்ச்சியில் பதிவுலகை மறந்து அந்த ஏரியா மகளிர் கணக்கு எடுக்க போய் விட்டாரா?

ஏதேனும் ஒரு மொக்கை கமர்சியல் படத்திற்கு ஒளி ஓவியப் பணிக்காகப் பறந்து விட்டாரா?

அவருடைய தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. மிகவும் பிசியாகவே இருந்தது. பிறகுதான் சொன்னார். எப்ப போடுவீங்க? எப்ப போடுவீங்க? அடுத்த அபார பதிவு எப்ப போடுவீங்கன்னு வாசகர்கள் அழைத்த வண்ணம் இருக்கிறார்களாம். அதான்யா நானும் கேட்கிறேன் என்ற பிறகு அந்த உண்மையை சொன்னார்.

அவர் சமீபத்தில் குடிபுகுந்த ஏரியாவில் Airtel இணைய இணைப்பே இல்லையாம். BSNL நண்பர்களும் அந்த ஏரியாவிற்கு அருகில் இருக்கிறார்கள் ஆனால் வரவி்ல்லையாம். Reliance நண்பர்களிடம் இவர் எதிர்பார்க்கும் package இல்லையாம். அதிக கணிணிகளை இணைக்கும் package மட்டுமே உள்ளதாம்.

சரி இப்பதான் pendrive லயே அதிவேக இணையம் வந்துடுச்சேன்னு கேட்டா, “அது எப்படி இருக்கும்னு தெரியல... வேகமா இருக்குமா? சொதப்புமா? ” என்று கேள்வி மேல் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், பூனை வெளியே வந்தது. “அதுக்காக இப்ப 3000 ரூபா அட்வான்ஸ் பேமண்ட் பண்ணணுமே...!”.
ஜாக்கி அண்ணாவிற்கு பதிவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்:

உங்க icici, hdfc, axix bank, sbi, sbh, canara bank, iob, indian bank, co-operative bank உள்ளிட்ட எந்த கணக்கின் எண்ணையும் கொடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். (பார்த்துக் கொள்வோம் அவ்வளவுதான்!)

இடைக்காலத் தடைகள் நீங்கி பொங்கி வரும் புது வெள்ளமாக, கதவைத் திறந்தால் வரும் காற்றைப் போல ஜாக்கியின் பதிவுகள் பதிவுலகத்தைத் தாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.


பேரன்பு பிரியங்களுடன்,

நித்யகுமாரன்.


Tuesday, September 15, 2009

முன்னாள் காதலிக்கு ஒரு கடிதம்...


வணக்கத்திற்குரிய முன்னாள் காதலிக்கு...


இப்போது திருமணம் முடித்து மக்களைப் பெற்று மனமகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். நானும் அப்படியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்ன அவசியம் எனக்கு கடிதம் எழுத வேண்டி வந்தது? என்று யோசித்து சினங்கொள்ள வேண்டாம். ஏதோ தோணுச்சு. நண்பர் நாடோடி இலக்கியன் நானும் அவள்களும் என்று ஒரு கதை (?) எழுதியிருந்தார். நமக்கு புனைவு அந்தளவு பிரமாதமாக வராது என்பதால் கடிதமாக உள்ளதைச் சொல்லி விடலாமென்றுதான் இந்த திடீர் கடிதம்.

நிற்க. நீ, உன் கணவன் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் மிக்க நலமொடு இருப்பீர்கள் என நம்புகிறேன். காதலித்து கல்யாணம் செய்து கொள்ள உலகத்தில் சிலருக்குத் தான் வாய்ப்பு அமைகிறது. என் உடன்பிறந்த சகோதரியும் காதல் திருமணம்தான் செய்தாள். ஒரு திரைப்படம் கூட விடாமல் விமர்சனம் செய்யும் நண்பர் ஜாக்கி சேகரும் காதல் திருமணம்தான். விதி மிகவும் வலியதாக இருக்கிறது. காதல் வலி தாங்கும் சக்தியை வாரி வழங்கும் என சொல்கிறார்கள். நமக்கு அது சரிவர கைவரவில்லையோ என்னவோ...?

என்னுடைய காதல்கள் எதுவும் தீவிரமானதாக இல்லையென்பதே உண்மை. நான் மனதில் நினைத்து விளிக்கும் என் காதலிகள் எல்லாருக்கும் நான் அவர்களை காதலித்தது தெரியும் என்றும் சொல்வதற்கில்லை. இதயம் பட முரளி போல சொல்லாமல் போனவையே அதிகம்.

பள்ளி காலம் மற்றும் கல்லூரி காலத்திய காதலைப் பற்றி பேசுகையில் அது வெறும் Infatuation என்று சொல்லி விவாதிப்பவர்களை நான் விலக்கித்தான் பார்க்கிறேன். எனக்கு அவளை பிடித்திருக்கிறது. நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன். அவள் என்னோடு இருந்தால்தான் நன்றாக இருப்பாள். அவ்வளவுதான். இதுதான் காதல். “ காதல் என்பது விட்டுக் கொடுப்பது... சில சமயம் காதலையே கூட விட்டுக் கொடுப்பது...” என்பது போன்ற பாலகுமாரனின் ஜல்லியடித்தல்களை நான் வன்மையாக இல்லாவிட்டாலும் மென்மையாகவாவது கண்டிக்கிறேன்.

இந்த சினிமாப் பாடல்கள் மட்டும் இல்லாவிட்டால் காதல் இந்தளவு கண்ணாபின்னாவென்று வளராது என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை. “சிறு பொன்மணி அசையும்..” எனத் தொடங்கும் இளையராஜாவின் பாடலை சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்தேன்.

“அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா... பறிபோனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா...
பனி ரோஜா கூட்டம்தான் ஒரு சேலை கட்டியதா...

அட உங்கள் கண் இன்று என் மேலே ஒட்டியதா...

இது கதையா கற்பனையா?

அட இன்னும் தெரியலையா...? ”

எனத் துவங்கும் ஏதோ ஒரு கார்த்திக் படப் பாடல் என் நெஞ்செங்கும் இன்று வரை நினைவிருக்கிறது. இதைப்போல உனக்கும் எதாவது ஒரு மொக்கைப் பாடல் நினைவிலிருக்கலாம். ஏதாவது ஒரு மதிய நேரம் மின்சாரம் இல்லாத பொழுதில் சட்டென நினைவு வரலாம். ஆயிரத்தெட்டு இசைச் சேனல்களில் எவனாவது ஒருவன் அந்தப் பாடலை உனக்குக் காட்டி புண்ணியம் கட்டிக் கொள்ளலாம். வலிய உட்கார்ந்து நீயே யோசித்துப் பார்க்கலாம். என்னவோ போ... நேரம் மட்டும்தான் எதுவும் நிகழக் காத்திராமல் விறுவிறு வென்று ஓடிக் கொண்டேயிருக்கிறது.

உன்னால் நான் தவித்துப் பிரசவித்த பல கவிதைக் குழந்தைகளை நீ சீண்டாமலே போயிருக்கிறாய். பாவம் அவை அன்றிலிருந்து தாய்ப்பாசத்திற்காக இந்த பேரண்ட பெருவெளியெங்கும் இன்றுவரை ஒடிந்து போன எழுத்துக்களோடு சுற்றித்திரியலாம். அவற்றில் வாசம் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் ஜீவனிருக்கும். அவை வெறும் வார்த்தைகள் அல்ல அன்றைய என் வாழ்க்கையின் பிரதிகள்.

பிரதிபலன் பார்க்காத அன்பை நான் உன்மீது கொண்டிருக்கவி்ல்லை, நான் உன்னிடம் பிரதி அன்பை எதிர்பார்த்தேன். உனக்காக நானே எனக்குள் வரைந்து கொண்ட ஓவியங்களை நீ உதாசீனப் படுத்தியாக இன்று புலம்புவதில் பொருளில்லை.

அடைகாத்த முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகையில் சிதறும் முட்டை ஓடுகளைப் போல இந்த கடிதம் ஒரு சீரான கட்டமைப்பில் இல்லை என்பதை நான் உணர்கிறேன். உடைந்த இதயத்திலிருந்து வரும் உடைந்த வார்த்தைகள் நல்ல உருவமாவது எப்படி?

இப்போது அதுவல்ல பிரச்சனை. நானென்ன பைத்தியக்காரன் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கா எழுதிக் கொண்டிருக்கிறேன்... கட்டுக்களை எண்ணி வருத்தப்பட...

இவன் எனக்கு எந்தளவுக்கு பொருத்தமாக இருப்பான்? என ஒருமுறையேனும் நீ எண்ணி என்னை விலக்கியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. இப்போதும் அப்படித்தான் நினைக்கிறாயா...? இந்த கேள்விக்கான பதில் ஒரு மனநிலை பிறழ்ந்தவனாக என்னை மாற்றிவிடும் அபாயத்தில் இருப்பதால் இதை விட்டுத் தொலைப்போம்.

சரி இந்த ஜென்மத்தில மேட்டர் ஓவர். திடீர் நிகழ்வுகளையும் அதிரடி சந்தோஷங்களையும் அடக்கி வைத்திருக்கும் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் முயற்சிக்காமல் உன்னை திடீரென சந்திக்க ஆசை. அதிகம் பேச ஆசைப்படும் உன் கண்களிடமிருந்து விரைந்து விலகவும் ஆசை. பின்பு நினைவுச் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக ஆசை.

இவருதான் என் வீட்டுக்காரர் என்று ஒரு நபரைக் காட்ட அவரிடம் பேசும் தைரியமும் அந்த நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவமும் இன்னும் வராத காரணத்தால் அப்படி நிகழாமல் இருக்க உண்மைத்தமிழனின் ஆதர்ச கடவுளான முருகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி உங்க சார் மற்றும் குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.

தோன்றினால் பிறகு எழுதுகிறேன்.

அன்பு டன்,
நித்யகுமாரன்.

Saturday, September 12, 2009

கடன்காரி


உன் வெட்கம் முடிந்த போது

இரவு வடிந்து விட்டது...


காலைக்கடன்களை முடித்துவிட்டு வா...

நேற்றைய

இரவுக்கடனே

மீதமிருக்கிறது...

Saturday, May 9, 2009

தேர்தலும் தேர்தல் நிமித்தமும்


ப்ரியாமானவர்களுக்கு வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது, பதிவெழுதி.  அடடே...  Junoon வசனம் போல முதல் வாக்கியம் அமைந்து விட்டதே...  பரவாயில்லை.  தொலைக்காட்சி நாடகங்களுக்கு வசனம் எழுதும் தகுதி வந்துவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.  முருகனின் அருள் நிரம்பப்பெற்ற உண்மையான தமிழர் ஒருவர் பற்றிய கிசு கிசு ஒன்று குதிரை ஓட்டுநர் ஒருவரிடம் கிடைக்கிறது.  நமீதாவின் புது பாய் பிரண்ட் யாரென்று தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள் மட்டும் அவரிடம் சரியான விடையைச் சொல்லி கிசுகிசுவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

சாருவைப் பற்றி 3 மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததும் நான் புளகாங்கிதமடைந்து விட்டதால் பெரிதாக எழுதத் தோன்றவில்லை.  சாருவைப் பற்றி எழுதியவுடன் லக்கிலுக் நினைவும் வந்துவிட்டது. சமீபத்தில் பதிவர் லக்கிலுக் நம்ம ப்ளாக்கில் ஒரு கமெண்ட் இட்டிருந்தார்.  “நீங்கள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, பார்த்து அதைவிட நாளாகிவிட்டது” என்று.  அவருக்குத் தெரியாத ஒரு விஷயம்,  நானும் மடிப்பாக்கத்துவாசி என்பது.  அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும் நம்ம பதிவை படிக்கிறாரோ என்று நினைத்தேன்.  கௌசல்யா ரேஞ்சிற்கு பதிவெழுதும் நம்மையும் நமீதா பின்தொடர்வது நினைத்தால் சந்தோஷம் தானே... Just for fun, கௌசல்யா கோவித்துக்கொள்ள வேண்டாம்... (யார் கண்டது கௌசல்யா கூட இதைப் படிக்கலாம்)

பாரதிராஜா அவர்கள் தலைமையில் திரைப்படக் குழுவினர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 (“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” - உபயம்: தொல்.திருமா) தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், அக்கட்சிக்கு எதிராக.  அவர்களுக்கு எதிராக அவர்களே சிறப்பாக வேலை செய்து கொள்வார்கள் என்பதால்,  பாரதி ராஜா குழுவினருக்கு டென்ஷன் வேண்டாம்.  அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.  சமீபத்தில் சீமானின் பேச்சை விண் டிவியில் கேட்டேன்.  இலங்கை ராணுவம் தலையில் போட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ஒத்த வார்த்தைகள்.  

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நமக்கு அலர்ஜி தரக்கூடியவை.  ஆனாலும் டிவியில் அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.  எழுதி வைத்த காகிதங்களில் உள்ளவற்றை படிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு ஒரே மாதிரி இருந்தது.  போகப்போக விஷயங்களை சேர்த்துக் கொண்டே வருகிறார்.  கலைஞர் திருச்சியில் மட்டுமே பேசினார்.  உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையிலிருக்கும் அவர் எப்படியும் 10ந் தேதி தீவுத்திடலுக்கு வந்து சோனியாவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.

 ஸ்டாலினின் பேச்சு சுகிக்கவில்லை.  ராமதாஸை ஒரு பிடி பிடிக்கிறார்.  என்னிடம் வந்து அரசியல் பாடம் கற்றுக்கொள் என்று அழைக்கிறாயே,  என்று ஆரம்பித்து நீ,  உன்னை என்று ஒருமையில் ஏக வசனம்.  திடீரென நடுவே “டாக்டர் ராமதாஸ் அவர்கள்” என்கிறார்.  ஒன்றும் பிரியவில்லை.  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்,  மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள்.  மேடைப் பேச்சில் சிங்கமென கர்ஜிக்கும் வைகோ மாத்திரம் பொடா கைதிற்குப் பிறது திமுக விலேயோ அல்லது திமுக கூட்டணியிலேயோ ஐக்கியமாகியிருந்தால்,  அவருக்கும் திமுக விற்கும் பிரகாசமான எதிர்காலமாக இருந்திருக்கும்.  பாவம் 4 சீட் முக்கி முக்கி வாங்கிக் கொண்டு ஜெயலலிதா கை காட்டுபவரே பிரதமர் என்கிறார்.  பார்க்கப் பாவமாய் இருக்கிறது.  

ராமதாஸ் தானொரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும்,  பொதுமக்களுக்கும் நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.  திருமா வளவனைப் பார்க்க பாவமாயிருக்கிறது.  மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றி அவரும் தன்னுடைய வழியைப் பற்றி தெளிவு படுத்திவிட்டார்.  

கேப்டனைப் பற்றித்தான் யாரும் செய்தி தருவதில்லை.  விஜய் டிவியில் அவருடைய மண்டபம் இடிந்த வீடியோ காட்சியை விளம்பரப் படுத்தி தான் திமுக ஓட்டையும் பிரிக்கப் போகிறேன் என சொல்கிறார்.  அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும்.  அதுக்கடுத்த வாரம் நாம எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலையைப் பாக்க போயிருப்போம்.  அரசியல் வியாபாரிகளும் அவரவர் வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள்.  இது காலங் காலமாக நடப்பதுதானே...

அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் பெருவாரியான ஊடகங்கள் இருக்கும் வரை மக்களிடம் நேர்மையான கருத்துகள் சென்று சேராது.  சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி - இவை அனைத்தும் கட்சி சார்ந்தவை.  விஜய் டிவியில் செய்தி இல்லை.  தயாநிதி மாறனின் கைங்கர்யத்தால் நிகழ்ந்த சோகம் அது.  நடுநிலையான ஊடக அமைப்புகளும் Survival - என்கிற கட்டாயத்தால் ஒரு பால் சார்ந்து இயங்கும் நிலை அமைகிறது.  

உண்மையிலேயே நல்லவன் ஒருவன் ஒரு கட்சி அமைக்க வேண்டும்.  அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து எக்கச்சக்கமாக தொண்டர்கள் சேர வேண்டும். அவன் ஒரு தொலைக்காட்சி, ஒரு பத்திரிகை அமைக்க வேண்டும்.  அவை மிகவும் வெற்றிகரமாக மக்களைச் சென்று அடைய வேண்டும்.  அந்த டிவியில்தான் மக்கள் தொடர் மற்றும் சினிமா பார்க்க வேண்டும்.  பிறகு அந்த ஊடகங்களின் வழியாக விளம்பரம் செய்து அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.  அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் நல்லவனாகவே இருக்க வேண்டும்.  இதுவெல்லாம் நடந்தாத்தான் நாடு நாடா இருக்கும்.  இல்லாட்டி அம்புட்டுதான்.  ஒன்னும் சொல்றதுக்கில்ல.

49 - O வை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வைப்பதற்குக்கூட பயந்து நடுங்கி ஒன்னுக்குப் போகும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவது எப்படி என்றும் பிரியவில்லை.  

ஆனாலும் தயவுசெஞ்சு ஓட்டுப் போடுங்கள் நண்பர்களே...  பிஹாரில் நடந்ததைப் போல 37% ஓட்டு விழுவது ஜனநாயகமே அல்ல.  காஷ்மீரில் அதைவிடக் குறைவு என்பதற்கு தர்க்கரீதியான காரணங்கள் உள்ளன.  49 - O வையாவது குறைந்தது பதிவு செய்யுங்கள்.  வெட்டி நியாயம் பேசிட்டு ஓட்டு போடாம விட்டுடாதீங்க.  ஓட்டு போடாட்டி என்ன நடக்கும தெரியுமா? நீங்க பஸ்ல போகும்போது மொக்கையான படம் அல்லது விஜய் படம் போடுவாங்க...  


திரும்ப ரெண்டு மாசம் கழித்து யாராவது திட்டினால், பதிவெழுதுகிறேன்.

பேரன்புடன் 
நித்யகுமாரன்.


Friday, February 20, 2009

முடியலங்க சாரு...

முடியலங்க...

முடியல...

சாருவின் நடுநிலைமையைப் பற்றி நினைக்கும் போது... முடியலங்க...

எப்பப்பாத்தாலும் ஜெயமோகனைப் பத்தி எதாவது எழுதாட்டி அவரால இருக்க முடியாது. சுஜாதா மிகச் சரியாகவே சொன்னார். ராஸ லீலாவையும் ஜீரோ டிகிரியையும் காசு குடுத்து வாங்கி படிச்சவன் நான். சரோஜாதேவி, மருதம் மாதிரி புத்தகம் படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ சாரு பிடித்துப் போனது. காமக் கதைகளை அவருடைய தளத்தில் டீக்கடையில் தினத்தந்தி படிப்பதைப் போல ஓசியாகத்தான் படித்தேன். அதப்பத்தியும் பல தடவை அவரு கடிதம் எழுதி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், யாராவது டாலர்ல பணம் அனுப்பி வையிங்கன்னு கேப்பாரு. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

யாராவது பணம் அனுப்பி வச்சீங்கன்னா இதே மாதிரி ஓசியில மத்தவங்க படிக்கலாம். இல்லன்னா கஷ்டம்னு எழுதுனாரு. எனக்கு ஒரு மாதிரி பீலிங்கா ஆயிடுச்சு. யாரோ சில தொரைங்க வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்பி வச்சதனால மட்டுமே நமக்கு இந்த காமக்கதைகளெல்லாம் ப்ரீயா படிக்க முடியுதோன்னு ஒரு கில்ட்டி பீலிங் வந்துடுச்சு. என்ன நடந்தாலும் கொஞ்சங்கூட அசையாம இருக்குற தமிழனா இருந்ததால, சரி சரின்னு தொடச்சு விட்டு்ட்டு படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

ராஜேஷ்குமார் நாவல்களும் பாலகுமாரன் நாவல்களும் ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சுப்போற மாதிரி சரோஜாதேவியைப் போன்ற எழுத்துகளின் மற்றொரு வடிவான காமக்கதைகளும் சலிக்கத்தான் துவங்கின. சரி இவரிடமிருந்து வேறு என்னதான் வித்தியாசமாக இருக்கிறது, என தேடத்துவங்கினால் “உன்னையெல்லாம் பாத்தா ரொம்ப பாவமாயிருக்கு” என்கிற ரீதியில் நான் பார்க்கப்பட்டேன். நமக்கு இருக்குற பிஸினஸ் டார்ச்சர்ல இதவேற தாங்கமுடியாதுன்ன சுகுறா தெரிஞ்சு போச்சு. அதிவீரபாண்டியன் அர்த்தஜாமக்கதைகள் என்கிற அடுத்த கட்டம் படிக்க முடியலங்க. இன்னா பண்றதுன்னு புரியல.

அலைபாயுதே குடுத்த அதே மணிரத்னம்தான் கன்னத்தில் முத்தமிட்டாலும் பண்ணாரு. அடுத்தடுத்த தளங்களுக்கு தாவிக்கொண்டே இருக்க வேண்டிய எழுத்து, சீனித்துண்டை சுற்றுகிற எறும்புகளைப்போல ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. பாவம். படிக்கிற நம்மளத்தான் சொல்லுறேன்.

சாருவின் கொடுமைகளை விட கொடுமையானவை, அவருக்கு பல்லக்கு தூக்கும் குறிவருடிகளின் (அடிவருடிகள் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம் சாருவைப் பொறுத்தவரை சப்பையானவை) கருத்தாக்கங்கள். சாரு தன்னையும் ஜெமோவையும் எம்.ஜி.ஆர். சிவாஜி போலவும், ரஜினி கமல் போலவும், அஜீத் விஜய் போலவும், சிம்பு தனுஷ் போலவும் உருவாக்கி எழுதும் பிம்பங்கள் நான்கடவுளில் ஜெமோ எழுதிய வசனங்களை விட நகைச்சுவை நெடி படைத்தவை.

பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும் ஒரு வெட்கமான உணர்வு சாருவின் எழுத்துக்களை படிக்கையில் மேலிடுகிறது. இப்படிப்பட்ட உதாரணங்களை யோசிக்கவும் எழுதவும் முடிகிற துணிச்சல் சத்தியமாக சாருவிடமிருந்துதான் வந்தது.

அழகிரி ஓர் அப்பாவி மனிதர் எனச் சொல்லுவதிலாகட்டும், அவருடைய நடவடிக்கைகள் அராஜகம் எனச்சொல்லி ஆட்டோ வருமோ என நக்கலடிப்பதிலாகட்டும் அவர் ஒரு சிறந்த நடுநிலைவாதிதான். கனிமொழியோடு மிக்க அன்பு பாராட்டுகிறாராம். இப்போது கருணாநிதி அரசை கலைக்கச் சொல்கிறாராம். என்ன ஒரு நடுநிலையான கருத்துக்கள். சாரு சொல்லிவிட்டார் அவ்வளவுதான் இனி இந்த அரசு கலைக்கப்பட்டு விடும். உடன்பிறப்புக்களே திரண்டெழுங்கள்.

தமிழ்நாட்டு வீதிகளெங்கும் முனைக்கு முனை இன்னும் அதிகம் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களுக்கு இவர் சொந்தக்காரர்.

“அவர் செய்த நன்று ஒன்று உளக் கெடும்” என்ற திருக்குறளின் போதனைக்கேற்ப ராஸலீலாவின் சில பத்திகளுக்காகவும், காமக்கதைகளின் சில அத்தியாயங்களுக்காகவும் அவர் (என்) பாராட்டுதலுக்குரியவர்.

எனக்குத்தெரிந்த வரையில் ஜெயமோகன் நினைத்தபோதெல்லாம் இவரைப்பற்றி எழுதி வாருவதில்லை. உ.த.எ. என்று அடைமொழி கொடுத்து அவரைப் பற்றி எழுதி தான் லைம்லைட்டுக்கு வருவதில் சாருவுக்கு பாரிஸ் கார்னர் சரக்குகளைவிட அதிகமான போதை வரலாம்.

நமக்குத்தான் சகிக்கவில்லை.
Follow @ersenthilkumar