Sunday, November 23, 2008

100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,

வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.

பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.

நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.

அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.

உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...

அன்புடன் நித்யகுமாரன்

Friday, September 26, 2008

காதலில் விழுந்தேன் - திரைப்பார்வை


புத்தம்புதிய இயக்குநர், புத்தம்புதிய தயாரிப்புக்குழு, பிரபலமாகாத நாயகன் (பாய்ஸ் படத்தில் முள்ளம்பன்றித் தலையோடு வருவாரே அவர்தான்) என்று தயாரிக்கத் துவங்கியபோது இப்படம் பெரிதாக தனக்கான பிம்பம் ஏதுமின்றி வளரத்துவங்கியது. ஒலித்தட்டு வெளியானது. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பத்துவங்கியது “நாக்க முக்க” பாடல். இந்த பாட்டு எந்த படம் என்பதே கேள்வியானது. படம் பார்த்து பிடித்துப் போனதால் சன் குழுமம் இப்படத்தை வாங்கி வெளியிடத் தயாரானது. பிறகு படத்தின் வீச்சின் நிலையே முற்றிலுமாக மாறி விட்டது. ரசிகர்களையெல்லாம் தியேட்டருக்கு வரவழைக்கும் சக்தியோடு அதிரடிப் பாடல் தயார். அசுரத்தனமான விளம்பர விளிம்பில் நிற்கும் சன் குழுமத்தால் படத்திற்கு அதிரடி விளம்பரங்கள் தயார். அதிகபட்ச தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயார். புதுமுக நாயகன், நாயகி, இயக்குநர் கூட்டணிக்கு இப்படிப்பட்ட opening கிடைப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்த வாய்ப்பை புதுமுக இயக்குநர் P.V. பிரசாத் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், நம்மை “அட...” போட வைக்கிறார். களேபரப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.


பணக்கார நாயகி - ஏழை நாயகன் - விபத்தில் பிறக்கும் அன்பு - பரிமளிக்கும் காதல் - என அரதப் பழசான பாதையிலேயே முன்பாதி படம் நகர்ந்தாலும், மெலடிகளால் நிறைந்து வழிந்தாலும் - “நாக்க முக்க” பாடலும், சுனேனாவின் இயல்பாய் பரிமளிக்கும் அழகும், இயக்குநரின் சின்னச்சின்ன அழகிய ஐடியாக்களும் படத்தை தெம்பாய் தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பிறகு நாம் எதிர்பாராத திருப்பம் வந்தவுடன் படத்தில் அசுர வேகம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்த டெம்போ கடைசி வரை தடம்பிறளாமல் கொண்டு சென்றது இயக்குநரின் திறன். படத்தின் கதையினைச் சொல்லி உங்களின் ஆர்வத்தைக் குறைக்க விரும்பவில்லை. வெண்திரையில் பாருங்கள்.


சபா நாயகன். மீரா நாயகி. காதலைச் சொல்லத் தயங்கும் முரளி போல் இருக்கும் நாயகனுக்கு நாயகியே தரும் வழி அற்புதம். தன் கவலையை மறக்க மீரா சொல்லும் பலூன் பாடம் அழகு. தன்னுடைய கல்லூரியிலிருந்து விலகி சபாவின் கல்லூரிக்கு வரும் மீரா, “அம்மா அனுப்பினாங்க” என்றபடி சபாவின் கை கோர்க்கும் இடம் படத்தின் அதியற்புதமான கவிதை.


தன் விழிகளால் மீராவாக வரும் சுனேனா ஸ்கோர் செய்கிறார். படத்தின் இன்னொரு ஆச்சரியம் நகுல். சபாவாக வாழ்ந்திருக்கிறார். முகமூடி அணிந்து பேருந்தில் இடும் சண்டையில் காட்டும் வேகத்திலாகட்டும், “நாக்க முக்க” பாடலின் அதிரடி நடனத்திலாகட்டும், இடைவேளைக்குப் பிந்தைய வனாந்திரப் பகுதியில் வரும் ஆக்ரோஷமான உக்கிரப் பார்வையோடு அரற்றும் நடிப்பிலாகட்டும் - நம்மை கவர்கிறார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நம்மை வெகுவாய் கவர்ந்த ஜெய்யை போன்று இவரும் தொடர்ந்து முன்னேற பலமான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. சம்பத்குமார், லிவிங்ஸ்டன் என்று அனுபவ நடிகர்களின் பங்கும் படத்திற்கு பலம்.


“நாக்க முக்க” மட்டுமல்லாமல் படத்தின் மற்ற அழகிய மெலடிகளிலும் நம்மை மெய்மறக்கச் செய்யும் விஜய் ஆண்டனி படத்தின் அடுத்த ஹீரோ. படத்தின் முன்பாதியில் நிறைந்து வழியும் மென்மை மெட்டுக்களிலும் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் இசையமைப்பாளர். வனாந்திரத்தை பயத்தோடு நாம் நோக்கும் வண்ணம் தன் திறனை வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரும் கவனிக்கப்படவேண்டியவர். மற்ற தொழில்நுட்பத் துறைகளும் படத்தின் கதையோட்டத்திலிருந்து நம்மை திசைதிருப்பா வண்ணம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.


புதிய இயக்குநர் P.V. பிரசாத்தின் பங்கு படமெங்கும் தெரிகிறது. தண்ணீர் குடிக்காமல் குடிக்கும் காதல் மான்களின் கதையில் ஓர் அழகிய க்ளைமாக்ஸை இணைத்திருக்கும் அந்த குணா பாணி வசன பாடல் மிக்க அழகு. ஒரே ப்ரேமில் லாங் ஷாட்டில் ஒரு சண்டைக்காட்சியை படைத்திருக்கும் விதம் அழகு. கேமராவின் சின்னச்சின்ன சிணுங்கல்களிலும், பிண்னணி இசையிலும் அந்த காட்சி ஜொலிக்கிறது. ஒரு நிஜக்கதையின் inspiration ல் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். உலகப்பட DVDக்களில் கதைதேடும் இந்தக்காலத்தில் Discovery Channel ல் கதை கண்டுபிடித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
“காதலில் விழுந்தேன்” படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Friday, September 12, 2008

DVDயில் பார்த்த கொரிய மற்றும் hollywood படங்கள்




கல்யாண வேலையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் அண்ணன் கனரகதாங்கி சேகர் (Jackiesekar) அவர்களின் தூண்டுதலி்ன் பேரில் சில உலகத் திரைப்படங்களைப் பார்த்தேன். முன்னமே முருகனடிமை அவர்கள் அறிமுகப்படுத்தினாலும் சேகரிடமிருந்து DVD க்கள் வாங்கி பார்த்தபின் உலகத் திரைப்படங்களின் மீது பெரிய போதையே உண்டானது. Childrens of Heaven ஐ அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதிர்ந்து போனேன். எவ்வளவு நல்ல படங்களையெல்லாம் நாம் இத்தனைநாள் தவறவிட்டிருக்கிறோம் என்று அப்போதுதான் தோன்றியது.

இந்தமாதிரி படங்களெல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு Parrys corner ல் கிடைக்கும் இடம், மொபைல் எண், இத்யாதி, இத்யாதி என்று எல்லா தகவலும் சொன்ன சேகருக்கு எல்லாம் வல்ல அருளால் முதலில் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கொரியமொழி திரைப்படங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. Dirty Carnival என்கிற ஒரு Action படம் பார்த்தேன். காதல், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் கலந்த ஒரு Gangster கதை. “கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்” என்கிற நம்ம ஊர் கதைதான். அதைச் சொல்லியிருந்தவிதம் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன். இன்னுமிரண்டு கொரிய மொழி படங்கள் வாங்கி வந்திருக்கிறேன். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் எழுதுகிறேன்.

Hollywood படங்களும் பார்க்க வாய்த்தது. Pursuit of Happyness மனதை கரைய வைத்தது. அடிதடி மசாலா மனிதனாக நினைத்திருந்த Will smith ன் முகம் இந்த படம் பார்த்தபின் மறைந்து போனது. அழுகையும், பரவசமும், அளவிட முடியா சந்தோஷமும் இணைந்து, அந்த உணர்வை வெளிக்காட்ட முயற்சிக்கும் அந்த இறுதிக் காட்சியில் Will Smith, excels. நம் கமலின் நினைப்பு வந்தது.

Vantage Point ம் இப்போதுதான் பார்த்தேன். 23 நிமிடங்களும் திரும்ப திரும்ப பின்னோக்கி பயணிக்கும் அந்த திரைக்கதை உத்தி அபாரம். பார்ப்பவருக்கு போரடித்துவிடும் அபாயம் தொக்கிநிற்கும் அந்த உத்தி, காட்சிகளின் கோர்வையினால் வென்றுவிடுகிறது. சின்ன சின்ன flash back குகள் முடிந்தபின் காட்சிகள் எடுக்கும் வேகம் பிரமாதம். தவற விட்டவங்க திரும்ப பாருங்களேன்.

Saturday, August 30, 2008

குருவி குருவி குருவி அடிச்சா......!


சமீபத்தில் சத்யத்தில் பார்த்த காமெடி (விளம்பர) படம் (கிளிக்கி பெருசா பாத்து என்ஜாய் பண்ணுங்கோ...)
படம் சொல்லும் நீதி:
1. உங்க கைல காசு இருந்தா இன்னாவேணா பண்ணலாம்...
2. வெரசா போயி நெறையா காசு சம்பாரிங்கோ...

Thursday, August 7, 2008

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்...” - ஓர் அழகிய பதிவு


சமீபத்திய பாடல்களில் இந்த பாடல் வசீகரித்ததைப் போல வேறெந்த பாடலும் என்னை வசீகரிக்கவில்லை. காரணங்கள் பற்பல.


ஒலியும் ஒளியுமாக நம்மை அடையும் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஏதேனும் ஒரு தன்மையே அதிகப்படியான கவனத்தோடு பதிவு செய்யப்படுகிறது. சில பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு திரையில் பார்க்கும்போது ஒருவித அந்நியத்தன்மையைக் கூட உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பாடலுக்கான மிகச்சிறந்த உதாரணம் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற, “கண்ணோடு காண்பதெல்லாம்..” என்ற பாடல். நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அந்த பாடலை ரசித்து உணர்ந்துவிட்டு திரையில் பார்த்தபின் மிகவும் வருத்தமடைந்தேன்.


சுப்ரமணியபுரத்தில் அமைந்த இந்த பாடலில் இசையும் காட்சியமைப்புகளும் இரண்டறக்கலந்து ஓர் அற்புதமான கலவையாகி நம் மனதைக் கொள்ளையடிக்கிறது. கண்களால் கதைபேசிக் கசிந்துருகும் காதல்தான் களம். பல வீரர்கள் செஞ்சுரி அடித்த அதே களத்தில் இயக்குநர் சசிக்குமார் மிகவும் சாதாரணமாக கலக்கியிருக்கிறார். மிகவும் இயல்பானவர்களாக வரும் நாயகனும் நாயகியும் தனி அழகு. சுவாதியின் தாவணிக்கட்டும் எளிமையான மேக்கப்பும் வெகுசிறப்பு. அவருடைய கண்களே இந்த பாடலின் மிகப்பெரிய பலம்.


மெலிதான இசையுடன் தொடங்கி, தொடங்கிய கோட்டுக்குள்ளேயே பயணித்து அங்கங்கு அழகை தூவிச்செல்லும் இசை அற்புதம். ஜேம்ஸ் வசந்தனுக்கு பிரத்யேகமான பூங்கொத்துகள். மிகவும் எளிதான வரிகளில் காதலின் தகிப்பை வெளிப்படுத்திச் செல்லும் தாமரையின் பேனாவுக்கும் ஒரு சபாஷ். தனித்துத்தெரியாத ஒளிப்பதிவும், மிகவும் நாசூக்கான எடிட்டிங்கும் இந்த பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்கின்றன.


காதலியை impress செய்வதற்காக காதலன் செய்யும் துடிப்பான, துறுதுறுப்பான செயல்களும் அதன் எதிர்வினைகளின் முரண்களும் அழகாக பதிவு செய்யப்படுகின்றன. “தோற்றவரே வென்றவர்...” என்று சொல்கிற வள்ளுவத்தைப் போல, தன் செயல்களில் இடரிவிழுந்தாலும், அதன் காரணமாகவே தன் காதலியின் உள்ளத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கிறான் காதலன். இப்பாடலின் வரிகளை இந்த பதிவில் கண்டும், கேட்டும் மகிழுங்கள்.

நீண்ட நாட்களுக்கு மனதில் நின்று தாலாட்டும் அழகிய திரைப்பாடலைத் தந்த சுப்ரமணியபுரம் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பின்குறிப்பு : நினைவுப் புதையல்களிலிருந்து காயத்ரியையும், அமராவதியையும் மீட்டுத்தந்து ஞாபகப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு நன்றியை நவில்கிறேன்.

Follow @ersenthilkumar