Friday, January 23, 2009

“இந்த ஏழு நாட்கள்“

இல்லாளின் ஒரு வாரப் பிரிவும் இல்லாமலிருத்தலும்




நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன

தளும்புகின்றன...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்

இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...

என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, January 22, 2009

”எங்க ராஜ்மோகன் சார்”





ராஜ்மோகன் சாரைப் பத்தி நான் முதன் முதலா கேள்விப்பட்ட விஷயமே என்னை பயங்கொள்ளச் செய்தது எனலாம். அப்போது நான் திருச்சியில் திரு. சண்முகம் Architect அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக நான் ஸ்ரீரங்கம் , ராகவேந்திராபுரம் “"Suriya Towers Phase I " project டிற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக அறிந்தவுடன் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னார்கள் : “அவரு கிட்ட போறியா... நல்லா மாட்டப் போறடி...”.




ராஜ்மோகன் சார் ஒரு building promoter. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், ஹோலிகிராஸ் college அருகே அமைந்திருக்கிற Suriya Towers என்கிற commercial complex அவரோடதுதான் (with his partners). அவருடைய அடுத்த Residential project ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருந்தது. அந்த project டிற்கான site engineer ஆக என்னை நியமிக்க எங்கள் Architect உத்தேசித்திருந்தார். அப்போது Engineering முடித்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. சற்று raw வாக இருந்தேன் என்று சொல்லலாம். என்னை பண்படுத்தியவர் அவரென்றால் அது மிகையில்லை.




அவர் ஒரு terror என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எழ வாய்ப்பில்லை. “ரௌத்திரம் பழகு” என்று பாரதி சொல்வதை நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரிடம் பலமுறை நானும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். பலமுறை சொல்லுவார் : “ இங்கேயிருந்து வெளிய போனா, முழுசா தயாராகிப் போயிடனும்..”. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதை முழுமையாக அலசி ஆராய்ந்து முடிக்கும் வரை அவர் கைவிடமாட்டார். தன்னைப் பார்த்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம்.




Weekly payment வாங்குவதற்கு மட்டுமே அவரைப் பார்த்தால் போதுமென்று மற்ற நாட்களில் அவரை நெருங்கவே பயந்து ஓடும் contractor களை பார்த்திருக்கிறேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வந்தால் அவரைப் பார்க்க மனதில் தனி மரியாதையே வரும். அவருடைய கோபத்தின் அளவு எவ்வளவு என்பதை ஒருமுறை நான் நேரில் கண்டேன். ஏதோ தவறு செய்துவிட்டதற்காக site watchman ஒருமுறை அவரிடம் அடி வாங்கியதை இன்றும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.




அதே போல், அடுத்தவர்களுக்கு ஏதெனும் செய்யவேண்டுமென்று நினைத்து விட்டால், மனிதர் சளைக்காமல் செய்வார். உண்மையாக உழைப்பதாக அவர் உணர்ந்தால் போதும் மனிதர் தாங்குவார். ஒருமுறை கட்டுக்கம்பி காலில் குத்தி இரத்தம் வழிய நான் வந்தபோது Rs.100/- பணம் கொடுத்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னார். “இதெல்லாம் ஒன்னுமில்லை சார் பாத்துக்கலாம் ” என்று சொல்லியும் விடவில்லை. அவருடைய partner சரவணன் அவர்களின் சிறுவயது பெண்குழந்தை ஒரு நாள் காலையில் 'happy birthday' என்று சொல்லி chocolate கொண்டு வந்தபோது, அடடா என்று பதறியபடி தன் சட்டைப் பைக்குள் கை விட்டு அப்படியே கையில் வந்த ரூபாய் நோட்டுகள் அத்தனையும் கொடுத்து வாழ்த்தினார்.




ஆன்மிகத்தில் மிகப்பெரும் நாட்டம் கொண்டவர் அவர். அவர் ஒரு சீரிய ஷீரடி சாய்பாபா பக்தர். ஜோதிடம் பார்க்கத் தெரியும். அவருடைய இஸ்லாம் நண்பர்களுக்குக் கூட ஜாதகம் எழுதித்தந்ததாக பிற்பாடு கேள்விப் பட்டேன். ”உங்க ஜாதகப் படி நீங்கள் எங்கும் வேலைபார்க்கும் வாய்ப்பு பிற்காலத்தில் இல்லை. தனியாகத் தொழில் செய்யத்தான் வாய்ப்புண்டு ” என்று அப்போதே சொன்னார். L&T யில் பணிபுரியும் வரையிலும் எனக்கு அந்த நம்பிக்கை பெரிதாக வரவில்லை. ஆனால் இன்று நான் தனியாக தொழில் செய்கிறேன். அந்த எண்ணங்கள் மனதில் வளர அன்று நல்லதொரு விதையை ஊன்றி அவர்தான் வளர்த்தார் எனலாம்.




ஆன்மிக நாட்டமும் மிகப் பெரிதாக என்னில் இருந்ததில்லை. முருகனையும் பிள்ளையாரையும், திருவெள்ளரை பெருமாளையும் கும்பிடுவதும் அப்பாவுக்காக செய்யும் காரியமாகத்தான் இருந்தது. ஷீரடி சாய்பாபாவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்து, “இவரைத்தான் நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டும்” என்று குருஸ்தானத்தில் இருந்து வழிகாட்டியவரும் அவர்தான். பிற்பாடுதான் நான் செல்லும் பலவிடங்களில் சாய்பாபா அவர்களின் படமும் தொடர்ந்து வந்ததை நான் அறிந்துகொண்டேன். “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றி அடிக்கடி கூறுவார். “அவனருளாளே அவன் தாள் பணிந்து” என்று வரிகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.




ராஜ்மோகன் சார் பெரிதாக ஒன்றும் படிக்க வில்லை. சைக்கிள் கடையில் வேலைபார்த்தது முதல் பல விஷயங்களை என்னிடம் அவர் பகிர்ந்ததுண்டு. “இதை எவனும் சொல்லிக் கொடுக்க மாட்டான் ” என்று ஆரம்பித்தே பல விஷயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார். வியாபாரத்தில் சூழல் சரியில்லை என்றால் நான் அவரிடம் தான் உடனடியாக செல்வேன். திருச்சிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க நான் தவறுவதில்லை. என்னுடைய திருமணத்திற்கு தம்பதி சமேதமாக வந்து வாழ்த்தினார்.




அவருடைய சம்பந்தி வீட்டிற்கு சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது அவரை நேரில் சென்று (வாடகைக்) காரில் அழைத்து வந்து, மேடவாக்கத்தில் உள்ள என்னுடைய project site ஐ பெருமிதத்துடன் காட்டினேன். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பாபா கோயிலுக்கு சென்றுவந்தோம். அவருடன் நான் பாபா கோயிலுக்குச் சென்றது அந்த ஒருமுறைதான். அந்த தருணம் மிகவும் திவ்யமானது. என்னைப் பற்றி தன் துணைவியாரிடம், “சின்னப்பையன் நல்லா பொறுப்பா பன்றான்” என்று சொன்னதாக பிற்பாடு கேள்விப்பட்டேன். மிக்க சந்தோஷமாகவிருந்தது.




கடந்த மாதத்தில் சென்னையில் உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் தவறாது சென்று வந்தேன். ஒரு நாள் காலை அங்கு பயணித்திருக்கும் போது வந்திருந்த call ஒன்றை நான் தவறவிட்டேன். Woodlands தியேட்டர் சென்று அடைந்தவுடன்தான் missed call ல் கண்டேன். குறித்து வைக்காத திருச்சி landline எண்ணிலிருந்து இரண்டு முறை call வந்திருந்தது. யாராகவிருக்கும் என்றெண்ணி தொலைபேசியபோது ராஜ்மோகன் சாரின் துணைவியார் பேசினார். “உங்க ராஜ்மோகன் சார் நம்மள விட்டு போய்ட்டாருய்யா... வெந்து சாம்பலா போய்ட்டாருய்யா...” என்று துவங்கி ஓலமிட்ட அந்த குரலை கேட்கும் சக்தி எனக்கில்லை. ஆளரவம் எண்ணாமல் நான் ஓங்கிப் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினேன். Car parking ஐ ஒட்டிய சுவரில் முட்டி சுற்றுப் புறம் மறந்து அழத் துவங்கினேன். அப்பக்கம் அந்நேரம் தம்மடிக்க வந்த இயக்குநர் ஸ்டான்லி உள்ளிட்ட இருவர் என்னை வித்தியாசமாக பார்த்து நகர்ந்தனர்.




இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எங்க சார் heart attack ஆல் இறந்து போயிருந்தார். நான் பணிபுரிந்த அலுவலக நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள முடியாது போனதாக பின்பு வருத்தப்பட்டனர். என்னுடைய மொபைல் நம்பரை அவருடைய மொபைல் போனில் இருந்து கண்டெடுத்து பின்பு எனக்கு போன் பண்ணியிருக்கிறார்கள் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
சுற்றம் மறந்து நான் அழுதது எனக்கு நினைவு தெரிந்து அன்றுதான். மிகப்பெரிய சூன்யம் என்னை நெருங்கி அரவணைத்து உலுக்கத் தொடங்கியது. அந்த நிகழ்வை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்து என்னை பாதிக்கும் அளவு எந்த பெரிய மரணமும் இது வரை நிகழவில்லை. இதை ஜீரணிக்க மிகவும் கஷ்டப் பட வேண்டியிருந்தது.




பாபா கோயிலுக்கு போவதைக்கூட நிறுத்திவிட எண்ணினேன். என்னுடைய பிரத்யேக முயற்சியில்லாமலேயே அதே ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு 2009 ஜனவரி 1 அன்று செல்ல நேரிட்டது. “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. பாபாவிடம் வேண்டிக்கொள்ள ஆயிரம் இருந்தாலும் ராஜ்மோகன் சாரின் நினைவுகள் மட்டுமே சூழ்ந்து வந்தன. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி வந்தேன்.




புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மொபைல் போனில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் SMS அனுப்பிக் கொண்டே வருகையில் Rajmohan sir என்கிற அவருடைய பெயர் வந்து நிற்கிறது. விரல்கள் நடுங்க அடுத்த பெயரை தேடிச் செல்கிறேன். மொபைலில் இருந்து அவருடைய எண்ணை என்னால் நிச்சயமாக அழிக்கவே முடியாது என்பது மட்டும் நிதர்சனம்.

Saturday, January 10, 2009

வில்லு விஜய் - லொள்ளு ஜோக்ஸ்


சமீப காலமாக மொபைல் Inbox ல் வந்து குவிகின்றன,  விஜய் ஜோக்குகள்.  என் மச்சான் ஒருவர் தீவிர அஜீத் ரசிகர்.  அவர் நட்பு வட்டாரத்தில் புழங்கும் SMS களை எல்லாம் எனக்கு forward செய்து புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.  Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள்,  ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை.  விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்),  இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

!  !  !  !  !  !  !
சோக்கு 1 :

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்,  ஏய் மாமா நீ கேளேன்,  ஏய் மாப்பு நீ கேளேன்,  நீ கேளேன்,  நீ கேளேன்....   

டேய் எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

“வில்லு”  பாட்டு ரிலீஸாகியிருக்குது...

!  !  !  !  !  !  !
சோக்கு 2 :

“ சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast moving.  நீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?”

“ அப்படிங்களா...!  என்ன விலைங்க?”

“ just ஒரு லட்சம்தாங்க...”

“ஏங்க இவளோ விலை...?”

“நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic ஆ channel மாத்திடும்..”

!  !  !  !  !  !  !
சோக்கு 3 :

“சரோஜா”  பிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

2002  -  புதிய கீதை

2003  -  வசீகரா

2004  -  உதயா

2005  -  சச்சின்

2006  -  ஆதி

2007  -  அழகிய தமிழ் மகன்

2008  -  குருவி

இவ்வளவு தாங்கிட்டோம்....

2009  -  வில்லு       ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

!  !  !  !  !  !  !
சோக்கு 4 :

(சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    “  நச்சு நச்சுங்கிராங்கப்பா....  “அழகிய தமிழ் மகன்” னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  “குருவி” னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப பொங்கலுக்கு “வில்லு”னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா...”

அருகிலிருக்கும் விஜய்  :  “  அண்ணா...  போன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா...”

கவுண்டமணி :  “  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...

!  !  !  !  !  !  !
Just enjoy...   

திரையில் “வில்லு” படம் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும்.

வலை நண்பர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

Thursday, January 8, 2009

விஜய் டிவியிடமிருந்து காப்பியடிக்கும் சன் மற்றும் கலைஞர்


விஜய் டிவியின் தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள் இன்றும் அந்த தொலைக்காட்சிக்கு பெயர் பெற்றுத்தருபவையே. ஆரம்பத்தில் வெற்றிகரமாக வெளிவந்த “நையாண்டி தர்பார்” நிகழ்ச்சியின் வெற்றி குறிப்பிடத்தக்கது. யுகிசேதுவின் அறிவார்ந்த சிந்தனையும் அவரின் மிகப்பெரிய பலமான டைமிங் சென்சும் அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையென்றால், அந்த நிகழ்ச்சியை பரிட்சித்து பார்க்கும் தைரியம் பெற்றமைக்காக நாம் விஜய் தொலைக்காட்சியை பாராட்டலாம்.

அவர்களுடைய ஸ்டார் குரூப்பில் மிகப் பெரும் வெற்றியடைந்த “The great laughter challenge" நிகழ்ச்சியை தமிழில் “கலக்கப்போவது யாரு?” என கொண்டுவந்தார்கள் விஜய் டிவியினர். ஹிந்தியில் நவ்ஜோத் சித்துவும் மற்றொரு காமெடி நடிகரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், இங்கே தமிழில் நம்ம ரமேஷ் மற்றும் ஒரு காமெடி நடிகரும் (யாரென்று நினைவில்லை, தெரிந்தால் சொல்லுங்களேன்) தொகுத்து வழங்கினர். விஜய் டிவி நிர்வாகத்திற்கும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் ஏதோ பிரச்சனை வந்தபின், சன் தொழிலாளர்களை கலைஞர் தொலைக்காட்சி வளைத்தது போல, சன் டிவி அந்த டீமையே வளைத்துப்போட்டு “அசத்தப்போவது யாரு?” என்று அளப்பரையை ஆரம்பித்தது. அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.


பிற்பாடு இதே நிகழ்ச்சியின் பல பிரதிகள் நாம் திருப்பும் டிவி தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. பிற்பாடு விஜய் டிவி நிகழ்ச்சியில் அப்போது அதிமுகவில் இருந்த S V சேகர் கலந்து கொண்டு வாராவாரம் சன் டிவியை கலாய்த்துக் கொண்டேயிருந்தார். இப்போது S V சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே சந்தேகம் வருகிறதாம். ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. உலகத் திரைப்பட விழாவில் நடந்த ஒரு press meet ல் அவரே சொன்ன வாசகம்தான் இது.


இதே போலத்தான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியும்... முதன்முதலில் விஜய் டிவியில் வந்தபோது (அதாவது சீசன் 1 என்று வைத்துக்கொள்ளுங்கள்) அந்த நிகழ்ச்சி மிகப் பெரும் கவனிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. இதைக்கண்ட சன் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு பிரதியையும் ஏற்படுத்தியது. பிற்பாடு வந்த கலைஞர் தொலைக்காட்சி டான்ஸ் மாஸ்டர் கலாவையே அமுக்கி “மானாட மயிலாட”ச் செய்தது. இப்போது இந்த ரெகார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை எந்த சானலில் காட்டினாலும் சகிக்கவேயில்லை.


முன்பு சன்டிவியில் சமக தலைவர் சரத்குமாரு நடத்திய “கோடீஸ்வரனை” நக்கலடித்து, ஜெயா டிவியில் வந்தது “பிச்சாதிபதி”. அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சி இந்த போட்டிகளிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை எனலாம். குஷ்பு வின் “ஜாக்பாட்” நிகழ்ச்சியே போதுமென்றிருக்கிறார்களோ என்னவோ...! அந்த நிகழ்ச்சிக்காக வாராவாரம் புதுப்புது ஜாக்கெட் களுடன் குஷ்பு வருவதாகக் கேள்வி.


தற்போது விஜய் டிவியில் வரும் உருப்படியான சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற சேனல்களிடமிருந்து போட்டியே கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் : “நடந்தது என்ன?”, “நீயா நானா”, “இப்படிக்கு ரோஸ்”, “காபி வித் அனு”, “ கணா காணும் காலங்கள்”, “லொள்ளுசபா” இப்படி நீள்கின்றன....








அதுவும் லொள்ளுசபாவின் “பேக்கரி” (போக்கிரியின் காமெடி வெர்ஷன்), இன்றும் என்னுடைய பேவரிட். சந்தானத்திற்குப் பிறகு ஜீவா அழகாக அந்த இடத்தை நிரப்பினார் எனலாம். ஆனால் இப்போது அப்படி ஒரு ஆள் கிடைக்காமல் அந்த நிகழ்ச்சி தடுமாறினாலும், அதன் பலமான script இன்றும் பட்டையக் கிளப்பும் மொக்கைக் காமெடிகளைக் கொண்டு கலக்கி வருகிறது.





“காபி வித் அனு”, “இப்படிக்கு ரோஸ்” போன்ற வித்தியாசமான சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று ஒன்றுபடாமல் தனித்தன்மையுடன் விளங்குவது மிகச்சிறப்பு. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் காம்பியரர் ஒரு திருநங்கை (இந்த வார்த்தை வலை இயங்குதளத்தில் பரவலாக வரக் காரணமானவர் லிவிங் ஸ்மைல் வித்யா தான்...), என்பது மட்டும் வித்தியாசமல்ல. அவர்கள் கையாளும் பிரச்சனைகளும் அப்படித்தான். ஒரு திருநங்கையுடன் மக்கள் சாதாரணமாக பேசுவதே வித்தியாசமாக சிந்திக்கப்பட்ட சமுதாயத்தில், மக்கள் தங்கள் அந்தரங்க பிரச்சனைகளை சொல்லி அழும் ஒரு புகலிடமாக மாற்றியது மிகப் பெரிய விஷயம். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை சத்தமில்லாமல் செய்த அந்த நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.







“காபி வித் அனு” ஒரு கொண்டாட்டம் என்று சொல்லலாம். அனுஹாசனின் நேர்மையான அணுகுமுறையும், இயல்பான பேச்சும், அழகு சிரிப்பும் (கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?), பேட்டியை எடுத்துச்செல்லும் பாங்கும் அசாத்தியமானது. இந்த பாணியில் சன்டிவியில் கௌதமி ஆரம்பித்த ஒரு நிகழ்ச்சி சுவடு தெரியாமல் காணாமல் போனதாக ஞாபகம். கௌதமியின் நிகழ்ச்சியில் முதல் guest ஆக வந்தவர் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சியும் அந்த backdrop ம் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கிறது.









“நடந்தது என்ன?” மற்றும் “நீயா? நானா?” போன்ற நிகழ்ச்சிகளின் வழியே ஒரு தொலைத்தொடர்பு சாதனம் தான் செய்யவேண்டிய பணியை சிறப்பாக செய்கிறது எனலாம். Infotainment என்ற பதத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்வேன். இந்த நிகழ்ச்சிகளின் காம்பியரர் கோபிநாத் அவர்களின் குரல் வளமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் மிக்க அழகு. நிகழ்வை நடத்திச் செல்லும் அவருடைய ஆளுமைத்தன்மையும், மிகவும் சீரிய editing ம் இந்த நிகழ்ச்சிகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்திக் காண்பிக்கின்றன.


அதிகாரத்தையும், பண பலத்தையும் கொண்டு சினிமாக்களை வாங்கிக் குவிக்கும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள், அதே பலங்களைக் கொண்டு மிகவும் தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கலாமே...! ஊதுற சங்கை ஊதி வைப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு.


விஜய் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Wednesday, January 7, 2009

10 பந்துகளே மீதமிருக்கையில் ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி


இன்று நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனின்” மனோபாவத்தோடு களமிறங்கி, முடிவைப் பற்றி கலங்காமல் “பறவையின் கண்ணை மட்டுமே” கண்ட அர்ஜூனனைப் போல், வெற்றியை மட்டுமே எண்ணி செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.


பத்து பந்துகளே மீதமிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டத்தை டிராவில் முடிக்க வாய்ப்பு இருந்தநிலையில், இப்படி தென்னாப்பிரிக்கா வாய்ப்பை தவறவிடும் என நினைக்கவில்லை. ஆஸ்திரேலியா மண்ணைக்கவ்வி விடும் என்று நினைத்திருந்த வேளையில், அவர்களின் போர்க்குணம் வெளிப்பட்டிருக்கிறது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் செக் இது.


முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும் அதனை தக்கவைக்க பாடுபடும் போராட்டமே மிகப்பெரியது என்பது உண்மை. ஆஸ்திரேலிய அணி அந்த போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆர்ப்பரித்து வரும். நம்முடைய அணி இங்கு கண்ட வெற்றிகளிலே தன்னைத் தொலைத்துவிடாமல், புது உத்வேகத்தோடு செயல்பட்டு ஆஸ்திரேலியாவிடமிருந்தும், தென்னாப்பிரிக்காவிடமிருந்தும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை நிச்சயம் பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.


திமுக மற்றும் அதிமுகவின் பணபலம், மீடியா பலம், கட்சி சின்ன பலம் - உட்பட பல பலங்களுக்கிடையே பலப்பரிட்சை நடத்திவரும் தேமுதிக போல நம் இந்திய அணி போராட வேண்டிய சூழலில் உள்ளது. விட்டுத்தர ஏதுமில்லை என்றாலும் எட்டிப்பறிக்க ஆயிரம் உள்ளது என்பதை மனதில் கொண்டு போராட வேண்டியது கேப்டனின் (தோனி) கடமை.


நம்ம சின்னம் முரசு இல்லிங்க... வெற்றிக்கோப்பைதானுங்க...
Follow @ersenthilkumar