Wednesday, July 9, 2008

தலைப்படாததால் தலைப்பில்லை


நீ
இயல்பாய் பார்ப்பதாய்
நினைத்து
எத்தனை முறை
என்னை நானே
ஏமாற்றிக்கொண்டேன்...

Tuesday, July 8, 2008

“சுப்ரமணியபுரம்” - தவறவிட வேண்டாம்

இனிய நண்பர்களுக்கு வணக்கம். சற்றே இடைவெளி விழுந்துவிட்டது. இனி சுப்ரமணியபுரத்திற்கு போகலாம்.





படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.

* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.

* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த திரைப்படம். மிகுந்த துணிவுடனும், சிரத்தையுடனும், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் வெளிவந்திருக்கிறது.

* அழகர், பரமு, காசி, துளசி, துளசியின் அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா - என ஒவ்வொரு பாத்திரங்களின் படைப்பும், நடிகர்கள் தேர்வும், அவர்களின் சரியான வெளிப்பாடும் அற்புதமாக ஒன்றிணைந்து, கதாசிரியனின் எழுத்து அற்புதமாக திரையி்ல் விரிகிறது.

* கவனத்தை சிதறடிக்காத ஒளிப்பதிவும், நம்மை எண்பதுகளுக்கே அழைத்துப் போகும் கலை வடிவமைப்புகளும், படத்தின் கோடு தாண்டாமல் பயணிக்கும் இசையும் இந்த திரைப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன. திரைப்பட அறிவியல் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால் மற்ற துறைகளைப்பற்றி எழுதத் தெரியவில்லை.

* நாயகியின் “வெட்கம் கலந்த ஆசையில் விரியும்” கண்களும், நாயகனின் “காதல் கலந்த வெள்ளந்திச்” சிரிப்பும் முதல் பாதியில் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தடம் புரண்டு படபடவென பயணிக்கும் திரைக்கதையும், அனுமானிக்கவியலாதத் திருப்பங்களும் நம்மை ஆட்படுத்திக் கொண்டுவிடுகின்றன. அழகர், பரமு மற்றும் காசியின் ஊனமான நண்பன் மருத்துவமனை அறையினின்று வெளி்வந்து நடந்து போகும் காட்சியின் நீளம் முழுவதும் இருக்கையினின்று எழ மனம் வராதே போகிறது.

* காதல் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் படங்களின் வரிசையில் இத்திரைப்படம் சேர்கின்றது. நம் கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, மனம் ரீதியாக இயல்பாக வந்து தொலையும் காதலையும் கட்டிக்கொண்டு அழும் போராட்டத்தை இப்படம் அழகாக பதிவு செய்கிறது. காதல் என்கிற உணர்வைத்தாண்டாமல் எந்த மனிதனும் பயணிக்கவே முடியாது. அப்படி உயிர் இயற்கையாகிப்போயிருக்கும் இந்த உணர்வை, நம் சமூக நிலைப்பாடுகளுக்குள், ஒரு கட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிய மனம், எப்படி சமாளிப்பதெனத் தெரியாமல் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது இந்த சமூகத்தின் அன்றாட நிகழ்வு என்பது அப்பட்டமான உண்மை.

* இந்த சூழல் பற்றிய புரிதலை, தெளிவை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்துதருகிறது இந்த திரைப்படம். ஒரு கலை வடிவாக திரைப்படத்தின் முயற்சியும் வெற்றியும் அதுதானே...

நன்றி எண் 1: உடனடியாக படம் பார்க்க வேண்டிய உணர்வை ஏற்படுத்திய நண்பர் குதிரை ஓட்டுனர் சேகரின் இந்த பதிவிற்கு

நன்றி எண் 2 : பதிவு இடாத நாட்களில் என்னை உற்சாகப்படுத்தி, பின்னூட்டம் வழங்கிய நண்பர் நாடோடி இலக்கியன் அவர்களுக்கு.

Follow @ersenthilkumar