Thursday, April 3, 2008

சமீபத்திய பதிவர் சந்திப்பு - என் பார்வையில்...


இனிய நண்பர்களுக்கு...


வணக்கம். சமீபத்திய பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வலையுலக வரலாற்றின் நீண்ட பதிவுகளையெல்லாம் எழுதி அதனால் மட்டுமல்லாமல் மற்ற பல காரணங்களுக்காகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் முருகனடிமை (மாலடிமை என்ற அரசியல் வார்த்தைச்சுவைக்கிணையாக ஒரு வார்த்தை) அவர்கள் என்னை கட்டாயம் வந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அண்ணார் அவர்களின் ஆணைக்கிணங்க கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.


பீச் ஸ்டேஷன் வரை சென்று, வேளச்சேரி தடம் வழியாக திரும்பி வந்து சேப்பாக்கத்திலேயே இறங்கி பாரதியாரை கண்டு வணக்கம் சொல்லிவிட்டு போன் செய்தால் காந்தி சிலைக்கு வரவேண்டுமென்றார்கள். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடக்க வேண்டியதாகிவிட்டது. கடற்கரையாக இருந்ததால் தப்பித்தேன். உலகம் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதன் காரணம் விளங்கியது.


பெயர் மட்டுமே தெரி்ந்த (அவை கூட வலைப்பெயர்கள்தாம், நிஜப்பெயர் அல்ல) நண்பர்களை கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிகழ்வென்பதால் ஆர்வம் மிகுந்திருந்தது.


இனி சந்திப்புத்துளிகள்...


*** உண்மைத்தமிழன் அவர்கள் சுண்டல் வாங்கித்தந்தும் என்னை அறிமுகம் செய்து வைத்தும் நிரம்ப புண்ணியம் கட்டிக்கொண்டார். பிற பதிவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தே கொஞ்சம் சோர்ந்து போனார் என்றுதான் சொல்லவேண்டும். என் வலையை சிலர் வாசித்திருக்கிறார்கள்... பலருக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆயினும் என்ன எழுத வந்து இரண்டு மாதம் தானே ஆகிறது என்று எண்ணி தேற்றிக் கொண்டேன்.


*** நந்தா அவர்களை நண்பராக்கிக் கொண்டேன். எங்கோ திரும்பித்திரும்பி யோசித்துக்கொண்டிருந்தவரை என் பக்கம் திருப்பித்திருப்பி பேசிக்கொண்டிருந்தேன். இது போன்ற வலைப்பதிவர் சந்திப்புகளின் பயன் என்ன என்று கேட்டதற்கு பொட்டிலடித்தாற்போல் அவர் சொன்ன பதிலில் உண்மை இல்லாமலில்லை.


*** ஃபேசியல், பிளீச்சிங் இன்னபிற செய்த முகத்தோடும் (தகவல் உதவி பாலபாரதி), தமிழ்மணம் இலட்சிணை பொறித்த சட்டையோடும் லக்கிலுக் வந்திருந்தார். அவர் ஒரு most wanted person ஆக இருந்தமையால் அவரோடு அளவளாவும் என் அவா நிறைவேறவில்லை. இருப்பினும் என்னை புகைப்படத்தில் பார்த்தபடி செவப்பாக இல்லையென்று சொன்னார். அவருடைய பதிவுகளில் வழிந்தோடும் அங்கதத்திற்கேற்றபடி புன்னகை வழியம் முகத்தோடே காணப்பெற்றார். அவ்வப்போது தனியேயும் பாலபாரதியுடன் இணைந்தும் காணாமல் போய் திரும்பி வந்தார்.


*** பாலபாரதி பிறர் மீது வெளிச்சம் தூவும் மீடியாக்காரராகையால், அந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யங்கள் குறித்தும், சோகங்கள் குறித்தும் தன் உள்ளக்கிடக்கையினை பகிர்ந்து கொண்டார். குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இருந்தார்.


*** ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு 2 நிமிடம் கிடைத்தார். என்னுடைய பதிவில் வந்த ஏதோ ஒரு கவிதையைப்பற்றி பின்னூட்டுகையில் “இது ஹைக்கூ அல்ல பொய்க்கூ” என்று எழுதியிருந்தார். அதை இப்போது சொல்லி அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய அ-கவிதைகள் பற்றி சொன்னார். மேலும் நான் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வாரமலர் கவிதைகளின் அடுத்தபடிதான் என்றும் உங்களின் காலச்சுவடு அளவுக்கு வர முயற்சிப்பதாகவும் சொன்ன போது, எழுத எழுத வந்துவிடும் என்றார்.


*** பைத்தியக்காரன் வரிசையாக வந்து எல்லா பதிவர்களிடமும் “பைத்தியக்காரன், பைத்தியக்காரன்” என்று சொல்லி்க்கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சென்றது, பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவருடைய எழுத்துக்கும் அவர் தோற்றத்துக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. மொக்கை எழுதும் மூன்றாம் தெரு முனுசாமி போல மிக இயல்பாக இருக்கும் இவரின் பதிவுகளை வாசிக்கத் துவங்கினால், நம்மை வேறு தளத்திற்கே அழைத்துச் செல்கிறார். உங்களைப் போன்று எழுதவெல்லாம் எனக்கு வரவே வராது, உங்களுக்கு பெரிய வணக்கம் என்று அவரிடம் உரிமையாகச் சொன்னபோது பயங்கரமாக கூச்சம் கொண்டார். அறிவுஜீவித்தனமாக எந்த போலி தோற்றமும் இல்லாமலிருந்த அவருடைய இயல்பு என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.


*** சந்திப்பு நாயகர்கள் குசும்பனும் அபிஅப்பாவும் சொன்னபடி வந்தது மிகச் சிறப்பம்சம். அபிஅப்பாவின் பேச்சும் எள்ளல் தவழ அமைந்திருந்தது. குசும்பன் மிகவும் பவ்யமாக காணப்பட்டார். கல்யாணம் என்றவுடன் மக்கள் இப்படி ஆகிவிடுகிறார்களோ என்ற சந்தேகம் கூட தோன்றியது. அவர் திருமணத்திற்கு இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


*** மா.சிவக்குமார் அவர்களிடமும் வினையூக்கி அவர்களிடமும் சிறிது உரையாடினேன். அதியமான், சுகுனாதிவாகர் போன்றோர் தீவிர சர்ச்சைகளில் படுதீவிரமாக பேசிக்கொண்டிருந்த படியால் அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ள இயலவி்ல்லை. கடலையூர் செல்வம் மற்றும் ஆதிஷா போன்ற, புதிய பதிவர்களிடமும் சற்று உரையாட வாய்ப்பு கிட்டியது. இவர்தான் டோண்டு ராகவன் என்று பக்கத்தில் இருந்த யாரோ சொல்ல, “போலி டோண்டு” யாரென்று கேட்டுவிட எத்தனித்த நாக்கை கடித்து மடக்கி உள்ளே தள்ளினேன்.


யாரைப்பற்றியேனும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது மறதியினாலேதான் என்று சொல்லிக்கொள்கிறேன். மற்றபடி இந்த சந்திப்பு மனதிற்கு இனியதாக அமைந்திருந்தது. அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.


டெய்ல் பீஸ் : இனி வாராவாரம் வியாழன் தோறும் “காண்டு கஜேந்திரனின் கேள்வி பதில்” பகுதி ஆரம்பம் என்று லக்கிலுக் சொன்னது சும்மா லுலுவாவா இல்லை உண்மையாகவா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளவும்.

டெஸ்ட் மேட்சா இல்ல 20 -20 மேட்சா...


இந்திய அணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் வெகுசிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது...

ஒரே ஒரு வருத்தம்தான். 20-20 மேட்ச் என்று நினைத்து விளையாடிவிட்டார்கள் போல... சரியாக 20 ஓவர்களுக்குள், சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று வென்று வந்துவிட்டதாக, எல்லா பத்திரிக்கை பத்திகளிலும் புகழ்ந்து சொல்லப்பட்ட நம் இந்திய அணி தன் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து... 76 ரன்கள் என்னும் இமாலய எண்ணிக்கையை பெற்றுள்ளது...

இங்கே போய் ஸ்கோர் கார்டு பார்த்து உள்ளம் பூரிப்படையவும்...
எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க...
Follow @ersenthilkumar